கலியன் மதவு (அத்தியாயம் 25)
கலியன் மதவு (சமூக நாவல்)
-ஜூனியர் தேஜ்
அத்தியாயம் – 25
(ஆனந்த விகடன் – அ-அ-2022)
கலியனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது துரைராமனுக்கு.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா...!
கோபம், பாபம், சண்டாளமாயிற்றே...!
கோபத்தில் காரியம் செய்பவனும், கடும் புயலில் கப்பல் விடுபவனும் மீளமுடியாதே...!
நிதானத்தை இழக்கச் செய்துத் தவறிழைக்கத் தூண்டி, இறுதியில் தலை குனிய வைத்துவிடுமே ஆத்திரம்...!
தீராக் கோபம் போராய் அல்லவா முடியும்…!
*****-
‘பொங்கலோப் பொங்கல்...!’
குடும்பத்துடன் கூடிக் குலாவிக் களித்துக் கூவிக் குலவையிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில், கைக்கொட்டி,
பல்வேறு பாத்திரிங்களைத் தட்டி ஓசையெழுப்பிப், பொங்கலோப் பொங்கல் என கூட்டாய் ஒலி எழுப்பிக், குதூகலமாய்க் கொண்டாடினார்கள் பொங்கல்
பண்டிகை.
பக்திப் பரவசத்துடன் படையலிட்டுச், சூரிய பகவானைத் திருப்திப்படுத்தியதன் மூலம்,
முழுத் திருப்தியடையந்தார்கள்.
உறவும் நட்பும் சூழ அமர்ந்து விருந்துண்டுக் களித்து மகிழும்
பொன்னாள் அல்லவா பொங்கல் திருநாள்.!
சூரியன்தானே அண்ட சராசரம் அனைத்துக்கும் ஆதாரம்!
விண்ணிலும் மண்ணிலும் பல்வகை வண்ணச் சித்திரங்களைத் தீட்டுதற்கு
மூலாதாரமாய் விளங்கும் பரம்பொருளின் முதல் அம்சமல்லவா சூரியன்!
சூரியனும், மழையும் அனைவருக்கும் பொதுவானதாயிற்றே!
என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே!
‘ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல்,
பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.’
என்று பரிதி’யைப் போற்றுகிறது சிலம்பு!
‘சூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷச்ச’.!
தாவரம், ஜங்கமம் என்னும் அனைத்தின் ஆன்மாவே சூரியன்! என்றும்,
‘மித்ரோ ஜனான் யாதயதி ப்ருவாணோ
மித்ரோ தாதார ப்ருதிவீமுத த்யாம்.’
அண்ட சராசரங்களுக்கெல்லாம் ஆதார அச்சாய் நின்று (மித்திரன்) உயிர் நண்பனாய்
விளங்குகிறான் பரிதி.!’ என்று கூறுகிறது வேதம்.
‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தடைந்தான்...!’
பிரபந்தத்தின், திருப்பள்ளியெழுச்சிக் கூறும் யதார்த்தம் இது...!
சூரியன் தன் உயிர்க் கிரணங்களைச் (ஒரு செல் அமீபா முதல் ஆறறிவு மனிதன் ஈறாக)
செலுத்தி, தன் ரசவாத்த்தால், பிரபஞ்சத்தையே உயிர்ப்புடன் இயக்கும் அதிசயமே, இயற்கையின்
அற்புதம்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் மனிதர்கள் இருக்கும்போது, ‘செரட்டோனின்,
டொபேமின், ஆக்ஸிடோசின், என்டோபின்...’
போன்ற ‘மகிழ்ச்சி ஹார்மோன்கள்’ மூளையில் சுரத்தலென்பது அறிவியில் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையல்லவா...!
இந்த ரசவாதத்தைப், பொங்கல் பண்டிகையன்றுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பார்களோ...?”
*****-
பால்-பொங்கலை ரசித்து, ருசித்து
வயிறு முட்ட உண்ட பின், பால் மணத்தோடு, வெளிப்படும் ஏப்பத்தோடு, நன்றியறிதலும் வெளிப்படுகிறது.
நன்றியறிதல் தமிழனின் தலையாய குணமல்லவா...!
பால் தரும் கால்நடைகளின் மீதான பாசத்தையும் நேசத்தையும் வெளியுலகிற்குப்
பறைச் சாற்றிப் போற்றி மகிழும் நோக்கத்துடன்தான் தொடங்கப்பட்டது மாட்டுப் பொங்கல்
எனும் மகத்தானத் திருநாள்.
பசு, எறுமை...;
கிடேரி, காளை...;
இளங்கன்றுகள்...;
நாட்டு மாடு, சீமை மாடு...;
தடி, தோசு, சோனி, சோதா, சப்பாணி, மோளை...;
சினைப் பசு, இளம் பசு, மரப் பசு...;
வகை-வயையாய், வண்ண-வண்ணமாய்...;
பல்வேறு பல் பட்ட மாடுகள். கன்றுகள்
கத்தியால் சீவிச் சீவி, பட்டைச்-சீலை வைத்துத்
தேய்த்துத் தேய்த்துக் கூராக்கி, வர்ணம் பூசப்பட்ட கூர் முனைக்
கொம்புகளோடும், கழுத்தில் அணிவிக்கப்பட்ட நெட்டி மாலையோடும்,
மணிச் சத்தமெழுப்பியபடி மந்தைக்கரைக்கு வந்து சேரும் ஆவினங்கள்.
கீதோபதேசக் களம்போல் மாடுகள் சுற்றிலும் அணி வகுத்து நிற்க, நட்ட நடுவில் பெருமாள் காட்சியளிப்பார்.
அருச்சுனன் போல் பக்திச் சிரத்தையுடன், முறையாகப்
பட்டிக் கட்டுவார் மந்தைத் தலையாரிக் கோனார்;
பீளைப்பூ,, வேப்பிலை, மாவிலை, நெல்லி...
ஈக்குகளைக் கொத்தாய்க் கட்டி, பட்டிப் பத்தையின்
முகப்பில் கிரீடம் போலச் செருகுவார்;
செருகும் அழுத்த்த்தில் சிதையும, ஈரமானப் பட்டிப் பத்தையின் சிறு வெடிப்பை வழித்து
விடுவார்;
பட்டிக் குழிவில் மஞ்சள் நீர் ஊற்றுவார்;
கைக் கூப்பி, கண்மூடிப் பிரார்த்தனை செய்வார்; தலைமைக் கோனார்.
எதிரே, கோபால கிருஷ்ணாகக் காட்சி தரும், பூமிதேவி, நீளாதேவி சமேத வரதராஜப் பெருமாள், கையில் சாட்டை, இடுப்பில் வெண்ணைத்தாழி ஏந்தி சர்வாலங்கார பூஷனாக எழுந்தருளி சேவை சாதிப்பார்.
குதிரை வாகனத்தில் கம்பீரமாய் அமர்ந்தபடி பெருமாள் சேவை சாதிப்பதுக்
கண்கொள்ளாக் காட்சி.
*****-
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தடபுடலாக நடத்தப்படும், பிரசித்தி பெற்றக் ‘கனு
பாரி வேட்டை’க்கு இணையாக இருக்கும் அந்தனூர்ப் பாரி வேட்டை.
மாடில்லா வீடே கிடையாது அந்தனூரில்.
அனைத்து மாடுகளும் மந்தைக்கரைக்கு வர வேண்டும்
இது ஊர் கட்டுப்பாடு.
பெருமாள் கோவிலுக்கு முன் மாடுகள் சந்தை போலக் கூடிவிடும்.
பெருமாள் முன்பாக, காளைகளும், பசுக்களும் கன்றுகளுமாகப், புழுதி கிளம்பக் கூட்டமாய்ச் செல்லும்.
‘ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்...’
தன் பிரியமான பசுக்களின் பாததூளியை ஸ்பரிசித்தபடி பின் தொடர்வார்
பெருமாள்.
விதவிதமான சலங்கை ஒலிகள்;
ஆவினங்களின் கன்றுகளின் குரல்கள்;
பாஞ்சஜன்யமாய் பாகவதர் ஒலிக்கும் சங்கொலி; மற்ற மற்ற வாத்தியங்களின் இசையொலிகள்;
வரதராஜா, கோவிந்தா... என்ற பரவசக் கூவல்... ;
அனைத்தும்
கலந்து மந்தைக் கரையைப் பரவசப்படுத்தும்.
குதிரை வாகத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானை வலம் வந்தபடி காராம்பசுவையும், கன்றையும் பரமன் முன்னே நிறுத்துவார் தலைக் கோனார்.
கோ பூஜை நடக்கும்.
தவில், நாதஸ்வரம், கொம்பு, எக்காளம் என
எல்லா மங்கல வாத்தியங்களும் கெட்டியாய் முழங்கும்.
பெருமாள் கழுத்து மாலையைக் கழற்றி பசுவுக்கும் கன்றுக்கும் சார்த்துவார்.
ஐந்து முக தீபாராதனைக் காட்டுவார் பட்டாச்சாரியார்.
கண் கொள்ளாச் காட்சியது.
அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் தாள் வணங்குதல் சாத்தியமாகும்.
*****-
மந்தைக் கரையில் பட்டி உடைப்பட்டதும், தலைக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு சர்வ சுதந்திரமாக ஆவினங்களை
அனுமதிப்போர் வெகு சிலரே...
இந்த நாளில் கூடச் சாங்கியம் முடிந்ததும் கொட்டிலில் இழுத்து
கட்டுவோரேப் பெரும்பான்மை.
எங்கெங்கு காணினும்...
ஜனங்கள்...! ஜனங்கள்...! ஜனங்கள்...!
இருந்தாலும், பயிற்சிப் பெற்றச் சிப்பாய்கள் மட்டும்தானேப் போர் முனையில் போராடுகிறார்கள்...?
அதுபோலவே, எருது, காளை, ஆண் மாடு,
வண்டி மாடு, உழவு மாடுகள், என்றெல்லாம் இருந்தாலும், முறையாகப் பயிற்சிப் பெற்ற, வலுவுள்ள, போராடத் திறமையுள்ளப் பொலிக் காளைகள் மட்டுமே போர்முனைக்குச் சமமான வாடி வாசலுக்கு
வந்துசேரும்.
*****-
'அதிர ஓடினால் முதிர விளையும்'...
எப்படி என்கிறீர்களா?
அறுபட்ட தாள்கள், அதிர ஓடும் கால்நடைகளின் குளம்புகளில் சிக்கும், சிதறும், சிதையும், சின்னாபின்னமாகும், அறும்,
அழுந்தும், அழுகும், மடியும், மட்கும், மண்ணுக்கு வீரியம் சேர்க்கும்....!
முத்து முத்தாய்ப் பயிர் விளையும்.
களஞ்சியங்கள் நிரம்பி வழியும்
அறுவடை முடிந்த வயல்களில் அடுத்த பாட்டம் விவசாயம் வரை கால்நடைகள் ஆட்சி செய்யும்.
மனிதனுக்கு உணவிட்ட நிலம், வாங்கற் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களுக்கு மேய்ச்சல் நிலமாகும்.
மேய்ச்சல் நிலத்தில் பசுக்கள் காலாறும் போது, காளைகள், துள்ளிக் குதியாட்டம் போடும்.
ஆட்டம் காட்டி கிடேரியை ஈர்க்கும்.
துள்ளும் காளைகளை எதிர்க் கொண்டு விளையாட்டாய் அடக்குவான் இள மேய்ப்பன்.
ஆயர் மங்கை, ஆயனிடம் மயங்குவாள்.
வீரம் கண்டு வியத்தல், சாதனை கண்டு ‘ஆ...!’ வென வாய்ப் பிளத்தல், விழிவிரித்து
வீரனை விழுங்கல்... எல்லாம் மகளிர் இயல்பல்லவா...!
விழி விரிப்பவளை விழ வைக்க விழைவான் இளைஞன்.
கிடேரி துரத்தும் காளையைக் காட்டுவான்.
அவள் வெட்கி அவன் தோள்மேல் நெற்றி தாங்குவாள்.
மங்கையரை மயக்கும் வீர விளையாட்டாய் காளைகளை
அடக்கல், அறிமுகமானது.
கிடேரி முன் அடங்க மறுத்து ஆரவாரிக்கும் காளைகளை
அடக்க வீரத்தை நிரூபித்தல் கலாச்சாரமானது.
*****-
மாறாத ஒன்று மாற்றம்தானே...!
‘கொல்லேற்றுக்
கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’
கூடிக் கொல்லுகின்ற ஏறு எனும் கொம்புடைய காளைக்கு அஞ்சுபவனை
மறுபிறப்பிலும் விரும்பமாட்டாள் பெண்’ என்கிறது கலித்தொகை.
அதற்குக் கல்வெட்டுகளும், கருங்கல் சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும். ஓவியங்களும்கட்டியம் கூறுகின்றன.
உண்மைதானே. எந்தப் பெண்ணாவது சோப்ளாங்கியை விரும்புவாளா...?
கால மாற மாறக் காட்சிகளில் மாற்றம் வந்தன.
“நீ வீரனா இருந்தா என் வீட்டுப்
பொலி காளையை அடக்குப் பாப்போம்...!”
கலித்தொகைக் காலத்தில் கன்னியர் கவித்துவத்துடன் மொழிந்தார்கள்.
இன்றைய கன்னியர், கடைக்கண் சிமிட்டிச் கலாய்க்கிறார்கள்...
‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட மாமலைலே ஓர் கடுகாய்’ இருக்கும்போது, மயிலைக் காளை எம்மாத்திரம்..
சீறி வரும் காளையை, சிங்கத்துக்கு நிகராய்ப் நெஞ்சு நிமிர்த்திப்
பாய்ந்து, அடக்கி ஏறு தழுவினான்.
சவால் விட்டக் கன்னியோ, வீரம் வியந்து அவனைக் தழுவினாள்.
ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு என்பதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் போற்றப்படும்
தமிழகத்தின் தனிப் பெரும் சொத்துக்களல்லவா.!
உலகமே வியக்கும் தமிழனின் அடையாளங்களல்லவா.!
*****-
பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும், நடைமுறைப்படி எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும்
ஜல்லிக்கட்டு நடந்ததுமில்லை, நடப்பதுமில்லை.
