கலியன் மதவு (அத்தியாயம் 27)


கலியன் மதவு (சமூக நாவல்)          -ஜூனியர் தேஜ்

அத்தியாயம்-27   (அடுத்த பதிவில் முடியும்)

( ஆனந்த விகடன் –16 - 01 -2023)

ந்தனூர் அக்ரஹாரத் தெருவில் நாற்பது வருடங்களுக்கு முன், தன் தாத்தா, ஐந்தாயிரம் ரூபாய்க்கு, வடமதுரை குஞ்சிதபாதத்திற்குக் கிரயம் செய்துவிட்ட வீட்டை, இப்போது, அதே பார்ட்டியிடமிருந்து, ஐந்து லட்சத்திற்கு வாங்கிய இஞ்சினியர் திருநாவுக்கரசு, மொத்த அந்தனூருக்கும் பேசு பொருளானார்.

திருச்சி, மெட்ராஸ், டில்லி, கல்கத்தான்னு மாறி மாறிப் பிழைப்புக்குப்  போற இந்தக் காலத்துப் பசங்களுக்கு நடுவுல, தனதுத் தாத்தா வாழ்ந்த இடத்தை வாங்கி, அதுல இருக்கணும்னு நினைக்கற திருநா’வ நெனைச்சாப் பெருமையா இருக்கு!;

கெட்டும் பட்டணம் சேர்னுவாங்க. இந்தத் திருநா, கிராமத்துக்குல்லத் திரும்பி வராறு;

ஏகப்பட்டக் காசு ஏறிப்போச்சு. ஒரு இன்வெஸ்ட்மெண்ட்டா, இதை வாங்கிப் போடுவாரா இருக்கும்?;

ஏதோப் பெருசா நெனச்சிக்கிட்டு வர்றாரு. கிராமத்துலல்லாம் அவராலக் காலந்தள்ள முடியாதுங்கிறேன்!”

வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்தார்கள்.

*****-

த்திரப் பதிவு முடிந்ததும், வீட்டை வந்துப் பார்த்தார் திருநா.

 தாத்தாவிடம் வீட்டை வாங்கின வடமதுரையார், எந்த மாற்றமும் வீட்டில் செய்யவேயில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இந்த நாற்பது வருடங்களில் இரண்டு அல்லது மூன்று முறை சுவற்றுக்கு வெள்ளை மட்டும் அடித்திருந்திருப்பதுத் தெரித்தது.

கடைசியாக, ஐந்து வருஷத்துக்கு முன், அதுவும் முன் கட்டுக்கு மட்டும் வெள்ளையடித்திருப்பதைத் தன் பொறியியல் அனுபவத்தால் அறிந்தார் திருநா.

*****-

நான்குக் கட்டு வீடு அது.

நான்காம் கட்டு, பெரிய மாட்டுத் தொழுவம்.

நெளித் தகரம் வேய்ந்த மாட்டுக் கொட்டகை;

பதினைந்து இருபது மாடுகள் தாராளமாகக் கட்டுமளவுக்குஹோ!’ வென்ற பிரம்மாண்டம்;

முறையாகப் பராமரிக்காமையால், சரிந்தும் சிதைந்தும் போய்விட்டது.

விழ விழ, நெளித் தகரங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டார் வடமதுரையார்.

விலைப் போகாத, மடித்துப் போன சாத்துக்களும், சரங்களும் வெந்நீர் அடுப்பில் ஆகூதி ஆகிவிட்டன.


இடிபாடுகளில் செடி கொடிகள் வளர்ந்து நின்றன;

நின்ற நெடுஞ்சுவரும் சீரற்று, வலுவிழந்திருந்தன..

மேற்கூரையைத் தாங்கிப் பிடித்ததற்குச் சாட்சியாகச், சுவற்றில் துருத்திக் கொண்டிருந்தன ஓரிரு கருங்கல் தண்டியங்கள்.

வளர்ந்த மரங்கள் நெக்கித் தரையில் தள்ளியத் தண்டியங்கள், சுவற்றோரம் பிசறிக் கிடந்தச் செங்கல் சல்லிகளும், ஓட்டாம்பாளமும் கலந்துக் குவிந்த முட்டுக்கு நடுவில் அரைகுறையாய்ப் புதைந்துக் கிடந்தன.


நடப்பட்டிருந்தக் கருங்கல் தூண்களில் சில நேராகவும், பல, சாய்ந்தும் நின்றன.

மாடுகளின் குளம்புகள் வழுக்காமல் இருக்கச் சொரசொரப்பானக் கருங்கல் பத்தைகள் பரத்தியத் தளவரிசை;

இரண்டுக்கு ஒன்று, ஒன்றுக்கு ஒன்று என்ற அடிக்கணக்கில் தளவரிசைக்காக அறுக்கப்பட்ட யானையடிக் கற்ளால் குத்துக்கல் பாய்ச்சிப் புருவம் கட்டப்பட்டிருந்தது.

கோமியம் பட்டுப் பட்டுப், பரவலாகப் பல இடங்களில் உப்பு அலர் அடித்துக் கரைந்து, ஒரு அசட்டுச் சிகப்பாய்ப் பல்லிலிளித்தது, புருவம்.

மூன்று துளைகளிட்ட, ‘மயில்-கல்வடிவில் நடப்பட்டக் கவணைக் கற்களை ஒட்டிப் பேயத்தி, உத்தராசு, எருக்கு என வளர்ந்து, கவணைக் கற்களைச் சாய்த்திருந்தது.

