கோபு சார் அவர்களின் கலியன் மதவிற்கான விமரிசனம்

கலியன் மதவிற்கான விமரிசனம் 

தமிழகத்தில் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான 

திருமிகு சின்னஞ்சிறு கோபு அவர்கள்.


எனது பார்வையில்... ஜூனியர் தேஜ்’ன் கலியன் மதவு

அத்தியாயங்கள் 1 முதல் 6 முடிய

நமது நண்பர் ‘ஜூனியர் தேஜ்’ அவர்கள் எழுதும் 'கலியன் மதவு'  என்ற தொடர்கதையை நமது அமைப்பில் எத்தனைபேர் படிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் படிக்க ஆரம்பித்தால் நீங்கள் ஒரு   தமிழக கிராமத்திற்குச்சென்று அங்கேயே வாழ்ந்து வருவதைப் போன்ற ஒரு உணர்வை நிச்சயம் பெறுவீர்கள்.

மிகவும் நுணுக்கமான எழுத்து.கதாபாத்திரங்களைக் கண்முன் அப்படியே உலாவவிடும் தன்னிகரற்ற எழுத்து.

கிராமத்து மண்ணின் மணம் அப்படியே இந்த நாவலில் இருக்கிறது. வயல்வெளிகள், விவசாயம், விவசாயம் சார்ந்த காளவா போன்ற தொழில்கள், தெருக்கள், வீடுகள்,மாடுகன்றுகள், சிறுவர்களின் விளையாட்டுகள், அவர்களின்மன உணர்வுகள் என்று ஜூனியர் தேஜ் அசத்துகிறார்.

ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இப்படியெல்லாம் எழுத முடியாது. இப்படி ஒரு கிராமத்தின் அழகியலை அப்படியே கொண்டுவரும்   நாவல் எதையும் நான் சமீபகாலத்தில் படித்ததில்லை.

        இந்த நாவலுக்குப் படங்கள் சேர்ப்பதிலும் ஜூனியர் தேஜ் தனிக் கவனம்செலுத்தி வருகிறார். அது இந்த நாவலில் மனம் ஒன்றி திளைப்பதற்கு மேன்மேலும் உதவுகிறது.

       இந்த நாவல் இதுவரை ஆறு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த ஆறு அத்தியாயங்களை படித்ததிலிருந்து நான் அசந்துப்போய் ஆயிரமாயிரம் மலரும் நினைவுகளில் மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் நம்ம ஜூனியர் தேஜ்ஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்நாவலை படித்து பாருங்களேன்!

அத்தியாயம் 7

இந்த அத்தியாயத்தின் அழகும், விறுவிறுப்பும் மனதை அப்படியே அள்ளுகிறது. காட்சிகளும், அதற்கு தாங்கள் வரைந்திருக்கும் ஓவியங்களும் கண்முன் அப்படியே உண்மைபோலவே விரிந்து நம்மையும் அங்கே கொண்டு செல்கிறது. தங்களுடைய ஆழ்ந்த கூர்மையான அனுபவமும், எழுத்து நடையும் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது. கதை கொஞ்சம் 'திக் திக்'கென்று அடுத்ததுஎன்ன நடக்கப்போகிறதோ என்று மனக்கவலையையும் ஏற்படுத்துகிறது.

*இந்த கதையை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது அனைவரும் படிக்க வேண்டிய அற்புதம் என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்வேன்!*

அத்தியாயம் 8

கலியன் மதவு நாவலின் எட்டாவது அத்தியாயத்தைப் படித்துத் திக்பிரமை பிடித்தது போல நிற்கிறேன். அப்படியே காவிரி ஆறு கண்முன் ஓடுகிறது. இறந்தவர்களின் உடல்கள், அதை எடுத்து வரும் விதம், பிரச்சனைகள் என்று அந்த கிராமமக்கள் உணர்வு பூர்வமாக மனதில் நடமாடுகின்றர்.கதையை சீக்கிரம் முடித்து விடுவீர்களோ என்று தோன்றுகிறது. அப்படி செய்யாதீர்கள்!           

அத்தியாயம் 9

முத்தனூர் எல்லையில் பிரேதம் மறிக்கப்படுவது, மாதய்யா முத்தனூர் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பிரேதத்தை திருப்பிக்கொண்டு வந்து தனது வயல் வழியாக எடுத்துச் செல்வது, அதைப் பற்றி அந்தனூர் மக்களின் பேச்சுகள் என்று எல்லாமே கண்முன் நிகழ்ச்சியாக உண்மைபோல் ஓடுகிறது.

       அதுபோல வயல்களில் இரண்டாம் பாட்டம் அறுப்பு வேலைகள் நடக்கும் நிகழ்ச்சிகளை படிக்கும்போது, நாமும் அங்கே அந்த பூவரசு களத்திலிருந்து, அதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல் உணரமுடிகிறது. வயல்வெளி அறுவடைக் காட்சியை இவ்வளவு   உயிரோட்டமாக நான் நேரில் கூட உணர்ந்ததில்லை.

        மாதய்யா வண்டியிலிருந்து தடுமாறி கீழே விழுந்து, அவர் காலில்

வண்டிச் சக்கரம் ஏறி இறங்கியதை உணரும்போது, மனதில் ஒரு சோகம் 

கலந்த வலி ஏற்படுகிறது.

        ஐயா, ஜூனியர் தேஜ் சார், நீங்கள் அற்புதம் செய்கிறீர்கள். கலியன் மதவு என்ற தங்களது நாவலின் இந்த 9வதுஅத்தியாயத்தைப் படித்து அசந்துப் போய் நிற்கிறேன்.

அத்தியாயம் 10

நான் இப்போது தொடராகப் படித்துவரும் ஒரே நாவல் *கலியன் மதவு* என்ற ஜூனியர் தேஜின் நாவல் மட்டுமே! இந்த நாவலைப் படிக்கும்போது ஏதோ அறுபது எழுபது காலக்கட்டத்தில் கிராமத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

       மாதய்யா காலில் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு இரண்டரை மாதங்களை கடப்பதைப் பார்க்கும்போது, ஏதோ நமக்கே அடிப்பட்டு கால்கட்டுடன் சிரமப்படுவதைப் போன்ற ஒரு வலி கலந்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் விரிவான சிறப்பான விவரிப்பு.

       கணேசப்பிள்ளை மாதய்யாவைப் பார்க்க வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, ஏதோ நாமே கணேசப்பிள்ளையாகவே மாறி வடைப்பாயசத்துடன் சாப்பிடுவது போல இருக்கிறது.

குந்தலாம்பாள் கை மிஷினில் காப்பிக்கொட்டை அரைக்கும்போது அந்த ஓசையை மட்டுமல்ல; அந்த ஃபீப்ரி காப்பிப்பொடியின் மணத்தையும் உணரமுடிகிறது.

அதுபோல அறுவடை காட்சிகள், குதிர்கள் பத்தாயங்களெல்லாம் கண்முன் வந்துப்போகின்றன.

இந்த நாவலில் இடம்பெறும் படங்கள் அதிஅற்புதமாக இருக்கின்றன. படங்கள் நாவலின் உயிரோட்டத்திற்கு சிறப்பாக உதவி செய்கின்றன.

ஜூனியர் தேஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்கதையை படிப்பவர்கள், ஒரு மறக்கமுடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

அத்தியாயம் 11

  ஜூனியர் தேஜ் சார், 'கலியன் மதவு' என்ற தொடர்கதையை எழுதிவருகிறார். இந்த சமூக தொடர்கதை ஒரு ஐம்பது வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. அவர் கதை சொல்லும் பாணி, மனதில் அப்படியே காட்சிகளாகப் படம்போல ஓடி, நாமும் அந்தந்த இடங்களில் அவர்களுடன் வாழ்வதை போலவே இருக்கிறது.