திடலில் அவிழ்த்துவிடப்பட்டக் காளைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடும்போது, அவற்றை இளைஞர்கள் விரட்டும் ‘வேலி-ஜல்லிக்கட்டு’
வாடி வாசல் மூலம் வெளியேற்றப்படும் பொலிகாளைகளைத் தொடர்ந்து விரட்டி அதன் திமில் தழுவித் தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்லும் ‘வாடிவாசல் ஜல்லிக்கட்டு’.
இருபது அடி நீளக் கயிற்றால் கட்டப்பட்ட
பொலி காளையைக், குழுவினர் இழுத்துப்பிடிக்க, குழுவில் ஒருவன், காளை முன் பாய்ந்துக் கொம்பில் சுற்றிய பரிசுப் பணத்தை வெல்கிற ‘வடம் ஜல்லிக்கட்டு’
இப்படி நீளமான வரலாறு கொண்டதல்லவா ஜல்லிக்கட்டு.
இடத்துக்குத் தகுந்தாற்போல், காலத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள்
வந்தாலும், அடிப்படை
ஒன்றுதானே!
*****-
அஞ்சுக்கும் ஆறுக்கும் நடுவேப் போட்டாப் போட்டி.
ஆறாவது அறிவான பகுத்தறிவின் வெளிப்பாடாய், அனுமானமும், சாணக்கியமும்
மிக்க மனிதர்கள் ஒருபுறம்.
ஐந்தறிவேக் கொண்ட முரட்டுக் குணமும், மூர்க்கமும் கொண்ட காளைகள் மறுபுறம்.
இயற்கையிலேயே உடல் வலிவும், முரட்டுத்தனமும், மிருக
குணமும் கொண்ட ஐந்தறிவுக் காளைகளை போஷித்து வளர்ப்பது , ஒருக்
காலத்தில் சமூக கௌரவமாகக் கருதப்பட்டது.
பெற்ற மகனுக்கோ மகளுக்கோக் கூடக் கிடைக்காத செல்லமும், போஷிப்பும் இந்தக் காளைகளுக்குக் கிடைக்கும்.
காளை வளர்ப்புக்காகச் சொத்து சுகங்களை அழித்தப் பண்ணையார்கள்
கூட உண்டு.
காளையின் வலிவு, வளர்ப்பவன் வரலாறு, பயிற்சி கொடுத்தவனின் திறமை,
பரிசுப் பொருளின் மதிப்பு... என பல்வேறுக் கூறுகளையும் அனுமானித்து பலப் பரீட்சையில் இறங்குவான்
இளைஞன்.
தீட்டிய மரத்தில் கூறு பார்ப்பதைப்போல, மனிதர்கள் முன் சவாலாய்ப் பாயும் காளைகள்.
எதிர்ச் சவாலிட்டு மோதி, மனிதன் ஜெயித்துக் காட்டுவது வீர விளையாட்டானது.
ஐந்தறிவையும் ஆறறிவையும் மோதவிட்டு நடத்தும் வாழ்வாச் சாவாப்
போரைக் கைத்தட்டி ஆராவாரிப்பதும், கண்டு களிப்பதும் பொழுது போக்கானது.
வாடி வாசலைக் கலக்கியெடுக்கும், முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டக், காளையிடம் எதிர்ச் சவால் விட வீரனுக்குப் போதுமானப் பயிற்சி வேண்டும்.
பயிற்சி பெற்ற சுத்த வீரர்கள் எப்பேர்ப்பட்ட காளையையும்அடக்கிவிடுவார்கள்.
அடக்கவே முடியாத கட்டத்தில், காளையின் கூரிய கொம்புகளால் குத்திக் கிழிக்கப்பட்டுக்
குருதி கொட்டி, வீரமரணம் அடையவும் தயாராக இருக்கும் வீரர்கள்..
விஞ்ஞானம் வளர்ந்தது
வீர விளையாட்டுக்கள் முறைப்படுத்தப்பட்டன.
விதி முறைகள் வகுக்கப்பட்டன.
ஸ்தாபிதப்படுத்தப்பட்டன.
விதி மீறல்கள் சுலபமாகின.
சூதாட்டத்தின் சாயைப் படிந்தது.
ஐந்தறிவுக் காளைக்குக் கபடு, சூது கற்பித்தது ஆறறிவு.
காளைக்கும் ஊக்க மருந்து ஏற்றுமளவுக்கு எண்ணங்கள் மலிந்தன.
இயல்பாய் இருப்பதை ஸ்தாபிதப் படுத்தும்போது ஏற்படும் அனைத்து
எதிர்மறை வழிகளும் அரங்கேறின.
ஆலம்பாடி, புளிகுளம், உம்பளஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம்...
இப்படியான, காளைகளில் பட்டியலில் ஆலம்பாடிக் காளைகள் அருகிவிட்டன.
மலைமாடுகள் மலையேறிவிட்டன.
காங்கேயம் காளைகள் காணாமல் போனபடி உள்ளன.
வண்ணங்களும், வடிவங்களும்,
நோக்கங்களும், பார்வைகளும், முறைகளும்... மாறிவிட்டன.
காளைகளுக்கும், வீரர்களுக்கும், குருதிச் சோதனை செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
விதி முறைகளில் பல்வேறு புதுமைகள் புகுந்தாலும்,
‘வீர
விளையாட்டு...!’ என்ற அடிப்படை மட்டும் என்றென்றும் மாறாதல்லவா...!
*****-
துரைராமன் வலுவான, கபடம் நிறைந்த,
மிருகத்தனம் கூடிய முரட்டு மாடாக கலியன் முன் நின்றான்.
கலியனை முறைத்தான்.
கலியன் அமைதியாய்ச் சூழலைக் கணித்தான்.
வீரம் (bravery,
courage, valour).
துணிவான ஒரு உணர்வு.
சந்திக்கும் எவ்வொரு சவாலையும் நேரடியாய்ச் சந்திக்கும் உறுதி.
வலி, ஆபத்து, எதிர்பாரா
நிகழ்வுகள், எதிர்ப்பு……….
பலவற்றையும் துணிவுடன் கடந்து வெற்றி காணும் விழைவு.
சரியெனப் பட்டதை யார்த் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாதுச் செய்து முடிப்பது.
முறையாக முழுமையாகப் பயிற்சி பெற்ற சுத்த வீரன் அவசரப்படுவதில்லை.
எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.
நிதானம்தான் வீரனின் வெற்றிக்கு மூலாதாரம்.
எதிராளியின் அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்தறிந்து, உறுதி செய்து கொண்ட பின்னர் முறையாக அணுகுவதே
சுந்த வீரனின் பண்பு.
தேவை ஏற்பட்டால், காளையின் போக்குத் தெரிந்து பின்வாங்கக்கூடத் தயங்க மாட்டான் சுத்த வீரன்.
*****-
வீரன் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்டதும், நுட்பமான காளைகள் சுதாரிக்கும்.
அந்த வகைக் காளைகளை அடக்கத்தான் வீரன் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.
புறமுதுகிட்டு ஓடுபவனை அலட்சியப்படுத்தும் காளைகள் சுலபமாக அடக்கப்பட்டுவிடும்.
சுத்த வீரன்
“ப்ச்...!”
உதடு கோணி ஒலியெழுப்பி அலட்சியப் படுத்துவதில்லை.