சில கவணைக் கற்கள் தெரித்துச் சிதைந்து, உடைந்திருந்தன.

பாறாங்கல்லால் வடிக்கப்பட்டத் தீனித்தொட்டியில், மண் நிரப்பித் துளசி வளர்த்திருந்ததற்கான அடையாளம் தெரிந்தது.

மாட்டுத் தொழுவம் இருந்ததற்குச் சாட்சியாக நின்ற அனைத்தையும் பார்த்து, மனதிற்குள் திட்டங்களைத் தீட்டினார் திருநா.

*****-

மேலண்டைச் சுவற்றிலிருந்து ஒன்றரை அடித் தள்ளி இரண்டடி உயரத்தில், வட்டக் கருங்கற்கள் மூன்று நின்றன.

பார்க்க, அம்மி போல இருந்தாலும், அது அம்மி இல்லை. தேங்காய் உரிப் பாரைக்கானப் பீடம்.

நடுவில் லிங்கம் போல் உரிப் பாரைநிற்கும்.


வருடத்திற்கு இரண்டுப் பாட்டம்கானம் போட்டுத் தேங்காய் எண்ணை ஆட்டும் பழக்கம் தாத்தாக் காலத்தில் உண்டு

பாட்டி, தேங்காய்க் கானம்பற்றிக் கதைக் கதையாகச் சொல்லிக் கேட்டதெல்லாம் இப்போது நினைவில் வந்தன.

திருநாவின் கண்கள் முன் காட்சிகள் விரிந்தன.

இலகுவாகத் தேங்காய் உரிக்க, ஆட்டமில்லாமல், விகுவாக நடப்பட்டிருக்கும் கடப்பாரைகள் இப்போது அதில் இல்லை.

*****-

க்ரஹாரத் தெருவை ஒட்டி இருப்பது வாணியத்தெரு.

வெயில் வந்தால் மாடுகள் களைத்துவிடும் என்பதால், விடிகாலையிலேயேச் செக்கோட்டம் தொடங்கிவிடும்.

இக்…..கீங்ங்ங்……..ஙீ...........கூஉஉஉஉ......ஙௌ....ஊஊஊஊ.......ஙே..............கீஈஈஈஈஈ... ...ஙௌ ஊஊஊ...... .........ஙீ ஈஈஈ......”

இப்படி, விநோதமாய்ச் சத்தங்களை வெவ்வேறுத் தாள கதிகளில் எழுப்பி, எண்ணைப் பிழியும் நாட்டுச் செக்குகள்தான் வாணியத்தெருவின் வாழ்வாதாரம்.

அந்தநூர் நாட்டுச் செக்கு எண்ணை உற்பத்தி நிலையம்

என்று, ‘டெம்பராக் கலர்ல், கோணலும்-மாணலுமாக, இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்ட கூண்டு வண்டிக்குள், திருகு பைப்வைத்த ட்ரம்கள் வரிசையாக இருக்கும்.

கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, என்று ஒவ்வொரு டிரம்க்கும் கீழே, உபரி எண்ணை சொட்டுக்களை ஏந்தச் சதுர வடிவில் சின்ன அலுமினியத் தட்டு கிடத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு எண்ணைக்கும் தனித்தனியாக முகத்தலளவைக் குப்பிகள் இருக்கும்.

அந்தந்த எண்ணைக்குக் கீழே இருக்கும் தட்டிலேயே அது வைக்கப்பட்டிருக்கும்.

வண்டியின் பின்னாலேயே, சுற்று-முற்றும் கஸ்டமர்களின் இருப்பைப் பார்த்தபடி, நடந்து வருவார் சம்பந்த வாணியரின் தம்பி கலியமூர்த்தி.

கஸ்டமர்களுக்கு எண்ணை அளந்து ஊற்றுவது அவர்தான்.

அடடா! ‘பைப்திறந்ததும் அரைக்கால் கம்பி போல, அமைதியாக எண்ணைக் இறங்குமே!

கண் கொள்ளாக் காட்சி.

குவளைப் போல விளிம்பற்ற அளவையில் பிடித்த எண்ணையை, சீசாவின் குறுகிய வாயில், புனல் திணித்துத், டக்கென லாகவமாய் எண்ணை ஊற்றும் வாணியச் செட்டியாரின் திறமையேத் திறமை!

சமயத்தில், அளவையின் ஒரத்தில் வழிந்துவிட்டால், கீழிருந்து மேல் நோக்கி, இரண்டு விரல்களால் வழித்துச், செவ்வகத் தட்டின் விளிம்பில் வழிப்பார்;

வண்டிக் கூண்டில் தொங்கும் துணியில், அழுந்தக் துடைத்துக் கொள்வார் விரல்களை.

வண்டியின் மேற்கூரையின் முன் முகப்பில், வெண்கல மணி, தொங்கும்.

டண்... டண்... டண்... டண்...”

சீராக, மணி அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டி வருவார் சம்பந்த வாணியர்.

வாணியஞ் செட்டியார் என்றும் சொல்வதுண்டு.

யார் யார் வீட்டில் வழக்கமாக எண்ணை வாங்குவார்களோ, அவர்கள் வீட்டு வாசலில் மாடு, தானாகவே நிற்கும்.

பழக்கத் தோஷம்.

தெலுங்கு பேசும், சம்பந்த வாணியர் குடும்பத்தைத். தெலிகுலாஎன்பார்கள் ஊரார்.

ஏங்கா உந்நாரு ஸம்பந்தகாரு? பாக உந்நாரா?”