       இப்போது இந்த நாவலின் 11-வது அத்தியாயத்தை படித்தபோது, ஒரு பள்ளிக்கூடச் சிறுவனாக, அந்த கால திருச்சி நகரத்தில் அலைந்து திரிவதைப்போல இருந்தது. அதுபோல ஒரு அந்தகாலப் பழைய ஓட்டுவீட்டை நானே கிட்டேயிருந்து பழுதுப் பார்ப்பதைப் போன்ற அனுபவமும், காலில் அடிப்பட்டு கைவைத்தியம் பலிக்காமல் டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்ததைப் போன்ற உணர்வும் ஏற்பட்டது. ஏதோ 1960 காலக்கட்ட சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் ஒரு நல்ல சமூகக்கதையை படிப்பதைப்போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. பாராட்டுகள் சார்

அத்தியாயம் 12

'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜின் அழகோவியமான கிராமத்து நாவலின் 12-ம் அத்தியாயத்தை இன்று படித்தேன்.   நான் இப்படி ஒரு தன்னிகரற்ற நாவலை சமீபத்தில் படித்ததில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால், இது ஒரு அழகான கிராமத்து ஓவியம்.  

       இது மர்மநாவல்கள் போல அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்று மனதில் பரபரப்பு ஏற்படுத்தும் நாவல் அல்ல. ஆனாலும் கலியன் மதவு என்ற இந்த நாவலை படிக்க படிக்க நாமும் அவர்களுடன் அந்த சூழ்நிலையிலேயே வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

 

       மாதய்யாவையும் அவர் குடும்பத்தையும் மையமாகக்கொண்டு சுற்றிவரும் இந்த நாவலின் அமைப்பே ஒரு தனியழகு. குந்தலாம்பாளுக்கும் துரைராமனுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகள், ஏதோ நாமும் அந்த வீட்டில் மோகனாவுக்கு அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததை போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

       கிட்டா என்ற கிருஷ்ணசாமியை சந்திக்கும்போது, 'அட, இவனைப் போன்ற எத்தர்களை நம்ம ஊரிலேயே பார்த்திருக்கிறோமே'  என்று தோன்றுகிறது. அதுவும் அவன் மாட்டு தரகில் செய்யும் கில்லாடி வேலைகள் தலையை கிறுகிறுக்க வைக்கிறது. இவனைப் போன்ற எத்தர்களிடம் மாட்டினால் தப்பிப்பது இயலாத காரியம்.

சும்மா சொல்லக்கூடாது, கலியன் மதவு நாவலின் ஒல்வொரு அத்தியாமும் கிராமத்து காற்றாக மனதில் சலசலத்துப் போகிறது. பாராட்டுகள் சார்.

அத்தியாயம் 13

'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் அவர்களின் சமூகநாவலை நான் விரும்பிப் படித்துக் கொண்டிருக்கிறேன். 

      ஒவ்வொரு அத்தியாயமும் உண்மையைப் போல காட்சியாகக் கண் எதிரே ஓடிக்கொண்டிருக்கிறது.

       பூசரக் களத்திற்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கும் இந்த 13-ம் அத்தியாயம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது.

       பூமிநாத உடையாரைப் பற்றியும், அவர் வாழ்ந்த வாழ்வாங்கு வாழ்க்கைப் பற்றியும் படிக்கும்போதே ஒருவித வியப்பும், ஆச்சரியமும் ஏற்படுகிறது.

       அவரது வாழ்க்கையில் நுழைந்த அந்த கருப்பழகி முனியம்மாள் என் முன்னும் நடமாடுகிறாள். அதோடு உடையார் காளவாய்த் தொழிலுக்கு வந்தவிதம், அவரது திறமையான சமயோசிதச் செயலை உணர்த்தி அசர வைக்கிறது. 

     கல்லறுக்கத் தோண்டிய பள்ளம் எப்படித் தாமரைக்குளமாக மாறியது என்ற தகவலும் சுவையாக இருக்கிறது.

      எழுத்தும் ஓவியமும் போட்டிப்போட்டுக்கொண்டு மனதை கவரும் இந்த சமூகநாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு குறிப்பிடதக்க அற்புதமாகும்.