“பட்... பட்...!”
தோள் தட்டி ஆரவாரிப்பதில்லை.
‘அடக்கறேன் பார்...!’
ஆங்காரமாய்ப் பீற்றிக்கொள்வதில்லை.
‘இப்பப் பாரு...!’
முண்டா தடவிக் கொக்கரிப்பதில்லை.
போகிற போக்கில் ஜெயித்துவிட்டு, அமைதியாகச் சென்றுவிடுவான்.
*****-
துரைராமன் தொடர்ந்து முறைத்தான்.
குந்தலாம்பாள் சமையல்கட்டில்தான் இருந்தாள்.
இருப்பினும், அவள் கண்களும், காதுகளும், மனதும்
போர்க்களத்தில்தான் இருந்தன.
போரின் முடிவு அவளுக்குத் தெரிந்ததுதான்.
என்றாலும், போரின் போரின் போக்கையும் ஜாடையாய் கவனித்தாள்.
*****-
“சின்னய்யா...!”
துரையின், முகம் பாராமல், அழைத்தான் கலியன்.
“... ... ... ... ... ... ... ... ...”
பதில் ஏதுமில்லை.
“என்னண்ட ஏதோ பேசணும்னு விருப்பப்பட்டீங்களாம்...!”
இழுத்தாற்போல் கேட்டான் கலியன்.
“... ... ... ... ... ... ... ... ...”
அமைதியாய் அலட்சியம் காட்டினான்
துரை.
“அப்ப நான் போவட்டுங்களா
சின்னய்யா...?”
இப்போதும் துரையின் முகத்தையோக்
கண்களையோப் பார்க்கவில்லை கலியன்.
“... ... ... ... ... ... ... ... ...”
இதற்கும் பதில் இல்லை துரையிடம்.
“அம்மாவை வரச்சொல்லுங்க சின்னய்ய...! சொல்லிக்கிட்டுக் கிளம்புறேன்...!”
சுத்த வீரன் நாடி பிடித்துப் பார்க்கிறான்.
இதற்கும் மௌனம்தான் பதில் என்றால்........
வீரன் தோற்பது உறுதி.
காளை ஜெயித்துவிடும்.
சுத்த வீரன் தோற்றதாய் வரலாறில்லை.
*****-
“உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கற துரோகி...!”
ஆத்திரமாய்க் கத்தினான் துரைராமன்.
‘கோபம்’ - பேசுகிறபோது;
‘அறிவு’ - முக்காடு
போட்டுக் கொள்கிறது...!’
காளை, அலட்டல் இல்லாத வீரனை அலட்சியப்படுத்துகிறது.
குனித்த தலையைப் பார்த்துக் குறைத்து மதிப்பிடுகிறது.
புற முதுகு காட்டுகிறானென்றுக் புஸ்’ஸெனச் சீறுகிறது.
கொம்பை சிலுப்புகிறது.
துடிக்கிறது.
துள்ளுகிறது.
‘துள்ளின
மாடு பொதி சுமக்கும்.’
இனி வீரன் ஜெயிப்பது உறுதி.
*****-
துரைராமனின் கத்தலுக்கு கிஞ்சித்தும் வருத்தமோ, ஆத்திரமோப் படவில்லை கலியன்.
மௌனமாக நின்றான்.
“ஊமை மாதிரி நின்னா என்ன அர்த்தம்...?”
துரைராமன் மீண்டும் உறுமினான்.
“சின்னய்யா, என் முடிவுல
எதுவும் மாத்தமில்லீங்க...! நீங்க தூதுவிட்ட ஆசாமிங்கக்கிட்டேயே
நான் உறுதியாச் சொல்லிட்டேனுங்களே...!”
“ஓ! அப்படிங்களா...?
துரையின் குரலில் எகத்தாளம் இருந்தது.
“... ... ... ... ... ... ... ... ...”
உன் முடிவுல எதும் மாத்தமில்லே...! அப்படித்தானே...?’ கலியனைச்
சீண்டிப் பார்த்தான்.
“ஆமாங்க...!”
“கலியா, எங்கப்பா மாதிரி
என்னை நினைக்காதே, எனக்குச் சுப்ரீம் கோர்டு வரைக்கும் ஆளு இருக்கு. உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து நார
அடிச்சிருவேன். என்னைப் பத்திச் சாதாரணமா நினைக்காதே சொல்லிட்டேன்...!” உணர்ச்சிவசப்பட்டுக்
கத்தினான் துரை.
“சரிங்க...! நினைக்கலிங்க...!”
“நய்யாண்டி பண்றியா நீ...?”
“... ... ... ... ... ... ... ... ...”
“எங்கப்பா அப்படி என்னடா எழுதிக் கொடுத்துட்டாரு
உன்கிட்டே...?”
“எனக்கு எளுதப் படிக்கத் தெரியாதுங்க...!”
“எழுதப் படிக்கத் தெரியாத உனக்கே இவ்ளோ இருந்தா,
எனக்கு எவ்ளோ இருக்கும்... ம்...!”
“... ... ... ... ... ... ... ... ...”
உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போது எதிர்த் தரப்புக் காட்டும் மௌனம் மிகக் கொடுமையானது.
கோபத்தையும், ஆத்திரத்தையும் எய்தவன் மீதே திரும்பிவிடும் யுக்தியை லாகவமாய்ப் பிரயோகித்தான்
கலியன்.
கலியன் மாதய்யாவால் பயிற்றுவிக்கப் பட்டவன். குந்தலாம்பாளால் மெருகேறுபவன்.
*****-
கலியனின் மௌனத்தில் பணிவு இல்லை.
அலட்சியப்படுத்துகிற மௌனம் அது.
ஆத்திரத்தைத் தூண்டும் மௌனம் அது.
எறிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதைப் போல துரைராமனின் ஆத்திரத்தை
குபீரென்று பற்ற வைத்தது அந்த மௌனம்.
“நீ ரொம்பத்தான் தெனாவெட்டா இருக்கே, உன்னை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிக்கறேன். இனிமே
என் முகத்துல முழிக்காதே . நீ போ...!”
கோபமாகக் கத்தினான். துண்டை உதறித் தோளில் போட்டான். எழுந்து உள்ளே சென்றுவிட்டான் துரைராமன்.
புலி பதுங்குவது, குறி பார்த்துத் தாக்க, எலி பதுங்குவது தப்பிக்க.
துரைராமன் புலி போலப் பதுங்கவில்லை..
*****-
“சின்னய்யா கூட பேசிட்டியா கலியா...?” கேட்டுக் கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.
“பேசிட்டேன். நான் போட்டுங்களா?”
“சரி போ...! நாளைக்கு பொங்கலும்
அதுவுமா இதுபோல லேட்டா வராதே. சீக்கிரமாக் கிளம்பி வந்து...!”
முடிப்பதற்குள் கலியன் குறுக்கே பேசினான்.
“நாளைக்கும் என்னால வரமுடியாதும்மா. நாளை மறுநாளும் நான் வரமாட்டேன்.”
கலியன் இப்படி “பட்... படார்...” என்று,
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொன்னதைக் கேட்டக் குந்தலாம்பாள்,
தனக்குப் பின்புறம் துரைராமன் நிற்கிறான் என்பதை, திரும்பிப் பாராமலேத் தெரிந்துகொண்டாள்.