அவரைத் தெலுங்கில் குசலம் விசாரித்தால், 50 மில்லிக்குக் குறையாமல் கொசுறு எண்ணை ஊற்றுவார் செட்டியார்.

*****-

ண்டியை விட்டு  நான்கு ஐந்தடித் தள்ளி நின்றால் கூட நல்லெண்ணையின் கம்என்ற வாசனை மூக்கைத் துளைக்கும்.

இப்படி, கிராமங்களில் எத்தனை எத்தனையோப் பழமைகளைப் போலத்  தடமழிந்து விட்டது நாட்டுச் செக்கு இருந்த இடமும்.

செக்கு இருந்ததற்கு அடையாளமாக, இப்போது கருங்கல் அடிப்பாகம் மட்டும் தரையில்  புதைந்துக் கிடந்தது.

நுகத்தடியை ஒரே சீராக அழுத்திப் பிடிக்க, முன்பாரமாகக் கிடத்தும், அம்மிப் போன்றச் செவ்வக வடிவக் பாறாங்கற்கள், இப்போது வாணியஞ்செட்டியார் கடைக்கு முன்னேப் படியாகக் கிடந்தன.


புதைந்துக் கிடந்த அடிப்பாகத்தின் பக்கவாட்டில், வளர்ந்த நுனா, பேயத்தி, உத்தராசு, அரசு,.......இத்யாதி மரங்களை, அவ்வப்போது மேல் மட்டத்தில் வெட்டி வெட்டி விட்டதால், அடிப் பெருத்து, வேர் வீசிப் புடைத்துத் துருத்திக்கொண்டு நின்றன.

நட்டு வைத்த தீவட்டிகள் சிகப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வான் நோக்கி எகிறுவதைப்போல

வேரடியிலிருந்து பானம் போல் கிளம்பி, உயர்ந்த போத்துக்களில் இலைகளும் தளிர்களுமாய் கொழுந்துவிட்டுப் பசுமையாய் எகிறின..

செக்குக்குள், லிங்கம் போல நின்றுச் சுழன்றுச் சரக்கை நசுக்கி எண்ணைப் பிழியும் பிழிக்-கட்டை; அல்லது குழவிக் கட்டை;

வட்டப் பாதையில் சுற்றி வரும் மாடுகளின், கழுத்தில் கிடக்கும் நுகத்தடி.

குத்துக் கட்டைகளையும் நுகத்தடியையும் இணைக்கும் அச்சுக் கட்டை, எதுவும் இப்போது இல்லை.

    அநேகமாக, நாளாவட்டத்தில், எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தீமிதிக் குழிக்குக் கொடுத்துக் காலி செய்திருப்பார்களாக இருக்கும்.

*****-

மூன்றாம் கட்டு, பெரும்படிச் சமையலுக்கானது.

நீளமானக் கோட்டை அடுப்புதான் பிரதானம் அந்தக் கட்டில்.

மூன்றாம் கட்டிலும் ஒரு கிணறு உண்டு.

கல்யாணச் சமையல் என்றால், கங்காளம், ஜோடு தவலை... என்று பெரியப் பெரியப் பாத்திரங்கள் அலம்பிக் கவிழ்க்க விஸ்தாரமான கிணற்றடி..

சமையல் பாத்திரங்களை அடுக்க; வாகாய் எடுக்க; அலம்பிய பாத்திரங்களை வாட்டமாய்க் கவிழ்க்க, வசதியான மேடை.

காய்கறிகளைக் காற்றோட்டமாய்ப் பரத்தி வைக்கப், பிரத்யேகமாக ஜன்னல், வெண்டிலேட்டர்கள்.

கீழண்டைத் தாய்ச் சுவற்றில், மளிகைச்சாமான், அரிவாள் மனை, சீவுக் கட்டை, சேவை நாழி, அச்சு வில்லைகள்... என வைத்துக்கொள்ள அகலமாய் ஐந்து ஸ்லாப்புக்கள் போடப்பட்ட அலமாரி.

எல்லாமே, அடையாளமாகத்தான் இருந்தன இப்போது.

சமையல் கட்டும், இரண்டாம் கட்டும் இணையும் ரயிலோட்டுச் சார்ப்பில் ஊட்டமாக வளர்ந்து நின்றது நுனா;

கிணற்றின் உள் வளைவுளில் வேரூன்றிவிட்டது அரசு;

சுற்றிலும் வளர்ந்து, தளத்தைச் சிதைத்து நிற்கும் பேயத்தி.


பாழும் கிணற்றில், ஏதேனும் ஜந்துக்கள் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில், மாட்டுத் தொழுவம் பிரித்த வளைவுத் தகரத்திலொன்றை குறுக்கேப் பாலம்போல் போட்டு மூடப்பட்டிருந்தது.

*****-

ல்ல அனுபவம் உள்ள இஞ்சினியர் என்பதால், மனசுக்குள் எஸ்டிமேட் போட்டார் திருநா.

திருச்சிக்கும் அந்தனூருக்கும் அலைந்து அலைந்துப் பழைய வீட்டை செப்பனிடுதல் சிரமம் என்பதை உணர்ந்தார்.

முதலில் முன் கட்டில், சுவற்றுக்கும் சீலிங்குக்கும் பொக்கைப் போறை பார்த்து நெற்றி பூசிப் பட்டி பார்த்து சுண்ணாம்படித்தார்,

அருகால், கதவுகள், ஜன்னல், அட்டை, இதெற்கெல்லாம் வார்னிஷ் அடித்தார்

முன்கட்டு, புதுப்பிக்கப்பட்டதும், ஒரு நல்ல நாள் பார்த்து, நவக்ரஹ ஹோமம் செய்து, பால் காய்ச்சிக் குடித்து, குடும்பத்தோடு அந்தனூரில் குடியேறினார்.