அத்யாயம் 16

இந்த வார 'கலியன் மதவு' நாவல் 'பாவம் புஷ்பா...' என்று ஆரம்பித்து, அந்த காலத்தில் நடந்த 'பால்ய விவாகம்' என்ற கொடுமைகளை நெஞ்சம் பதற வைக்குமளவுக்கு சம்பவம் சம்பவமாகச் சொல்லிக், கண்கலங்க வைத்துவிட்டார் ஜூனியர் தேஜ். என்ன கொடுமையிது என்று மனம் இன்னும்கூட அந்தக் கொடுமைகளை நினைத்துப் பதறுகிறது. அந்தப் பிஞ்சு நெஞ்சங்களின் பரிதவிப்புகள் சோகத்தின் உச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் தனது வாழ்க்கையில் முறியடித்து வந்துவிட்ட குந்தலாம்பாளை பாராட்டமலிருக்க முடியவில்லை.

இதுவரை இந்த நாவலை படிக்காதவர்கள்கூட இந்த 17-ம் அத்தியாயத்தை மட்டும் படித்தாலே போதும். அது அவர்களுக்கு அந்தகால பால்யவிவாகக் கொடுமைகளைப் பற்றி ஆயிரமாயிரம் சோக சம்பவங்கள, கண்களால் பார்த்த ஒரு துயர அனுபவத்தைத் தந்து சிந்திக்க வைக்கும். இது ஒரு மிகசிறப்பான நாவல்.

அத்யாயம் 17

நான் இப்போது தொடர்ந்து விரும்பி ஆர்வத்துடன் படிப்பது 'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் சாரின் சமூகநாவலைதான். இந்த நாவலில் மாதய்யாவே இறந்த பிறகு என் மனதில் ஒரு சோகமும் வெறுமையும் சூழ்ந்துக்கொண்டது. 'இனி நடப்பதற்கு என்னதான் இருக்கு' என்று வருத்தத்துடன் படிக்க ஆரம்பித்தேன். குந்தலாம்பாள் இப்படி ரௌத்திரமாக அதிரடியாய் பேச ஆரம்பிப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அப்படியே கதை கண்முன் காட்சியாக விரிந்து, படிக்கப் படிக்க அந்த நாவலிலே நாமும் கலந்துவிடுகிறோம். உயிரோட்டத்துடன் பல்வேறு மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இந்த நாவல் மிகச் சிறப்பானது. தனித்துவம் மிக்கது.

அத்யாயம் 18

18 வது அத்தியாயத்தில், நிறேவேறாத மாதய்யாவின் கனவுகளை கலியன் துணையோடு, திட்டமிட்டு, நிதானமாகவும், அதே சமயத்தில் வைராக்கியமாகவும் நிறைவேற்றும் குந்தலாம்பாளின்  நிர்வாகத் திறன் வியப்பில் ஆழ்த்துகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் ஓர் அம்சமே குந்தலாம்பாள் என்பது என் கருத்து. வயலில் இறங்கி அறுப்பாட்களோடு அறுப்பறுக்கும் சமத்துவவாதியாக குந்தலாம்பாளை படைத்துள்ள கதாசிரியர் உண்மையிலேயே பெண்ணீயத்தை மதிப்பவராகத்தான் பளிச்சிடுகிறார்.

அத்யாயம் 19

கிராமத்தைப் பற்றிய, விவசாயத்தைப் பற்றிய துரை ராமனின் எதிர்மறை எண்ணங்களையும், ஒரு தவறாம மனிதருடன் இணைந்து, அவன் செய்தும் தவறான செயல்களைப் பார்க்கும்போது சமுதாயத்தில் விரவிக்கிடக்கும் இப்படிப்பட்ட இளைஞர்களை மனம் எண்ணிப் பார்க்கிறது. உண்மையிலேயே மிகச் சிறந்த நாவல் சார் கலியன் மதவு.

கலியன் மதவு நாவல் நிறைவு பெற்றதும் எனக்கு ஒரு முழுமையான பதிவு வேண்டும் சார். இது என்னால் மறக்க முடியாத நாவலாகத் திகழ்கிறது.