“... ... ... ... ... ... ... ... ...”
“மாட்டுப்பொங்க’ அன்னிக்கு
காளிமுத்துவை அனுப்பறேன். மந்தைக்கரைக்கு வீரன் காளைய கொண்டு
போவான்...!”
“கலியா, என்ன பேச்சு பேசறே
நீ?”
“சொன்னா வருத்தப்படாதீங்க. அடுத்த போகத்துல எப்பவும் போல அளக்க முடியாதுங்க. கொஞ்சம்
குறைவாத்தான் அளப்பேன். இப்பவேச் சொல்லிட்டேன்...!”
“நீ...! மனசாட்சியோடத்தான்
பேசறியா கலியா? ம்...!”
“மனசாட்சி இருக்கறதுனாலத்தான் இப்படியெல்லாம்
பேச வேண்டியிருக்கும்மா...!”
கலியனின் வலது கை நெஞ்சுக்கு நேராய்த் தொங்கிய தாயத்தைப்
பிடித்துக்கொண்டிருந்தது.
*****-
“கலியன் பேசினதை கேட்டியோன்னோ துரை...?”
பின்னால் திரும்பி துரைராமனிடம் கேட்டாள் குந்தலாம்பாள்.
“கேக்காம என்ன...?”
“எனக்கு கலியன் கிட்டே இருந்த நம்பிக்கை போயிடுத்துத்
துரை...!”
“உனக்குச் சமீபமாத்தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சிருக்கு.
நான் எப்பவோத் தெரிஞ்சினுட்டேன்;
அவனுக்குப் பேச்சுச் சுத்தமோ, விசுவாசமோக் கிடையாதுன்னு எனக்கு முன்னமேத்
தெரியும்;
நீயும் அப்பாவும்தான் ‘கலியன்... கலியன்...’னு அவனை உச்சிக் கொம்புல ஒக்கார வெச்சேள்...!”
துரை எரிச்சலோடு குற்றம் சாட்டினான்.
*****-
“அம்மா...!
நான் அப்படி என்னம்மா பேச்சு மாத்திப்
பேசிப்புட்டேன்...!”
கலியன் வருந்தும் குரலில் பேசினான்.
“காளவாக்கு அறுத்து வெச்சப் பச்சைக் கல்லுங்கக்
கரைஞ்சி, கரடும், கரளையுமா ஆகிப் போச்சு;
கோவிலு சம்பாக் காணி மேடும் பள்ளமுமா தரிசாக் கெடக்கு;
ஏகமா கை நட்டம் வேற எனக்கு.”
“நிறுத்து கலியா...! அய்யா
இருந்தவரை கூழக்கும்பிடு போட்டே. இப்போ கை நட்டம் கால் நட்டம்னு
பேசுறது கொஞ்சமும் சரியில்லே. ஞாயமாப் பேசு...!”
“அம்மா...!”
தாயத்தைப் பிடித்தபடி ஏதோ சொல்ல வாயெடுத்தான் கலியன்
எதுவும் பேச விடவிடாமல் அவசரமாகத் தடுத்தாள் குந்தலாம்பாள்.
“கலியா, நாளைக்கு வான்னு
சொன்னேன்;
வரமாட்டேன்னு முகத்துல அடிக்கறமாதிரி மறுத்துட்டே நீ;
நீ வரவே வேண்டாம்;
எனக்கு எந்த ஒத்தாசையும் செய்யவும் வேண்டாம்.”
“அம்மா...!”
பரபரத்த கலியன் முன், உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டி அமர்த்தினாள்.
கலியன் வாய் மூடினான்.
“மாட்டுப் பொங்கல் அன்னிக்கு காளிமுத்துவையும்
அனுப்ப வேண்டாம்;
ஒத்தை வண்டி-மாடு மட்டும் தானே இருக்கு, நான் பாத்துக்கறேன் வீரனை..!”
“... ... ... ... ... ... ... ... ...”
கலியன் அமைதியாகப் புறப்பட்டான்.
“கலியா, நாளைக்கு பொங்கப்
பண்டிகை முடிஞ்ச பிறகு உனக்கு நேரம் ஒழிஞ்சா, வா. சில பலதைப் பேசித் தீத்துக்கலாம். வரமுடியாதுன்னா சொல்லிடு.
நீ சொல்ற இடத்துக்கு நானும் துரையும் வரோம்...!”
“என்னம்மா இப்படியெல்லாம் பேசறீங்க...!
இந்த வீட்டு உப்பு தின்னு வளந்தவன்மா நான்...!”
கலியன் சொல்லவருவதைக் கேட்க குந்தலாம்பாள் அங்கு இல்லை.
அவளைத் தொடர்ந்து துரைராமனும் உள்ளே சென்று விட்டான்.
கலியன் கழுத்தில் தொங்கிய தாயத்தைத்
தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.
‘அய்யா, பெத்த மகனா என்னை
நேசிக்கற அம்மாவை, இப்படியெல்லாம் மரியாதைக்குறைவா பேசவேண்டியிருக்கே...!”
தாயத்துடன் பேசிக்கொண்டே திரும்பிச் சென்றான் அவன்.
*****-
கலியன் பேசிவிட்டுத் திரும்பிப் போனதிலிருந்து புயலுக்குப் பின்னே அமைதி போல வீடு
நிசப்தமாக இருந்தது.
ராத்திரி எட்டு மணிக்குள் பலகாரம் சாப்பிட்டாகி விட்டது.
கிட்டாவய்யரின் யோக்கியதை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டதால்,
துரைராமன் அங்கு செல்வதில்லை.
வீட்டோடுதான் முடங்கிக் கிடந்தான்.
நாள் முழுவதும், சொப்பு வைத்து விளையாடியும்;
தரையில் மாக்கல்லால் கோலம் போட்டுப் பொழுது போக்கியும்;
அடித்து குவித்த ஆற்று மணலில் கிளிக்கூண்டு கட்டியும், கோட்டை நிர்மாணித்தும;
தென்னங்குரும்பைகளில் ஈர்க்கு செருகி தேர் இழுத்தும்;
இரு பக்கமும் அவளேயாக உட்காந்துப் பல்லாங்குழியும் பரமபதமும்
விளையாடியும்;
களைத்துப் போனாள் ரஞ்சனி.
ஏழு மணிக்கெல்லாம் பசியாறிவிட்டுத்
தூங்கிவிட்டாள்.
குந்தலாம்பாளும், ரஞ்சனியும் சமையல்கட்டில் இருந்தார்கள்.
கலியனின்
நடவடிக்கைகளால் மனசு வெகுவாக பாதித்த துரை, ஊஞ்சலில் உட்காந்து கொண்டு ஏதோ
யோசித்தபடி இருந்தான்.
*****-
“ஏண்டா தொரை, நாளைக்குக் கலியன் வந்தா என்ன பேசறது...?”
“அம்மா...! எல்லாம் உன்னாலத்தான் வந்தது;
அப்பா காலமான உடனே எல்லாத்தையும் திரும்பி
வாங்கியிருக்கணும்;
இப்போ அவனுக்குத் துளுத்துப் போச்சு.”
“அவனை எப்படியாவது சமாளிச்சித்தானே ஆகணும் துரை...!”