தொடர்ந்து, இரண்டாம் கட்டு; மூன்றாம் கட்டு, எனக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களில் மொத்த வீட்டையும் செப்பனிட்டுப் புதுப்பித்துவிட்டார் திருநா.

நடுநடுவே சுப்பாமணி மாமா கேட்டுக் கொண்டதால், கலியனின் நிலத்தில் செய்யவேண்டியவற்றிற்கான ப்ளான்போட்டார்.

கலியன், சுப்பாமணி, குந்தலாம்பாள் அனைவரும் உட்கார்ந்துப் பேசித் தேவையான மாற்றங்களைச் செய்து, ‘ப்ளான்போட்டு முடித்தார் திருநா.


தற்கு நடுவே, கலியனை விவசாய ஆபீசுக்கு அழைத்துச் சென்றார்.

விவசாய ஆபீசர் சேதுராமன் சாரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அடுத்தத் தைப் பொங்கலுக்குள், என்னென்னப் பயிரிட்டால் லாபகரமாக இருக்கும்’,

என்பதை விவசாய ஆபீசர் சேதுராமன் கலியனுக்குப் எடுத்துச் சொன்னார்.

அனுபவத்தில், நிறைய விவசாய நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும், விவசாயப் படிப்புப் படித்த, சேது அய்யாவின் வழிகாட்டுதல் கலியனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அதோடு இரண்டு, மூன்று வகையன புதிய ‘ஹைப்ரீட்’ விதைகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

புதுசாக் கண்டுபிடிச்ச வகைங்க, கலியா!.”

அப்பிடிங்களா..?”

வீரிய ஒட்டு ரகங்கள். இதுங்களை விதைச்சி அறிமுகப்படுத்தினா, மானியம் தருவோம்!”

விளக்கமளித்தார் சேதுராமன்.

*****-

விவசாய ஆபீசர் சொன்ன விபரங்களை குந்தலாம்பாளிடம் வந்து சொன்னான் கலியன்.

சேதுராமன் சார் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவர் சொல்றபடியேச் செய்வோம் கலியா. சிறப்பா விளையும்.”

ஊக்கப்படுத்தினாள் குந்தலாம்பாள்.

...ம்...மா!”

தயக்கத்தோடு அழைத்தான் கலியன்

சொல்லு கலியா, ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

எப்பவும் போல...  நீங்கதான் ... வந்து வெவசாயத்தைப் பார்க்கணும்மா!”

தயங்கியபடியேக் கேட்டான் கலியன்.

அதுக்கென்ன? வந்தாப் போச்சு!…”

வழக்கம்போல குந்தலாம்பாள் வயல்காட்டில் வந்து நின்றாள்.

விவசாய இலாக்காக் கொடுத்த உளுந்து விதைகளை முறையாக விதைத்தான் கலியன்.

*****-

வ்வப்போது விவசாய இலாக்காவிலிருந்து, ஃபீல்டு ஆபீசர்கள், வந்து விளைச்சலைப் பார்ப்பதும் போவதுமாக இருந்தார்கள்.

புகைப்படம் எடுத்தார்கள்.

வகை மாதிரிகைளை சேகரித்துச் சென்றார்கள்.

விதைகளின் வீர்யத்தை அவ்வப்போது சோதித்தார்கள்.

தை மாதம் விதைத்த உளுந்து;

விதைத்தவுடன் ஒரு தண்ணீர் விட்டாயிற்று;

பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளில் பாய்ச்சியாயிற்று;

10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் மட்டும்தான் வேலை;

வைகாசி மாதம்தான் அறுவடைக்கு வரும்.

*****-

றுவடைக் காலம் வரை, தானம் செய்வதற்கு முன் கோவில் சம்பாக் காணியில், செய்யவேண்டிய வேலைகளைக் கவனித்தான் கலியன்.

சித்திரைக் காய்ச்சல்.

கலியன் களத்துக்கு அருகில் காளவாய்க்கு மண் வெட்டிய பள்ளத்தில் தண்ணீர் வற்றிக் காய்ந்துவிட்டது.

ஆகாயத்தாமரைகளும், ஆங்காங்கே முளைத்திருந்த தாமரைகளும் அல்லியும் வதங்கிவிட்டன.

ரிவிட்மென்ட் வேலையைத் தொடங்கினார் இஞ்சினியர் திருநா.

கரூரிலிருந்து லாரிகளில் சதுரக் கருங்கல் ஸ்லாப் வரவழைத்தார்.

உள்ளூர் கொத்தனார்களும், கூலிகளையும் வைத்து குளக்கரை கட்டும் வேலை தொடங்கியது.

ஊர் நன்மைக்காகத், தன் மொத்த நிலத்தையும் தானம் செய்துப் பத்திரப் பதிவு செய்த கலியனை எல்லோருமே பாராட்டினார்கள்.

ஒரு கூலிக்காரனின் தர்ம சிந்தனை, ஊரிலுள்ள மற்றவர்களையும் சிந்திக்க வைத்தது.

இடது கைத் தருவது வலது கைக்குத் தெரியாமல்கலியன் குளம் அமைக்கப் பொருளுதவி செய்தார்கள் சிலர்.