ஒரு ஆதங்கம்!   எனக்கொரு வருத்தம் உண்டு.  'கலியன் மதவு' நாவலில் ஒரு அந்தகால கிராமத்தை, அதன் மக்களை, சூழ்நிலைகளை இவ்வளவு இயல்பாக, சிறப்பாக எந்த எழுத்தாளரும் சொல்லமுடியாத அனுபவ அழகுடன் சொல்லும் கதையை யாரும் அதிகம்பேர் படிக்கவில்லையே, தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்படுகிறது சார். இதைப்போன்ற நல்ல இலக்கிய நாவலை படிக்காமல் ஏதேதோ மேலோட்டமாக எப்போதும் சிந்தித்துக் கொண்டும், எழுதிக்கொண்டுமிருப்பது அதிக வருத்தத்தை தருகிறது.

அத்யாயம் 20

கலியன் மதவு சமூக நாவல் உயிரோட்டமாக உண்மையை போலவே செல்கிறது. படிக்கும்போது கதை படிக்கிறோம் என்ற எண்ணமே எழவில்லை. துரைராமன் அந்தனூரில் காளவாய் போடத்திட்டமிடுவதும், அதற்காக வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று அவன் நாடி ஜோதிடம் பார்ப்பதும் அப்படியே கண்முன் நடப்பதுபோல் இருக்கிறது. மிகவும் நுணுக்கமான சிறப்பான படைப்பு. அதன்பிறகு துரைராமன் காளவாய் வேலைகளில் இறங்குவதும், கிட்டய்யா மற்றும் அந்த காளவாய் மேஸ்திரி ஆகியோரிடம் அவர் மாட்டிக்கொண்டு திண்டாட ஆரம்பித்திருப்பதும், மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது. மாதவய்யாவுக்கு இப்படி ஒரு மகனா என்று மனது ஆயாசப்படுகிறது. மனதைத் தொடும் இந்த நாவலுக்கு உயிரோட்டமான சித்திரங்கள் உன்னதமான அழகை தருகிறது. அடுத்த அத்தியாயத்திற்காக நான் அந்தனூரிலேயே காத்திருக்கிறேன்.

அத்யாயம் 21

       கலியன் மதவு நாவலின் 21-ஆம் அத்தியாயத்தைப் படித்து அரண்டு விட்டேன். அப்படியே அந்த 1977-ம் வருட கோரப் புயலை கண்முன் வீச வைத்துக், கலங்கடித்து விட்டீர்கள். கிராமம், கிராமத்து வேலைகள், அதன் பல்வேறு பணியாட்கள் என்று அந்தகால கிராமத்தின் தன்மையை கொஞ்சம்கூட மாறாமல் உணர்த்தியிருத்த விதம் தங்களுடைய அசாத்தியமான எழுத்தாற்றலுக்கு ஒரு உதாரணம்.

புயல், அதன் பாதிப்புகள், அந்தக் காலச் சூழ்நிலை, மனிதர்களின் அல்லல்கள், அவர்களது வாழ்க்கை, மனவெளிப்பாடுகள் என்று எல்லாவற்றையும் படிப்பவர்களின் கண்முன் கொண்டு வந்தவிதம் தங்கள் எழுத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

       உயிரோட்டமான இந்த நாவலை நான் மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன். தங்களுக்கு எனது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்யாயம் 22

‘ஜூனியர் தேஜ்' சார், தங்களது 'கலியன் மதவு' என்ற ஈடு இணையில்லாத சமூக நாவலின் 22-வது அத்தியாயத்தை படித்தேன். தங்களது விரிவான இயல்பான எழுத்து நடை உயிரோவியமாக இடங்களையும், மனிதர்களையும் வழக்கம்போல கண்முன் கொண்டுவந்து காட்டியது.

       மாதவய்யாவின் சம்பாக்காணி மலையும்-மடுவுமாகக் காட்சியளிப்பதை  மனக்கண்ணால் உணரும்போதே, கண்கள் கலங்குகின்றன.