“அவனைச் சும்மா
விடக்கூடாதும்மா.
ஒழிச்சிக் கட்டினாத்தான் என் மனசு ஆறும்... அவனை...”
கருவினான் துரை.
“ஏந்நா... அவன் இவ்வளவு துணிச்சலாப் பேசறான்’னா
அவனுக்கு ஏதோ வலுவான பின்பலம் இருக்குன்னு புரிஞ்சிக்கோங்க. நீங்க இப்படி அவசரமும்
ஆத்திரமும் பட்டா முடிவு அவனுக்குச் சாதகமாத்தான் அமையும்...!”
*****-
வலுவில் வந்து,
சண்டைக்கு அழைத்தான் சுக்ரீவன்.
வாலி ‘விருட்’ எனச் சண்டைக்குக் கிளம்பினான்.
மாவீரன் வாலிக்கு, அவன் பத்தினி ‘தாரை’ சொன்ன எச்சரிக்கைபோல இருந்தது; மோகனா துரைக்குச் சொன்னது.
“நீ இதுல தலையிடாதே. உனக்கு இந்த ஊர் விவகாரமெல்லாம்
புரியாது. வாயை மூடிண்டு சும்மா இரு.”
மனைவியை வாயடைத்தான்.
‘ஆமாம்...! இவன் ரொம்பத்தான்
ஊர் விவகாரம் எல்லாம் தெரிஞ்சவன்...!’
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் குந்தலாம்பாள்.
“அம்மா...! கோர்ட்டு கேசுன்னு இழுத்து அவனைச் சந்தி-சிரிக்க
அடிச்சாத்தான் வழிக்கு வருவான்...!”
பலத்த குரலில் கத்தினான் துரை.
“... ... ... ... ... ... ... ... ...”
“அம்மா, கலியன் அடிக்கடி கிட்டாவய்யாகிட்டேப் போய் மணிக்கணக்காப்
பேசறதாக் கேள்விப்பட்டேன்;
காளவாப் போட்டுத்தரேன்னு என்னை மோசம் பண்ணின அவர்தான்
கலியனை ஏவி விட்டு இடைஞ்சல் பண்றாரோன்னு தோணறதும்மா...!”
குந்தலாம்பாள் இதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை.
“அந்தத் துரோகி கிட்டாவய்யாவையும் சும்மா விடக் கூடாதும்மா...!”
கிட்டாவய்யரின் மேல் கடுமையான கோபத்தைக் காட்டிய துரைராமனைக்
கை அமர்த்தினாள் குந்தலாம்பாள்.
“கிட்டாவை பழிவாங்ககறது அப்பறம் ஆகட்டும். கலியன் நாளைக்கு வந்தா எப்படிப் பேச்சுக்
கொடுத்து சமாளிக்கறதுன்னு மொதல்ல சொல்லு...”
“அப்பா எதுவோ எழுதிக் கொடுத்திருக்கார். ஸ்ட்ராங் எவிடன்ஸ் கலியனண்ட
இருக்கு. அதனாலத்தான் அவன் இவ்வளவு தெனாவெட்டாப் பேசறான்...!”
*****-
கதை சொல்லுகிற போது, சின்னக் குழந்தைகள் ஆர்வத்தை அடக்க மாட்டாமல்,
“கடைசியா என்ன
ஆச்சு...?”
ஆச்சர்யத்தோடும் அப்பாவித் தனமாகவும் கேட்குமல்லவா...;
அதுபோல முகத்தைச் சீரியஸாய் வைத்துக்கொண்டு.
“இதுக்கு என்னதான் முடிவு...?”
துரையைக் கேட்டாள் குந்தலாம்பாள்.
*****-
கிராமத்துப் பிரச்சனைகளில் முடிவெடுத்தல், ஒரு தனிக் கலை.
விஷயம் பஞ்சாயத்துக்கு வந்துவிடாமல் முடிப்பது புத்திசாலித்தனம்.
ஊர் ஜனங்களுக்கு தன் சாதி, மதம், இனம் எல்லாமே இரண்டாம் பட்சம்தான்.
ஊரில் எவருக்கேனும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் அப்படி ஒரு அசாத்தியமான
ஈடுபாடு வந்துவிடும் அவர்களுக்கு.
சுவாரசியமாகப் பொழுது போகும் அவர்களுக்கு.
இரண்டு இடங்களிலும் தட்டி விடுவார்கள்.
விளைவுகளைக் கண்டு ரசித்துப் பேசிச் சிரித்துப் மகிழ்வார்கள்.
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் செய்வான்கள்.
நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத யோசனைகளை அவிழ்த்து விடுவார்கள்.
கோபத்தைக் கிளப்பிவிடுவார்கள்.
தன்மானத்தைத் தட்டி எழுப்புவார்கள்.
பதில் சொல்லாமல் அமைதி காத்தால் அவ்வளவுதான்.
‘பயந்தாரி’, ‘கோழை’, ‘முதுகெலும்பில்லாதவன்’, ‘சோப்ளாங்கி’
இப்படியெல்லாம் முத்திரை பதிப்பார்கள்.
பேசிவிட்டாலோ,
‘என்ன தெனாவெட்டு பாரு...!’
தூற்றுவார்கள்.
“ஏகப்பட்டது இருக்கில்ல, நாலு ஏக்கரை அவனுக்கு விட்டுக் கொடுத்தாத்தான்
என்ன...?”
ஒன்றுக்கும் உதவாத ஒரு சோம்பேறி பஞ்சாயத்துப் பேசுவான்.
“வயல்ல கிடந்து அல்லாடறது ஒருத்தன்.
அனுபவிக்கறது ஒருத்தனாக்கும்...!”
சமூக நீதியை அள்ளி விடுவான் ஒருவன்.
“ஊர் புறம்போக்கு
பூரா ஆக்ரமிச்சி வெச்சிருக்கற இவன் பேசிறாம் பாரு சமூக நீதி...?”
அவனைப் பற்றிப் பின்புறம்தான் பேசுவார்கள்.
சபையில் அவனை ஆதரித்து ஊக்கப் படுத்துவார்கள்.
எது நடந்தாலும் மேக்கரித்துப் பேசி பஞ்சாயத்தார் கண்களில் விரல்
விட்டு ஆட்டுவோரும் கிராமங்களில் உண்டு.
*****-
ஊர் பொதுப் பஞ்சாயத்துகளில் மேக்கரித்துப் பேசிச் சாதிக்க யோக்யதை வேண்டும்.
ஊர் நன்மைக்காக உழைத்திருக்க வேண்டும்;
மனோ பலம் (ஆன்ம பலம்) அவசியம்;
பண பலம், ஆள் பலம், அரசியல் பலம் இவையெல்லாம் பக்க பலமாய் மட்டுமே இருக்க முடியும்.
எல்லா பலங்களிலும் அனுபவ பலமே அற்புதங்களை நிகழ்த்தும்.
பட்டறிவுதான் பலன் தரும்.
அனுபவத்திற்கு, நிறைய விலை கொடுத்திருக்க வேண்டும்.
நிறைய இழந்திருக்க வேண்டும்.
*****-
துரைராமன் சென்னையே கதி என்று கிடந்தவன்.
அந்தனூர்பற்றி அறிவு குறைவு அவனுக்கு.
