79.இந்தியாவின் சுதந்திரச் சிற்பி காமராஜர்
79.இந்தியாவின் சுதந்திரச் சிற்பி காமராஜர்
-
ஜூனியர் தேஜ்
ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள்
(காமராஜரின் பிறந்த நாள்)
(கட்டுரை ஆனந்த விகடன் – 15.07.2022)
விருதுப்பட்டியில் 15.07.1903 ல் பிறந்து ‘காமாட்சி ராஜா’ என்று பாட்டியால் பாசத்தோடு அழைக்கப்பட்ட குமாரசாமி-சிவகாமி ஆச்சியின் குமாரர்தான் இந்தியாவின் சுதந்திரச் சிற்பி காமராஜர்.
‘தமிழன் என்று சொல்லடா! தலை
நிமிர்ந்து நில்லடா!!’ என்ற முதல் அரசவைக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை அவர்களின் தமிழ்
உணர்விற்கு, காமராஜ் என்கிற கர்ம யோகியின் வரலாறே இலக்கணம் என்றால் அது
மிகையில்லை.
திண்ணைப் பள்ளியில் நொண்டி வாத்தியார்
என்று அழைக்கப்பட்ட ஆசிரியரிடம் தொடக்கக் கல்வியைத் தொடங்கி, குடும்பச்
சூழ்நிலையால் 6’ம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்ட காமராஜர்தான், பிற்காலத்தில் ‘வீடு
தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்வி, நாடு முற்றிலும் உள்ளன
ஊர்கள் நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி ” என்ற மகாகவி பாரதியாரின் கனவை, (தமிழகத்தின் பட்டி
தொட்டியெல்லாம் கல்விக்கூடங்களையும், புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தையும்
அறிமுகம் செய்ததன் மூலம்) நனவாக்கியவர்.
விடுதலைப் போராட்ட உணர்வுமிக்க ‘காமாட்சி
ராஜா’ என்ற சிறுவனுக்கு
பெட்டிக்கடை ஞானம்பிள்ளைதான் முதல் அரசியல் குருவாக அமைந்தார்.
தென் தமிழகத்தில் பொதுக் கூட்டங்களின்
மூலம் தீவிர விடுதலை வேட்கையை விதைத்துக்கொண்டிருந்த திரு வி க, டாக்டர்
வரதராஜுலு, ஜார்ஜ் ஜோசப் போன்றோர் கருத்துக்கள் காமராஜருக்கு மேலும் உரமூட்டின.
தனது 16-வது வயதில் காங்கிரஸில்
தொண்டராக இணைந்த காமராஜர் 1923 ம் ஆண்டு (20 வயதில்), தேசத் தந்தை காந்தியடிகளின்
அறிவுரைப்படி கள்ளுக் கடை மறியலுக்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.
அதைத் தொடர்ந்து 1925ல் நாகபுரி
கொடிப் போராட்டத்திற்கு தொண்டர்களை அனுப்பும் பொறுப்பை ஏற்றுச் செயல் படுத்தினார்.
மார்ச் 12, 1930ல் வட இந்தியாவில்
மகாத்மா காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியபோது
ஏப்ரல் 13, 1930ல் தென்னிந்தியாவில்
வேதாரண்யத்தில், ராஜாஜி தலைமையில் நடைபேற்ற உப்பு சத்தியாகிரகத்தில் ‘தென்னாட்டு
காந்தி’ என்றும், ‘கருப்பு
காந்தி’ என்றும் அழைக்கப்படும்
காமராஜர் பங்கேற்று, தன் அரசியல் வாழ்வில் முதன் முறையாகச் சிறை சென்றார்.
வைஸ்ராய் வெலிங்டன் பிரவு 4.6.1932’ல் காந்தியடிகளைக் கைது செய்ததோடு, ‘காங்கிரஸ் ஒரு சட்ட விரோத இயக்கம்’ எனப் பிரகடனம் செய்து, 144 தடையுத்தரவும் போட்டபோது, வெள்ளையரின் போக்கைக் கண்டித்து ஊர்வலம் நடத்திய காமராஜர் அவர்களும்
கைது செய்யப்பட்டார்.
வேலூர் சிறையில் ‘பகத்சிங்’ ன் நண்பளான ‘ஜெயதேவ்,’ ‘கமல்நாத் திவாரி’ ஆகியோரோடு தொடர்பில் இருந்த
காமராஜரின்மீது ‘ஜான் ஆண்டர்ஸனை கொல்ல முயன்றதாகச்’ சதி வழக்கு புனைந்தார்கள்
பரங்கியர்கள். போதிய ஆதாரமின்மையால் அந்தப் பொய் வழக்கு வழக்கு தள்ளுபடியாயிற்று.
அதே போல ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையங்களில்
வெடிகுண்டு வீசியதாக டெபுடி சூப்பிரன்டெண்ட் பார்த்தசாரதி அவர்களால் ஜோடிக்கப்பட்ட
வழக்கிலிருந்தும், குற்றமற்றவர் என்று விடுதலை ஆனார் காமராஜர்.