  அந்த எல்லையம்மன் கோவில் திடலில் வாழைத்தார்களை வெட்டிக்கொண்டுவந்து, தரம் பிரித்து லாரிகளில் லோடு ஏற்றுவதை அப்படியே நேரில் பார்ப்பதைப்போல இருக்கிறது. லாரிகள், டிரைவர்கள், கிளீனர்கள் என்று ஆரம்பித்து வாழைப்பயிரிடுவதிலிருந்து, அதை லாரியில் ஏற்றுவது, தரம் பிரிப்பது, விலை பேசுவது என்று ஏராளமான நுணுக்கமான விபரங்கள் அசர வைக்கின்றன. நேரில் பார்த்தாலும் உணரமுடியாத நுணுக்கங்கள் அவை.

  சின்னப்பொண்ணும் அவளது நினைவுகளும் நம்மையும் மாதவய்யா காலத்துக்கே கொண்டு செல்கிறது.

  இந்த நாவல்களுக்கான ஓவியம் கலந்த புகைப்படங்கள் ஒரு புது அழகை தருகின்றன. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கும் இந்த நேரத்தில் நானும் அந்த அந்தனூரிலேயே இருப்பதை போலவே உணருகிறேன்.

அத்யாயம் 23

       'கலியன் மதவு' என்ற தங்களது சிறப்பான சமூக நாவலின் 23-ம் அத்தியாயத்தை படித்தேன். எப்போதும் போல ஏக சிறப்பாக உயிரோட்டமாக இருந்ததால், வழக்கம்போல கதையோடு நானும் ஒன்றிவிட்டேன்.

  கலியன் மாதய்யாவை நெஞ்சுக்குள் மட்டுமின்றி, நெஞ்சுக்கு வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்க ஆரம்பித்திருப்பது, கலியனின் உண்மையான விசுவாசத்தையும், அன்பையும் உணர்த்தியது.

  மாதய்யா காலத்து பொங்கல் கொண்டாட்டங்களை தினைத்துப் பார்ப்பது, மாதய்யாவே மீண்டும் வந்துவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவரது பரந்த மனப்பான்மையையும், அறிவையும், நிர்வாக திறமையையும் அது மேலும் நினைவூட்டியது.

  ஆனால் மாதய்யாவுக்கு நேர்மாறாக இருக்கும் துரைராமன் இனியாவது திருந்தி, சிந்தித்து நடந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது.

  இந்த நாவல்களுடன் ஓவியமும் புகைப்படமும் கலந்த ஒவ்வொரு படங்களும், நாவலுடன் நம்மை மேன்மேலும் ஒன்றை வைக்கிறது. பாராட்டுகள் சார்.

அத்யாயம் 24

நாவலின் 24-வது அத்தியாயத்தை படித்தேன். எப்போதும் போல நாவலின் சிறப்பை உணர்ந்தேன்.

  கலியன் மீது காரணமேயில்லாமல் ஒரு வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டு துரைராமன் அட்வகேட்டை சந்தித்து ஆலோசனைக் கேட்பது, அங்கே நடக்கும் உரையாடல்கள் என்று எல்லாமே மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அந்த வக்கீலின் அலுவலக அறையை விவரித்திருந்த விதம் ஒரு நுணுக்கமான எழுத்து திறனுடன், நம்மையும் துரைராமனுக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பதை போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

  துரைராமனின் மோசமான எண்ணத்தையும், அதை அவன் செயல்படுத்த செய்யும் வேலைகளையும் விரிவாக விளக்கும் இந்த அத்தியாயம் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.

அத்யாயம் 25

'கலியன் மதவு' நாவலின் 25-வது அத்தியாயம் அந்த காலத்து சங்க கால பொங்கலிருந்து, இந்த காலத்து பொங்கல்வரை அந்த கிராம திருவிழாவின் அழகை,சிறப்பை மிக அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. அதைபோல ஜல்லிக்கட்டு, தமிழர்களின் மரபு, காதல், கலியாட்டமென்று எல்லாமே நினைவுக்கு வந்தது.

  கலியன் என்ற நல்ல விசுவாசியான சேவகனுக்கும், கள்ளமும் கபடுமான துரைராமன் என்ற புது எஜமானனுக்கும் நடக்கும் மனப்போராட்டமும் சம்பவங்களும் மிகவும் சிந்திக்க வைத்தது.