கிட்டாவய்யாவையே மலைபோல நம்பி ஏமாந்தவன்.
இப்போது கிட்டா இருப்பது எதிரணியில்.
இடியாப்பச் சிக்கலாய் சுற்றிக்கொண்டது பிரச்சனை.
பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டுக் குவியலாய் அவன் முன்
கிடக்கும் சிக்கல்களை எப்படி அணுகுவது என்பதைப் பற்றி, சிறிதளவுக் கூட ஞானம் இல்லாத துரைக்கு விழி
பிதுங்கியது.
எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
“மேற்கொண்டு
என்ன செய்யணும் துரை; எப்படிச் சமாளிக்கணும்...?”
அவனைப் பார்த்துக் கேட்கிறாள் அம்மா.
துரை இப்போதுக் குடும்பத்தலைவன்.
முடிவெடுக்க வேண்டியது அவன் கடமை.
சுயமரியாதை இடித்தது துரைக்கு.
ஏதாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.
அனுபவத்தில் பழுத்த குந்தலாம்பாள் எதை எதிர் பார்த்தாளோ அதைச்
சொன்னான் துரை.
*****-
“நாளைக்கு வான்னு சொன்னது நீதானேம்மா. நீயே முடிவு சொல்லு நான்
கேட்டுக்கறேன்...!”
அவள் கை விரல்களை எடுத்து அவள் கண்களில் குத்தும் செயல்.
கீழ்த்தரமான தப்பித்தல் குணம்.
கையாலாகாதவனின் மொக்கையான ஆயுதம்.
‘தாய் அறியாத சூல் உண்டா...?’
குந்தலாம்பாளுக்குத் துரைராமனின் இயலாமையும், பயமும், குழப்பமும்,
கையாலாகாத்தனமும் தெரியாதா என்ன?
இருந்தாலும் பெற்ற மகனை மருமகள் முன் விட்டுத்தர முடியாதல்லவா...!’
தொண்டையைச் செருமிக்கொண்டாள் குந்தலா. ஆழ்ந்து யோசிப்பதாகக் காட்டிக்கொண்டாள்.
ஒரு முடிவுக்கு வந்தவள் மாதிரிப் பேசினாள்.
“கலியன் பிரச்சரனையை ரொம்ப ஜாக்கிரதையா அணுகணும்
துரை;
உங்க அப்பா புத்திசாலிதான். எதுலயும் சிக்கக் கூடியவரில்லை அவர்;
‘ஸ்ட்ராங்கா’ எதுவும் எழுதிக்
கொடுத்திருப்பார்னு எனக்குத் தோணலை;
பொருத்திருந்து பார்ப்போம்... ஆண்டவன் விட்ட வழி...!”
நாடகத்தில் தன்னுடைய பாத்திரத்தை நேர்த்தியாகச் செய்து முடித்தாள்
குந்தலாம்பாள்.
‘பெற்ற மகனிடமே நடிக்கவேண்டியிருக்கிறதே...!’
மனசு வியாகூலப்பட்டது.
‘ஊர் பொது நன்மைக்காகத்தானே...!”
சமாதானமும் செய்துகொண்டாள்.
*****-
துரைராமன் எதையோ மனதில் குழப்பிக் கொள்வதுத் தெளிவாக முகத்தில் பிரதிபலித்தது.
“துரை...! வக்கீல் யாரையாவது கலந்துப்போமானு தோணறது எனக்கு...!’’
நூல் விட்டுப் பார்த்தாள் குந்தலாம்பாள்.
உனக்கு இப்பத்தான் அந்த ஐடியா தோணறது. எனக்கு ஏற்கெனவே
தோணியாச்சு. ஒரு வக்கீலையும் பாத்துட்டேன்...!”
“அப்படியா...! என்ன சொல்றார் வக்கீல்...?”
“காலத்துல குத்தகை நெல்லு சரியா அளந்து, நாம அவன்
அளந்ததுக்கு கை ரசீது எழுதிக் கொடுத்திருந்தா சட்டப்படி காலி பண்ண
முடியாதுன்னுட்டார் வக்கீல்.”
“அப்பறம்...?”
“அப்பறமென்ன... அவன் பேர்ல பொய்ப் பிராது ஜோடிச்சி கேஸ்
ஃபைல் பண்ணித்தான் வெகேட் பண்ணியாகணும்.”
“பொய் கேஸ் ஜோடிக்கறது தப்பில்லையோ தொரை...?”
“முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்மா. கலியன் விஷயத்துல தர்ம
ஞாயம் பார்த்தா, தலைல துண்டு போட்டுக்க வேண்டியதுதான்...!”
“பொய் கேஸ் ஜோடிக்கறது அப்படி ஒண்ணும் சுலபமான விஷயமில்லே
துரை. தெருவுல நமக்குச் சாதகமா ஒருத்தர் கூடக் கிடையாது;
உபகாரம் பண்ண
இல்லேன்னாலும அபகாரம் பண்ண, குழீல பிடிச்சித் தள்ளத்தான் நிறைய ஆசாமிகள் இருக்கா நமக்கு.
அதையெல்லாம் யோசிக்கணும்...!”
சற்றேப் பேச்சை நிறுத்திவிட்டு, துரையின் மனதில் நிகழும் ரசாயன மாற்றத்தை
உற்றுக் கவனித்தாள்.
துரையின் மனக்குழப்பம் முகத்தில் பளிச்சிட்டது.
குந்தலாம்பாளே தொடர்ந்தாள்.
“தொரை, காசு பணம் கனிசமாக் கொடுத்து நாமப் பொய்ச்
சாட்சிக்கு ஜோடிச்சிக் கேஸாடினவா இந்த ஊர்ல உண்டு. கை நீட்டி காசு வாங்கினவன், சாட்சி சொல்ல கோர்டுப் பக்கம் வராம கம்பி நீட்டிட்டான்;
கேஸாடின சேஷய்யா, கருப்புப் பிச்சை, ஞானசேகரம் பிள்ளை
யாருமே கேஸ்ல ஜெயிக்கலை;
விட்டுக் கொடுத்துத்தான் விலகியிருக்கா...;
நல்லது-கெட்டது எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிண்டு காரியத்துல எறங்கணும்;
தத்துப்பித்துன்னு ஆழம் தெரியாம காலை விட்டுட்டு அவஸ்தைப்
படக்கூடாது...!”
*****-
அம்மா சொல்கிற அனைத்து யதார்த்தங்களையும் உள் வாங்கிய துரைக்குத் தலையைச்
சுற்றியது.
நிதானமில்லாமல் தவித்தான்.
‘சிறிது நேரம் தவிக்கட்டும்...!’
என விட்டாள் குந்தலாம்பாள்.
“எனக்கு வேறு ஒரு யோசனை தோணறது தொரை. சொல்லட்டுமா...?”
பிரச்சனையைத் தீர்க்க வழி தெரியாமல், தவிப்பான நிலையில், யார்,
எதைச் சொன்னாலும் ஆர்வமுடன் கேட்பார்களல்லவா...?
‘எத்தைத் தின்றால்
பித்தம் தெளியும்...!’ என்ற நிலையில் இருந்தான் துரைராமன்.
“சொல்லும்மா...?”
விழிவிரித்து உன்னிப்பாய், ஆர்வமாகக் காது கொடுத்தான்.