பஞ்சாயத்துக்கு மூன்று ஏக்கர் நிலத்தை தானம் செய்த கலியனை மனதாரப் பாராட்டினார்கள் பலர்;

தங்கள் பங்கிற்கு சிலர் சம்பளமில்லாம் ஓரிரு நாட்கள் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்கள்.

கூலிக்காக வேலை செய்யாமல் ஊர் பொதுவுக்காக நேர காலம் பார்க்காமல் வேலை செய்தார்கள் பல உள்ளூர்வாசிகள்.

தான் வாங்கிப் புதுப்பித்த, தாத்தாக் காலத்துத் சமையல் கட்டில், சுவையாகவும் சத்தாகவும் சமைத்து, ஊருக்காகக் கடினமாய் உழைக்கும் உழைப்பாளிகளுக்குத் திருப்தியாகச் சாப்பாடு போட்டார் திருநா.


அவ்வப்போது குந்தலாம்பாள் வந்து, சமையல்கட்டில் நின்று சமையலைக் கண்காணித்தாள்.

திருநா, உன் தாத்தாக் குணம் அப்படியே உன்கிட்டே இருக்கு. ஊருக்குச் சாப்பாடு போடறதுல அவரை அவருக்கு நிகர் அவர்தான்.…”

இப்படி, அவ்வப்போது திருநாவைச் சிலாகித்துப் பேசுவாள் குந்தலாம்பாள்.

*****-

 விவசாய இலாக்காவோடு ஒண்றிணைந்து, பார்த்துப் பார்த்துப் பராமரித்தலாலும், ‘ஹைப்ரீட்’ விதைகள் என்பதாலும், வழக்கத்தை விட அதிமாகவே விளைச்சல் கண்டது.

உளுந்து அருவடைக்கு வரும் முன்பே, மானியப் பணம் கொடுத்தார்கள் இலாக்காவினர்.

மானியமாக வந்த பணத்தைப் போட்டு, சம்பாக் காணியில் பச்சைவெட்டுக் கல் கரைந்து மேடாகிக் கிடந்த காளவாய் மேட்டைச் சீரமைத்து களமாக நிரவினான் கலியன்.

கிட்டத்தட்ட அரை ஏக்கர் விஸ்தீரணத்தில் மிகப் பெரிய களம்.

சரியான பயித்தியக்காரனா இருக்கானே கலியன்!;

பாசனம் பண்ண முடியாம மேடிட்டுக் கெடக்கு. சரி. புஞ்சையா மாத்திப்பிடலாமே!;

அதுவுஞ்சரிதேன். தேக்கு, மகாகனினு மரங்களை வெச்சிட்டு, தென்னம்புள்ளைங்கப் போட்டு மண்ணுக்கு மதிப்பேத்தறதை வுட்டுப்புட்டு இப்படி ஊருக்குக் களங்கட்டறானே பித்துக்குளிப் பய.;

பூசர களம் இல்லேனு ஆயிட்டபிறகு, அறுவடைக்குக் களம் இல்லாம அவஸ்தைப் பட்ட நமக்குக், கலியன் பெரிய உதவி செஞ்சிட்டான்;

பூசர களம் போலவே கலியன் களத்துக்குப் பக்கத்துலயே, தாமரைக் கொளமும் இருக்கறது ரொம்ப வசதியா இருக்குதானே…;

ஏய் ! இது பூசர களத்தை விட ரெண்டு மடங்கு பெரிய களம்டா..”

ஊரெங்கும் கலியன் களம் பேசுபொருளாகிவிட்டது.

களம், ஊர்ப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

சுற்று வட்டாரத்தில் விவசாயம் செய்பவர்களும், அந்தக் களத்தைச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கலியன் களம் ரொம்ப வசதியா இருக்கில்ல...!

சிலாகித்துப் பேசினார்கள்; அந்தக் களத்தில், கட்டடித்துக் கண்டுமுதல் எடுத்தவர்கள்.

கலியன் களம் பிரபலமானது அந்தனூரில்.

நாலு புறமும் சுற்றுச் சுவரும், படிகளும்,  பாறாங்கல் ரிவிட்மெண்ட்டுமாய் அழகாகவும் வசதியாகவும் குளம் கட்டித் தந்த திருநாவை ஊரேப் புகழ்ந்தது.

ஆகாயத் தாமரையை அவ்வபோது நீக்கி, தாமரை மட்டும் செழிப்பாய் வளரவிட்டான்.

 களத்தையும், குளத்தையும் நேர்த்தியாய்ப் பராமரித்தான் கலியன்.

*****-

லியன் குளத்தில் நிறையத் தாமரை மலர்ந்தன.

மூங்கில் கழிகளால் கட்டிக் கிடத்திய மிதவையில் ஏறிப்போய் தினமும் தாமரை மலர் கொய்தான்.

கலியன் குளத்துத் தாமரை மலர்கள் தினம் தினம்  எல்லையம்மன் பாதங்களையும், குந்தலாம்பாள் வீட்டு பூஜையறையையும் அலங்கரித்தன.

*****-

நிலத்தைச் சாசனம் செய்துக் கொடுத்த நாளில், நட்டுப் பராமறித்த அரசும் வேம்பும், ஒரு வருஷ இளம் தம்பதியர்போல் தளதளவென்று செழித்து வளர்ந்திருந்தன.

காவிரிக்குச் சென்றுத் திரும்பும் மாமிகள், அந்த அரசு வேம்பு தம்பதியரைச் சுற்றி வந்து நமஸ்கரித்தனர்.

யாரோ ஒரு பக்தர் வேண்டுதல் நிறைவேற நாகர் சிலை ஒன்றை அங்கே பிரதிஷ்டை செய்தார்.

வெறும் மரத்தடி என்ற நிலை மாறி,  பக்திக்கும் மரியாதைக்கும்உட்பட்ட புனிதமான இடமாகத் தரம் உயர்ந்தது.


*****-    

மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் கண்டு முதல் கொண்டு செல்வதும், வைக்கோல் ஏற்றிச் செல்வதுமாக கலியன் களம் அறுவடை நாட்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே, பரபரப்பாகவே இருந்தது.

விஸ்தாரமாக இருந்ததால் வாழைத்தார் கூட அங்கே அடுக்கி ஏற்றினார்கள்.

கோவில் சம்பாக் காணி.’ என்ற விளியே சுத்தமாய் மறைந்துவிட்டது.

நல்ல உசரம் ஏத்திக் கெடக்கறதுனால, காத்துன்னா காத்து அப்படியொரு காத்து கலிங்களத்துல...;

இப்படி ஒரு களம் இந்த ஜில்லாவுலயே கெடையாதுங்கறேன்...;

கலியங்களத்துல தூத்தின நெல்லுதானே...! ஒரு கருக்காத் தங்காது...!” 

கண்ணை மூடிக்கொண்டுத் துணிந்து வாங்குவார்கள் வியாபாரிகள்.

*****-

யலை ஒட்டியக் கன்னி வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டது.

ரிவிட்மெண்ட் கட்டி ஆங்காங்கே புழங்குவதற்கு ஏதுவாகப் படிகள், சறுக்குகள் எல்லாம் வைத்து, கான்கிரீட் கால்வாயாக மாற்றியமைத்தது பஞ்சாயத்து போர்டு.

கலியங்களத்துக்கு வண்டி, டிராக்டர் எதுவும் போக முடியாம காங்கிரீட் தடுப்பை கட்டிட்டீங்க;

ரோடுலயே நிறுத்திக் கண்டுமுதல் ஏந்த வேண்டியதாயிருக்கு..

பாலங்கட்டிக் கொடுத்தாப் போக்குவரத்துக்கு சவுரியமா இருக்கும்

உபயோகிப்பாளர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தார்கள்.

பஞ்சாயத்துக் கூட்டத்தில் வற்புறுத்தினார்கள்.

கோரிக்கை வலுத்தது.

சுப்பாமணியின் செல்வாக்கை வைத்து நிர்வாகத்தை அணுகினார்கள்.

பாலம் மதகெல்லாம் கட்ட, ஃபண்டு எதுவும் கிடையாது. பர்மிஷம் தரோம், நீங்க செலவு பண்ணிக் கட்டிக்கிடுங்க... என்றார் தாசில்தார்.

*****-

 ய்யா வய இப்படியா ஆவணும்...?;

நல்லா வெளையற வய. இப்படிப் பாழடிச்சிட்டானே இந்தக் கலியன்’;

கலியனா பாழடிச்சான். ஏற்கெனவே மாதய்யா மவன்மூணே முக்கா நாழி முத்து மழைப் பெஞ்சாப்பல, காளவாப் போடறேன்னு இறங்கி வயலைக் கொதறித் தள்ளிப்பிட்டானே;

கொதறலை நிரவிட்டு விவசாயம் பாக்காம, போக்கத்த பய, இந்தக் கலியன், களமும் குளமுமா காலத்தைக் கழிக்கறானே;

எது எப்படியோ நமக்கு கட்டடிக்கத் தோதாக் களம் அமைஞ்சிருக்கு. விட்டுத்தள்ளு;

பதினைஞ்சி வருசத்துக்கு முன்னே உடையார் விட்டுப் போன களத்தையும், தாமரைக் குளத்தைத்தையும் அவுரு வாரிசுங்க வந்து துத்தாங்க;

ஆனா இந்தக் கலியன் களத்தையும் குளத்தையும் குறைஞ்ச பட்சம் இன்னும் இருபத்தைஞ்சி வருஷத்துக்கு யாரும் வந்து துக்கமாட்டாங்க;

ஏன் அப்படிச் சொல்றே...?;

கலியனுக்கு இன்னும் கலியாணமே கட்டலை. கலியாணமாகி, குளந்தை பிறந்து, அதுக்கு இருபது இருபத்தஞ்சி வயசு வளரணுமே...!

இப்படியெல்லாம் கலியனைப் பற்றியும் கலியன் குளம், களம், மதகு பற்றியெல்லாம் பேச்சுக்கள் பரவலாக இருந்தன.

*****-

லியன் பேசியபடி, இது கடைசீப் போகம் சாகுபடி அவனுக்கு.

சுப்பாமணியின் முயற்சியால், எல்லா பேப்பர்களும் சிக்கலில்லாமல் நகர்ந்தது போல, சாகுபடியும் சிறப்பாக நடந்தது.

எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம், கலியன் மதகு தொடங்கி பெரியவாய்க்கால் பாலம் வரை பஞ்சாயத்து சார்பில் கப்பி ரோடு போட்டார்கள்.

தாராளமாக இரண்டு லாரிகள் போய் வரும் அளவுக்கு அகலமாக இருந்தது ரோடு.

திருச்சி கரூர் பிரதான சாலைக்கு வெகு அருகில் இருந்ததால் கலியன் களத்துக்கும் கலியன் சாலைக்கும் இடைப்பட்ட அரை ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் டிபிசிஅலுவலகம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

அல்லூரின் கடைக் கோடியில், லாரி போய் வர இடைஞ்சலாக, சிறிய இடத்தில், குடியிருப்புப் பகுதியில் இயங்கிவந்த டி பி சிஅலுவலகத்தை அந்தனூரில் கலியன் களத்துக்கு அருகில் மாற்றினார்கள்.

அந்தனூர்க்காரர்கள் மட்டுமல்லாது, முத்தனூர், முருங்கப்பேட்டை, மல்லாச்சிபுரம், ஜீவபுரம் வரை இருக்கிற விவசாயிகள், விளைந்த நெல்லைக்  கண்டுமுதல் கண்ட கையோடு டிபிசில் சௌகரியமாக விற்றார்கள்.

டிபிசிஅதிகாரிகளும், வெளியூரிலிருந்து வரும் நெல் சற்றே ஈரப்பதத்துடன் வந்தால், ஒரு பகல், கலியன் களத்தில் காயவைத்து எடுத்து வரச்சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.

கலியன் ஊர்ப் பொதுவுக்காக  எழுதி வைத்த அந்தக் காணி, அந்தனூருக்கு மட்டுமல்லாது சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் மிகவும் உபயோகமாக இருந்தது.

*****-

பொறம்போக்கக் கட்டிகற இந்தக் காலத்துல சொந்த நெலத்தச் சமுதாயத்துக்குக் கொடுத்திருக்கற கலியனுக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாண்டா...!;

தர்மத்துக்கு வந்த சொத்து தர்மத்துக்கேப் போவுது...!;

கல்யாணங் கட்டிப் புள்ளை குட்டினு இருந்தா இப்படிச் செய்வானா...;

முத்தனூரு வளியா மணிக்கணக்கா பொணம் தூக்கற வலி குறைய வளி பண்ணிட்டான் கலியன்;

நல்ல காரியம் பண்ணிண்டிருக்கான்...!

******-

பூதான இயக்கம் வெச்ச வினோபா இப்போ இருந்தா அந்தனூருக்கு உடனே வந்து கலியனை வாழ்த்துவாரு

திருநா, ப்ருக்யூர்மெண்ட் ஆபீசரோடு பேசிக்கொண்டிருந்த போது சொன்னார்.

 மாதய்யா செய்ய நினைச்சதை கலியன் செஞ்சிட்டான்...!நெகிழ்ந்தார் ஆபீசர்.


அந்த நேரத்தில் வந்த கிட்டாவய்யா, குறுக்குச் சால் ஓட்டினார்.

ஊர் நாசக்காடா ஆகப் போறது சார்...!என்றார் ப்ரோக்கியூர்மெண்ட் ஆபீசரைப் பார்த்து.

ஏன் அப்படிச் சொல்றேள்...!

மாதய்யாவோட அப்பாவும் பரோபகாரிதான். அவர் நினைச்சிருந்தா இதே வயல்ல பாதை போட்டுக் கொடுத்திருப்பார். ஏன் செய்யலை...?

ஏன்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம், எதிரில் இருந்த திருநா முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது.

காலம் காலமா இருக்கற சிலதை மாத்தக்கூடாதுன்னுதான் செய்யலை. இந்த மாதய்யா...! புரட்சி பண்றதா நினைச்சி அந்த வயல் மூலம் குருக்களாத்துப் பையனை தூக்கிண்டு போனான். இப்போ! பொணம்போற பாதையாவே ஆயிடுத்து பாருங்க...!;

“.....................”

இந்தப் பாதையை என்னால ஒத்துக்க முடியாது...!” என்றார் கிட்டாவய்யா.

நீர் ஒத்துக்காட்டி போமேன். ஊர்ல நல்ல காரியம் அதும்பாட்டுக்க நடக்கும்...!” என்றார் ப்ரோக்யூர்மெண்ட் ஆபீசர்.

கிட்டா மாமா. ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பக்காவாப் பண்ணி, கலியன் பஞ்சாயத்துக்குத் தானம் பண்ணின காணி இது. இதுல நீங்க எதுவும் கலசல் பண்ண வழியில்லே. போயி வேற வேலை இருந்தாப் பாருங்க..!”

முதல் முறையாகத் தன்னிடம் இப்படி அலட்சியமாகப் பேசிய திருநாவை முறைத்தார் கிட்டாவய்யா.

என்ன முறைக்கறீங்க..?”

தம்பீ! என் சுயரூபம் தெரியாமப் பேசறீங்க..? அடக்கி வாசிங்க.!”

கிட்டாமாமா. எல்லாரையும் போல என்கிட்டே வாலாட்டினா ஒட்ட நறுக்கிருவேன்.!”

வரம்பு மீறி பேசறீங்க திருநா..!”

மாமா

மாமா…! இந்த அக்ரகாரத்துலயே உங்க மனைக்கட்டுக்கு மட்டும் இரண்டு பக்கமும் தாய்ச்சுவர் எப்படி வந்துதுனு சொல்ல முடியுமா?”

திருநா கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் கிட்டாவய்யா.

கிட்டாவய்யாவின் அப்பா, ஆங்கிலேய சர்வேயரோடு நடத்திய தில்லு முல்லுகளையெல்லாம் திருநா கோடிட்டுக் காட்டியபின் கப்-சிப்என்று அடங்கிப்போனார் கிட்டாவய்யா.

*****-

குளத்தங்கரை அரசமரத்துக்கு அடியில் பிள்ளையார்கோவில் கட்ட முடிவெடுத்தது ஒரு கோஷ்டி.