  கலியன் மதவு எல்லாவகையிலும் விரிவாகவும் சிறப்பாகவும் தனித்தன்மையுடன் உயர்ந்த நாவலாக மனதில் நிற்கிறது. ஜூனியர் தேஜ் சார், இந்த நாவல் காலாகாலத்துக்கும் தங்கள் பெயரைச் சொல்லும்.

அத்யாயம் 26

ஒரு நாவலோ சிறுகதையோ; கதாபாத்திரங்களுடன் சுற்றுச் சூழல்களும் ஒன்றிணைந்து அவர்களின் உணர்வுகளையும் சரியானபடி வெளிப்படுத்தினால் அது உண்மைப் போல் வாசகனைத் தனக்குள் இழுத்துக் கொள்ளும். ஜூனியர் தேஜின் 'கலியன் மதவு' நாவலின் வெற்றிக்கு இதுதான் காரணம்.

தமிழர் திருநாள் சமயத்தில் கலியன், துரை, குந்தலாம்பாள் ஆகியோருக்கு இடையே நடக்கும் சம்பவங்களும் உரையாடல்களும் நாவலைச் சிறப்பாகக் கொண்டுச் செல்கின்றன.

இந்த நாவலில் கலியன் மட்டும் அந்தக் கிராமத்தில் நடந்து சென்றால் கூட அவனோடு வாசகர்களும் ஒன்றிணைந்துக் கூடவே செல்ல முடியும். அதுதான் அந்த நாவலின் வெற்றியே.

எப்போதும் சொல்வதைத் தான் இப்போதும் சொல்கிறேன் இந்த நாவலுக்கு மேன்மேலும் அழகு சேர்ப்பது இதற்கான ஓவியம் கலந்த புகைப்படங்களே. இதுவும் இந்த நாவலாசிரியரின் ஓவியத் திறமையையும் அதிக அக்கறையையும் உணர்த்துகிறது.

பாராட்டுக்குரிய நாவல்.

அத்யாயம் 27

ஜூனியர் தேஜ் சார், தங்களது கலியன் மதவு நாவலை வழக்கம்போல  ஆர்வத்துடன் விரும்பிப் படித்தேன். இந்த நாவல் முடியப்போகிறது என்பதை நினைக்கும்போதே மனதில் இனம்புரியாத வருத்தம் ஏற்படுகிறது.

       அந்தனூர் அக்ரஹாரத் தெருவில் தனது பூர்விக வீட்டை இன்சினியர் திருநாவுக்கரசு வாங்கியதால் அவர் கிராமத்தில் பேசு பொருளானார். அவர் அந்த வீட்டை வாங்கிய பிறகு வந்துப் பார்த்து குடியேறுவது வரை, அந்த வீடு அந்த காலத்திலிருந்து அந்த கதை நிகழும் இந்த காலம்வரை இருந்த சூழ்நிலையெல்லாம் விவரித்திருக்கும் விதம் அந்த சூழ்நிலையை நம் கண்ணுக்கு முன் கொண்டு வருகிறது. இடமும் சூழ்நிலைகளும் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் மாற்றமடைகின்றன என்பதை மிகச் சிறப்பாக இந்த நாவல் உணர்த்துகிறது.

       கலியன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுடன், அந்த ஊரில் ஏற்படும் மாற்றங்களையும் நினைக்கும்போது மனதில் ஆயிரமாயிரம் என்ன ஓட்டங்கள். அதுவும் அந்த ஊரிலிருந்த செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்தவர்களைப் பற்றியும், அந்த எண்ணெய் வியாபாரத்தைப் பற்றியும் படிக்கும்போதே, நமக்கும் எண்ணெய் வாசனையடிப்பது போலிருக்கிறது.

       ஊர், வீடு, மனிதன் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அதன்தன்மை மாறாமல், மாறியதையும் மாறாததையும் அப்படியே நாவல் உணர்த்துகிறது. தனித்தன்மையுடன் தமிழில் ஒரு குறிப்பிட தகுந்த நாவலாக திகழ்கிறது கலியன் மதவு. இந்த நாவல் புத்தகமாக வெளிவரும்போது இதன் சிறப்பை பலரும் உணர்வார்கள். பாராட்டுகள் சார்.