“கொஞ்சம் ஆறப்போட்டு அப்பறமாப் பேசினா என்ன?”
‘அம்மா ஏதோ புதுமையான யோசனை சொல்லப் போகிறாள்...!’
எதிர்பார்த்து ஆவலாய்க் காத்திருந்தவனுக்கு இந்த யோசனைப்
பயித்தியக்காரத்தனமாகப் பட்டது.
“அம்மா...! என்ன பேசறே நீ...! நீ சொல்றது சுத்தப் பயித்தியக்காரத்தனம்...!”
“இதுல என்ன பயித்தியக்காரத்தனம் இருக்கு. ‘எடுத்தேன் கவுத்தேன்’ னு
ஒரு காரியம் செய்யப்படாது துரை...!”
“கலியன் விஷயத்துல உன் யோசனை தப்பும்மா. சூட்டோட சூடா
முடிக்காம வளரவிட்டோம்னா, அது ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ன்னு
ஆயிடும். அவன் இன்னும் தன் எவிடன்ஸை ஸ்ட்ராங் பண்ணிக்க நாமே இடம் கொடுத்துட்டதா
ஆயிடும்.”
“இந்தக் கோணத்துல நான் யோசிக்கலை. நீ சொல்றதும் ஒரு
விதத்துல சரிதான்.”
தன் கருத்துக்களை மற்றவர் ஆமோதிக்கும்போது, கருத்துச்
சொன்னவருக்குத் தன்னம்பிக்கை வருகிறது.
தன்னம்பிக்கையோடுத் தன் முடிவைச் சொன்னான். துரைராமன்.
“அம்மா... சாட்சிக்காரன் கால்ல விழறதைவிட சண்டைக்காரன்
கால்ல விழறது புத்திசாலித்தனம் சொல்லுவாளே. அதுபோல நாமே கலியன் கிட்டே இத்தனை காணி
உனக்கு விட்டுத்தரோம்னு ஒரு டீல் பேசி காதும் காதும வெச்சாப்ல முடிச்சிடலாமேம்மா...!”.
‘மகன் வாயிலிருந்து எந்த முடிவு வந்தே தீருமென்று...!’
மாதய்யா இருந்தவரை நம்பினாரோ;
எது வரவேண்டும் என்று, இப்போது குந்தலாம்பாள் எதிர்பார்த்தாளோ...
அது துரைராமன் வாயிலிருந்து வந்துவிட்டது.
“... ... ... ... ... ... ... ... ...”
குந்தலாம்பாள் இதற்கு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
*****-
சில யோசனைளை உடனே ஒத்துக்கொண்டால் மதிப்பிருப்பதில்லை.
ஒத்தி ஒத்திப் போடும்போது, யோசனையின் கனம் அதிகரிக்கிறது;
ஒரு கட்டத்தில் அதுதான் சரியான யோசனை என்கிற தீவிரம் வருகிறது.
“தொரை...!”
“சொல்லும்மா...!”
“நீ சொல்றது எனக்குச் சரியாத்தான் படறது;
வக்கீலையும் நன்னாக் கலந்துக்கோ தொரை;
அவாளுக்குத்தான் சட்ட நுணுக்கம் தெரியும்;
நல்லது-கெட்டது எடுத்துச் சொல்லுவா...!”
“எத்தனை வக்கீலைப் பார்த்தாலும் இதையேத்தான் சொல்லுவாம்மா.
ஒக்காந்து திங்கற நமக்குச் சாதகமா சட்டங்கள் கிடையாது.
உழுது உழைக்கறவனுக்குத்தான் சட்டமும் சாதகம் பண்ணும்...!”
“அதுதானே தர்மம். அதுதானே சமூக நீதி...!”
என்றாள் குந்தலாம்பாள்.
அவள் குரலில் கம்பீரம் இருந்தது.
*****-
குந்தலாம்பாள் சொன்னது, துரையின் யோசனைக்கு மேலும் வலு சேர்த்தது.
“கோர்ட்டு கேசுன்னு போனா பத்துல ஆறு (6/10)
பங்கு நிலம் அவனுக்கு விட்டுத் தரச்சொல்லித் தீர்ப்பாகும்;
நாமா பேசித் தீத்துனுட்டா நமக்கு லாபம்தான்;
ஆனா ஒண்ணு, அவன் இதுக்கு ஒத்துக்கணும்;
கிட்டாவய்யா மாதிரி யாராவது கலியனைக் கலைக்காம இருக்கணும்...!”
முடித்தான் துரை.
பெற்ற தந்தையின் கடைசீ ஆசையை பிரேதத்தின் முன்னால்
எடுத்துச் சொல்லிக் கதறியபோது, அலட்சியம் செய்தவன்;
அப்பாவின் தலைத்திவசத்தின்போது நயா பைசா செலவுக்குத் தராமல்
இருந்தவன்;
சாகும் வரை அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசாதவன்;
இப்போது அப்பா விட்டுப்போன சொத்துக்களின் மூலம் கிடைக்கும்
வருமானத்திற்காக அலைகிறான்.
இப்படிப்பட்டச் சுயநலக்காரனை பத்து மாதம் வயிற்றில் சுமந்த்தற்காக
தன்னையே நொந்துகொண்டாள் குந்தலாம்பாள்.
அவனைநினைக்க நினைக்க வெறுப்பாக இருந்தது;
வெறுப்பை விட அருவருப்பாக உணர்ந்தாள் குந்தலாம்பாள்.
தான் லாபம் அடைய வேண்டும் என்று பொய்க் கேஸ் ஜோடிக்கத்
துணிந்தத் துரைராமன் மேல் அசூயை வந்தது.
குமுறி வந்த எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக்
கொண்டாள்.
“ஈஸ்வரோ ரக்ஷது’
வாய்விட்டுச் சொன்னாள் குந்தலாம்பாள்.
“படுத்துத் தூங்கு துரை, விடிஞ்சா பொங்கல்
பண்டிகை. நிறைய வேலை இருக்கு...”
கட்டிலில் சாய்ந்தாள் குந்தலாம்பாள்.
தொடரும்...
'கலியன் மதவு' நாவலின் 25-வது அத்தியாயம் அந்த காலத்து சங்க கால பொங்கலிருந்து, இந்த காலத்து பொங்கல்வரை அந்த கிராம திருவிழாவின் அழகை,சிறப்பை மிக அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. அதைபோல ஜல்லிக்கட்டு, தமிழர்களின் மரபு, காதல், கலியாட்டமென்று எல்லாமே நினைவுக்கு வந்தது.
ReplyDeleteகலியன் என்ற நல்ல விசுவாசியான சேவகனுக்கும், கள்ளமும் கபடுமான துரைராமன் என்ற புது எஜமானனுக்கும் நடக்கும் மனப்போராட்டமும் சம்பவங்களும் மிகவும் சிந்திக்க வைத்தது.
கலியன் மதவு எல்லாவகையிலும் விரிவாகவும் சிறப்பாகவும் தனித்தன்மையுடன் உயர்ந்த நாவலாக மனதில் நிற்கிறது. ஜூனியர் தேஜ் சார், இந்த நாவல் காலாகாலத்துக்கும் தங்கள் பெயரைச் சொல்லும்.
-சின்னஞ்சிறுகோபு.