சிலர், ரசீதுப் புத்தகத்தையும், நாப்பது பக்க நோட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

காணும் பொங்கலண்ணிக்கு நம்ம ஊருக்கு  மாவட்ட ஆட்சியர் வரப்போவதாகச் செய்தி பரவியது.

கலெக்டர் இது போல சின்ன விழாவுக்கெல்லாம் வருவாராண்ணே...!

அறியாமையோடு, கேட்டான் ஒருவன்.

எது சின்ன விழா. நம்ம கலியண்ணன் தன்னோட மூணு ஏக்கர் நிலத்தை சமுதாயத்துக்கு விட்டுக் கொடுத்தது சின்ன விஷயமா?

ஊரு உலகமெல்லாம் சுத்தாம, நம்ம ஊரு பொணம் நம்ம ஊரு வளியாப் போறதுக்கு பாதை போட்டுக் கொடுத்திருக்கான்;

அவனைப்  பாராட்ட கலெக்டர் என்ன... பிரதம மந்திரியே வந்தாலும் தகும்னேன்...!

செரிதான்... செரிதான்...!

*****-

பொழுது விடிந்தால் போகிப் பண்டிகை.

பஸ்ஸ்டாண்டுக்குச் சென்று சென்னையிலிருந்து வந்த துரைராமன், மோகனா, ரஞ்சனி மூவரையும்,  வரவேற்று அழைத்து வந்தார் சுப்பாமணி மாமா.

     கலியன் தன் பங்கு நிலத்தை என்னென்ன செய்திருக்கிறான் என்பதையெல்லாம் காட்டிகொண்டே, கலியன் பாதை வழியே அவர்களை அழைத்து வந்தார் சுப்பாமணி.

கலியனுக்கு தான் செய்த உதவிகளையும் சுப்பாமணி சொன்னார்.

கலியன் மதவருகில் நின்றான் துரை.

களம்,குளம்,பாதை எல்லாவற்றையும் தீர்க்கமாகப் பார்த்தான்.

சுப்பாமணி மாமாவையும் பார்த்தான்.

குத்தகைச் சீட்டு பத்திக் கலியனோட பேசினேளா மாமா..? நாளைக்கு கெடு வெச்சிருக்கான்.

பேசினேன்...!என்றார் சுப்பாமணி.

அதே சமயம்இப்படி ஒரு அல்பப்பயலாய் இருக்கிறானே இந்த துரை...!

தனக்குள் நொந்து கொண்டார்.

*****-

போகியன்றுக் காலை, சொன்னச் சொல் தவறாமல் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தான் கலியன்.

சுப்பாமணி மாமா சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்.

மாதய்யாக் கொடுத்த அனைந்துக் குத்தகைச் சீட்டுக்களையும், ஒன்றும் எழுதாமல் கையெழுத்துப் போட்டப் வெற்றுக் காகிதங்களையும், எல்லாரிடமும் பிரித்துக் காட்டினான் கலியன்.

சுப்பாமணி, குந்தலாம்பாள், மோகனா, துரை ஆகியோர் முன்னிலையில் போகித் தீயில் அவற்றைப் போட்டான்.

போகித்தீ ஹோமாக்ன போல தழல் விட்டு எரிந்தது.


 

அடுத்த பதிவில் முடியும்

 

 *ஜூனியர் தேஜ்* சார், தங்களது *கலியன் மதவு* நாவலை வழக்கம்போல  ஆர்வத்துடன் விரும்பிப் படித்தேன். இந்த நாவல் முடியப்போகிறது என்பதை நினைக்கும்  போதே மனதில் இனம்புரியாத வருத்தம் ஏற்படுகிறது.


----------------------------------------




  அந்தனூர் அக்ரஹாரத் தெருவில் தனது பூர்வீக வீட்டை, இன்சினியர் திருநாவுக்கரசு வாங்கியதால் அவர் கிராமத்தில் பேசு பொருளானார். அவர் அந்த வீட்டை வாங்கிய பிறகு வந்துப் பார்த்தக் குடியேறுவது வரை, அந்த வீடு அந்த காலத்திலிருந்து அந்த கதை நிகழும் இந்த காலம்வரை இருந்த சூழ்நிலையெல்லாம் விவரித்திருக்கும் விதம் அந்த சூழ்நிலையை நம் கண்ணுக்கு முன் கொண்டு வருகிறது. இடமும் சூழ்நிலைகளும் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் மாற்றமடைகின்றன என்பதை மிகச் சிறப்பாக இந்த நாவல் உணர்த்துகிறது.

  கலியன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுடன், அந்த ஊரில் ஏற்படும் மாற்றங்களையும் நினைக்கும்போது மனதில் ஆயிரமாயிரம் என்ன ஓட்டங்கள். அதுவும் அந்த ஊரிலிருந்த செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்தவர்களைப் பற்றியும், அந்த எண்ணெய் வியாபாரத்தைப் பற்றியும் படிக்கும்போதே, நமக்கும் எண்ணெய் வாசனையடிப்பது போலிருக்கிறது.

  ஊர், வீடு, மனிதன் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அதன்தன்மை மாறாமல், மாறியதையும் மாறாததையும் அப்படியே நாவல் உணர்த்துகிறது. தனித்தன்மையுடன் தமிழில் ஒரு குறிப்பிட தகுந்த நாவலாக திகழ்கிறது கலியன் மதவு. இந்த நாவல் புத்தகமாக வெளிவரும்போது இதன் சிறப்பை பலரும் உணர்வார்கள். பாராட்டுகள் சார்.

-சின்னஞ்சிறுகோபு.

💐

 


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)