அத்யாயம் 28

இப்போதுதான் சார் படித்தேன். மனம் அந்தனூரின் அந்த கால சூழலையும் சம்பகோர்வைகளையும் நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தது. மனதில் என்ன என்னவோ நினைவுகள். அந்தனூர் கிராமத்தின் சூழ்நிலை மாற்றங்கள், மறைந்த மனிதர்கள் என்று எவ்வளவோ நினைவுகள் வந்தது.  மாதய்யா, குந்தலாம்பாள் கலியன் போன்ற பாத்திரப்படைப்புகள் மிகவும் உயிரோட்டமானவை.  கலியன் மதவு என்ற நாவலின் பெயர் மிகவும் பொருத்தமாக மனதோடு ஒன்றிப்போகிறது.

   நாவல் பல இடங்களிலும் இந்த இறுதி அத்தியாயமும் மிகவும் விஸ்தாரமாக நீண்டு செல்கிறது.

ஜூனியர் தேஜ் அவர்களின் 'கலியன் மதவு' என்ற சமூகநாவல், அந்தனூர் என்ற கிராமத்தின் கதையை அதன் மண்வாசனையுடன், அதன் மக்கள், அவர்களது குணங்கள், வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே போவது நாமும் அந்த ஊரில் ஒரு வீட்டில் வசித்து வருவதைப்போன்ற, அது ஏதோ நம்ம பூர்விக ஊர் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. மாதையா, குந்தலாம்பாள், கலியன் என்று இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுடன், மற்றைய கதாபாத்திரங்களும் அதனதன் தன்மை மாறாமல் உயிரோட்டத்துடன் உலாவுவது இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சமாகும்.

  கூலித்தொழிலாளியான கலியன் என்பவனின் தியாகவாழ்க்கையை சொல்லும் 'கலியன் மதவு' என்ற இந்த நாவல், வீட்டுத் திண்ணைக்கு மல்லிகை வாசனையுடன் வந்து நம்மை  தொட்டு தவழ்ந்து செல்லும் தென்றல்போல நின்று நிதானித்து செல்கிறது. அதனால் நாமும் இந்த நாவலை படிக்கும்போது, நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்கும் மலரும் நினைவுகள் போல இந்த நாவலை உண்மையாக உணர முடிகிறது.

   இது இந்த நாவலாசிரியரின் முதல் நாவல் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் பல நாவல்களை எழுதிய எழுத்தாளர்களைவிட இந்த முதல் நாவலிலேயே அற்புதங்கள் பல செய்திருக்கிறார்.

  அனுபவித்து உணர வேண்டிய இந்த நாவலில் புகைப்படமும் ஓவியமும் கலந்து இந்த ஆசிரியரே தந்திருக்கும் சித்திரங்கள் இந்த நாவலுக்கு ஒரு மணிமகுடமாகும்.

   தனித்துவம் மிகுந்த தன்னிகரற்ற கலியன் மதவு என்ற இந்த நாவல் புத்தகமாக வெளிவரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த நாவலாசிரியர் ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 சின்னஞ்சிறுகோபு

Comments

  1. *கலியன் மதவு*
    மகத்தான ஒரு வாழ்வின் வரலாறைப் பதிவு செய்து முடித்துள்ளீர்கள்.
    சில அத்தியாயங்களை மட்டுமே படித்தேன்!
    தொடர்ந்து படிக்க சந்தர்ப்பம் அமையவில்லை!

    சின்னஞ்சிறுகோபு சார் அவர்கள் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் எழுதிய விமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்து தனிப் பதிவாக வெளியிட்டதும் சிறப்பிலும் சிறப்பு!

    விரைவில் இந்நவீனம் விகடன் பிரசுரமாக வெளிவரும் என நம்பி(க்கையுடன்) வாழ்த்துகிறேன்!

    -அ.முஹம்மது நிஜாமுத்தீன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. தங்கள் அன்பான விமர்சனத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)