இருந்தபோதிலும் காமராஜரை ஒரு தீவிரவாதி என்ற முத்திரை குத்தியும், அவர் வீட்டை திடீர் திடீர் எனச் சோதனையிடுவதும், அடிக்கடி கைது செய்வதையும் வழக்கமாகக் கொண்டது ஆங்கில அரசு.
1936ல் பண்டித நேருவின் தமிழக சுற்றுப் பயணத்திற்குப் பின், பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு
போட்டியின்றி வெற்றி பெற்றார் காமராஜர்.
1940 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தமிழக காங்கிரஸ் தலைவர்’ தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பையாவைவிட, பெருந்தலைவர் அவர்கள் 3 வாங்குகள் அதிகம் பெற்று தலைவரானார்.
அதே ஆண்டில் காந்தியடிகளின் ‘தனி நபர் சத்தியாக்கிரகத் திட்டத்திற்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்குச்
சென்ற காமராஜரை கைது செய்தது ‘இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்ற போக்கில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசு.
எந்தப் பதவியில் இருந்தாலும், அது கௌரவப் பதிவியாக இருந்தாலும் கூட அதில் அர்பணிப்புடன் செயல்படவேண்டும். முழுமையாக ஒரு பணியை கவனிக்க முடியாதவர் அப்பதவிக்கு வருவதைத்
தவிர்க்க வேண்டும், என்ற கொள்கை உடைய காமராஜர் 1936 மற்றும் 1942 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தன்னை தேடி வந்த நகர் மன்ற தலைவர் பதவியைத் துறந்து தன்
கொள்கைக்குத் தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
1942 - இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்.
1942 ஜூலை 8 ம் தேதியன்று பம்பாய் கோவாலியா மைதான தெப்பக்குள மைதானத்தில் நடைபெற்ற ‘தேசிய மகா சபை’யில் தமிழகத்தின் சார்வில் கலந்து கொண்டவர்களில் அன்றைய காங்கிரஸ்
தலைவரான காமராஜரும் ஒருவர்.
‘சுதந்திரம் நம் உடனடி தேவை, இனியும் காலம் தாழ்த்த முடியாது. ‘செய் அல்லது செத்து மடி’ என்று என்று மும்மரமாக மகாத்மா காந்தி அவர்கள் முழங்கிக்காண்டிருந்த
நேரம். பண்டித நேரு அவர்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை உறுதியாக முன்மொழிந்தார்.
மறுநாள், ஜூலை 9ல் காந்தி, நேரு உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அதே சமயம், பம்பாயிலிருந்து ரயில் பயணம் செய்தபோது, கடுமையான போலீஸ் காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தலையில் துண்டை கட்டிக் கொண்டு கிழிந்த போர்வை போர்த்தி, மாறுவேடமிட்டு; கைதாகாமல் தப்பித்து, ஆகஸ்ட் 16ம் நாள் வரை ‘ஆகஸ்ட் புரட்சி’ உட்பட மகாசபையின் தீர்மானங்களை தமிழகத்தில் பரப்பி ‘வெள்ளையனே வெளியேறு’ என தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்த பின். “போலீசில் சரணடைய வேண்டாம் எனப் பலர் சொல்லியும், ஜூலை 17-ம் தேதி போலீசில் சரணடைந்த நேர்மையான ஒரு சுதந்திர போராட்டத் தலைவர் நம் காமராஜர் என்றால் அது மிகையாகாது.
மூன்றாண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் 1945 ஜூன் முப்பதாம் நாள் விடுதலையானார் கருப்பு காந்தி.
1946-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்
கர்ம வீரர்.
ஆகஸ்ட் புரட்சிக்குப் பின் காமராஜர் பாட்டாளிகள் நலனில் அதிக கவனத்தைச் செலுத்தி, தொழிலாளர்களிடையே மறுமலர்சியைத் தோற்றுவித்தார்.
1946-ம் வருட சட்டசபைத் தேர்தலில் சென்னை மாநிலத்தில் தொழிலாளர்களுக்கென்று நான்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட காரணம் காமராஜரே.
தாய்த் தமிழகத்துடன் இணைந்தால்தான் தங்கள்
வாழ்க்கைத் தரம் உயரும் என்ற கோரிக்கையை சிறப்பாக நிறைவேற்றி திருவிதாங்கூர் தமிழர்களின்
வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்தவரும் காமராஜரே.
காந்தி பிறந்த நாளில் இறந்த இவரை ‘காந்தி பிறந்த நாளுங்க..நம்ம கருப்பு காந்தி இறந்த நாளுங்க என்ற நாட்டுபுறப் பாடல் தமிழகத்தில்
பட்டி தொட்டியெங்கும் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப் பற்றாலும் நாடு போற்றும் சுதந்திரச் சிற்பியாகவும்
தலைசிறந்த தலைவராகவும் என்றென்றும் மதித்துப்
போற்றபடுவர் நம் கல்விக் கண் திறந்த கருப்பு காந்தி காமராஜர் ஆவார். அவரது வாழ்க்கைநெறியும், அயராத உழைப்பும் நேர்மையும் இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றத் தக்கதாகும்.
வாழ்க காமராஜர் புகழ், வளர்க பாரதம்.
Comments
Post a Comment