22. மடிப்பு (ஒரு பக்கக் கதை)
22. மடிப்பு -ஜூனியர் தேஜ்
(கதிர்ஸ் நவம்பர் -1 - 15 -
2021)
தீபாவளி
சீசன்... கடைக் கட்டவே நடு நிசியாகிவிட்டது. வீட்டுக்குப் பார்த்திபன் வந்தபோது
மணி 1.00. சோர்வுப்போகக் குளித்து, படுக்கையில் சாய்ந்தபோது மணி 2.00.
8 மணிக்கே எழுந்து பல் துலக்கி, டிபன் முடித்து
வேலைக்குப் புறப்படத் தயாராய் வந்தான் பூர்விகாவின் கணவன் பார்த்திபன்.
மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை மூட்டையாகச்
சுருட்டி ஹால் நாற்காலியில் போட்டுவிட்டு “அப்பாடா...” என்ற
உரத்த முணுமுணுப்புடன் தரையில் உட்கார்ந்திருந்தாள் பூர்விகா.
“என்னங்க..?”
“ம்…”
“ரொம்ப சோர்வா இருக்குங்க! ; நின்ன வாக்குல இதுல
இருக்கற நாலஞ்சி சேலைகளை மடிச்சிட்டுப் போங்களேன். ப்ளீஸ்.! மத்ததெல்லாம் நான்
உட்கார்ந்தபடியே மடிச்சிடறேன்...” குரலில் இயலாமை தெரிந்தது.
“எதிர்ல ஆளைக் கண்டுட்டா வேலை விடறியே...? ச்சை...
முடியலடா சாமி...!” முனகியபடி “ நான் அர்ஜெண்ட்டா கிளம்பறேன்” என்று
சொல்லிவிட்டு வாசலுக்கு விரைந்தான் பார்த்திபன்.
கைப்பேசி
சிணுங்கியது. ஆன் செய்தான்.
“பார்த்திபன்! நம் வடக்குத் தெரு புடவை பிராஞ்ச்’ல
தீபாவளிக் கூட்டம் அதிகமாக இருக்கு. இன்னைக்கு நீங்க அங்கே டூட்டி பாருங்க!”
கடை முதலாளியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ;
புடவைப் பிரிவில் ‘சேல்ஸ் கர்ள்ஸ்’ பிரித்துப் பிரித்துப் போடுற நூற்றுக்கணக்கான புடவைகளை நின்ற
வாக்கில் மடித்து மடித்து அடுக்கப் போவதை ’ எண்ணிய பார்த்திபன், வீட்டுக்குள் சென்றான்.
துணிக்குவியலுக்கு அருகிலேயே சோர்ந்து படுத்து கண்
அயர்ந்து மனைவியைப் பார்த்தான். அனைத்துத் துணிகளையும் மடித்தான், வாசல் கதவை ஓசையில்லாமல்
சாத்திவிட்டு டூட்டிக்குக் கிளம்பினான்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment