23. தலைக்கு வந்தது (ஒரு பக்கக் கதை)
23. தலைக்கு வந்தது
-ஜூனியர் தேஜ்
(ஆதிரை
– நவம்பர் 5-11, 2021)
ட்ராஃபிக் சிக்னல் கவுண்ட் டவுன்
5..4...3..... வாகனங்கள், டூ வீலர்கள் ஆக்ரோஷமாக உறுமத் துவங்கின.
...2.. முதல் கியரில் சிலர் தயாராக... சிலர் க்ராஸ் செய்து... வேகமெடுத்தனர். பாலனின் அவெஞ்சரும் வேகமெடுத்தது. அடுத்த சிக்னலை நிற்காமல் கடப்பதே அவன் நோக்கம். .....80....90....100...101...102...
வலதுபுறத்தில் ஒரு புல்லட் 110...ல் அவெஞ்சரை அணைத்துக் கடக்க, நிலை தடுமாறிய பாலனின் வலது கை; கார் கதவில் மோத... "ட...பா...ர்.........!!" ... சாய்ந்தது அவெஞ்சர்.
மனித நேயம் முற்றிலும் அழியவில்லை என்பதை நிரூபிக்க; ஒரு நடு வயதுப் பெண்ணும், ஒரு ஆணும் தங்கள் டூவீலர்களை ஓரமாக நிறுத்திவிட்டு உதவிக்கு வந்தனர்.
பாலனின் வலக்கை மணிக்கட்டு , பலூன் போல் வீங்கியது. இடது கால் கட்டை விரல் நகம் பெயர்ந்து ரத்தம் கசிந்தது. தொடையில் எரிச்சலும் வலியும். முழங்கை சிராய்ப்பில் ரத்தம் பிசுபிசுத்தது.. இப்போதைக்கு அவனால் உணர முடிந்தது இதுதான்.
உதவிக்கு வந்தப் பெண் அப்பொழுதுதான் வாங்கிருந்த ஜில்லென்ற புட்டிநீரை ஒரு வாய் விழுங்கச்சொன்னாள். அடிபட்டு வீங்கிய மணிக்கட்டில் மெதுவாக ஊற்றியபடியே அமுக்கி விட்டாள்.
தூக்கி நிறுத்திய அவெஞ்சரில்; முன் சக்கர பிரேக் ஒடிந்து தொங்கியது. பிளாட்பாரம் அருகில் கிடந்தது , வலது ரியர் கண்ணாடி.
பிளாட்ஃபாரத்தின் புருவத்தில் (விளிம்பில்) பலமாய் மோதி; வார் அறுபட்டுச் சிதறி ஓடி பிளாட்பாரத்தில் கிடந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு சமூக ஆர்வலர்.
அது பெரிதாய் வீரல் விட்டிருந்து. 50 வயது மதிக்கத் தக்க ஒருவர்
ஸ்கூட்டி 'பெப்'பை ஓரம் கட்டிவிட்டு மனைவியோடு அருகில் வந்தார்.
ஹெல்மெட்டின் நிலை கண்டு, அந்த அம்மாவின் கண்கள் பணித்தன.
"தம்பீ...! தலைக்கு வந்தது... ஹெல்மெட்டோட போச்சு!"
ஆறுதலாகக் கூறினாள்.
கணவர் பக்கம் திரும்பி.."நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேனே..! என் நச்சரிப்பு தாங்காமயாவது ஹெல்மெட் போட்டுக்கிட்டுப் போயிருந்தா என் மகன் உயிர் பிழைச்சிருப்ருப்பானே...! நான் தான் எப்படியாவது அவனை ஹெல்மெட் போட வெச்சிருக்கணும்…! தப்பு பண்ணிட்டேனே...!"
அந்த மாது வாய்விட்டு அழ . அவள் கணவர் அவரைத் தேற்றினார்.
மணிக்கட்டு வீக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது.
ஹெல்மெட் அணிந்ததே அம்மாவின் நச்சரிப்பால்தான் என்பதை பாலன் உணர்ந்தபோது கண்களில் நீர் பணித்தது.
"ரொம்ப வலிக்குதா?" மணிக்கட்டில் நீர் ஊற்றிக்கொண்டே மெதுவாக அமுக்கிப் பிடித்த அந்தப் பெண் கேட்டபோது அம்மா கேட்பது போல இருந்தது பாலனுக்கு..
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment