அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)
நாவல்
சுருக்கம்
சமையலரும் சரக்கு மாஸ்டருமான, சுந்தரம் - பருவதம் தம்பதியரின் ஒரே
மகள் சாவித்திரி. பள்ளி இறுதிப் பொதுத் தேர்வில், மேலதிகமான மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட
அளவில் சாதித்ததற்காக, மாவட்ட ஆட்சியரின் கைகளால் பரிசுகள் பெற்றாள் சாவித்தி.
திடீரென மாரடைப்பால் சாவித்திரியின் தந்தை சுந்தரம் இறந்துவிட,
தந்தையை இழந்த சாவித்திரியின், வாழ்வின் போக்கே மாற்றமடைகிறது.
அவளுக்குள் கனன்றுக் கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளுக்கு
முன் பிரும்மாண்டமான கேள்ளிக்குறி எழுந்து நிற்க,
தன் பெற்றோரைப் போலவே கேட்டரிங் தொழிலில் ஈடுபடுட முடிவு செய்கிறாள் சாவித்திரி.
அதற்குத் தன்னை தயார் செய்து கொள்ள, கேட்டரிங் கல்லூரியில் சேரவும்
முடிவு செய்கிறாள். கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விண்ணப்பக் கட்டணமாக ரூபாய்
500 தேவைப்பட சரக்கு மாஸ்டர் என்று பிரபலமாக வலம் வந்த சாவித்திரியின் தாய் பருவதம்
கல்யாண பந்தியில் எச்சில் இலை எடுக்கும் வேலைக்குச் செல்லத் தயாராகிறாள் சாவித்திரி.
அடுத்தடுத்துக் கல்விச் செலவுக்கு ஆகுமே என யோசித்து, சாவித்திரியும்
ஒரு கல்யாண பந்தியில் இலை எடுத்துச் சம்பாதிக்க விழைகிறாள்.
அந்த ஊரில் உள்ளப் பிரபலமான வராகப் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாகச்
செயல்பட்டு, எட்டுக்கண் விட்டெறிந்த லக்ஷ்மி நரசிம்மன் காலமான பின், படிப்பறிவும்,
பண்பும் இல்லாத அவர் மகன் சாரங்கன் என்கிற ஒரு திண்ணைத் தூங்கிச் சோம்பேறி, பரம்பரை
ட்ரஸ்டியாக, வந்து உட்கார்ந்துவிடுகிறான்.
பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்திருந்த சாவித்திரியை தன் மகனுக்குத்
திருமணம் செய்து வைக்கக் கோரி, ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி, பருவதத்திடம் ஒப்புதல்
வாங்கிவிடுகிறாள் சாரங்கனின் தாய்.
சாரங்கனும் “தன்னை கல்யாணம் செய்து கொண்டே ஆக வேண்டும்..” என்று சாவித்திரிக்குத்
தொல்லைத் தருகிறான்..
ஏதோவொரு இறுக்கமான மனநிலையில் சாரங்கனுக்குத் தன் மகள் சாவித்திரினை
கல்யாணம் செய்து தருவதாக ஒத்துக் கொண்டுவிட்ட தாய் பருவதம், தன் தவற்றை உணர்ந்து, சாவித்திரியின்
எதிர் காலத்தை மனதில் கொண்டு அவளோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து விடுகிறாள்.
சென்னையில் ஒரு அரசுக் கல்லூரியில் சேர்ந்து, ஆங்கில இலக்கியம்
படித்து முன்னேறுகிறாள் சாவித்திரி. அதோடு கல்லூரி நிர்வாகம் நடத்தும் ஐ ஏ எஸ் கோச்சிங்கில்
சேர்ந்து அதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறாள்.
கிராமத்தில் கருமான் பட்டரை வைத்து நடத்திய ராசய்யாவின் ஒரே மகன்
‘கஜா என்கிற கஜேந்திரன். கஜா, சாவித்திரியை விட ஐந்து ஆண்டுகள் பெரியவன். பள்ளி இறுதி
முடித்தவுடன், ஐ டி ஐ ல் மோட்டார் மெக்கானிக் பிரிவில் டிப்ளமா படித்து முடித்தான்.
தன்னைப் போலத் தன் மகனும் பட்டரை போட்டு உட்கார வேண்டாம் என்றுக்
கருதிய கஜாவின் தந்தை ராசய்யா, ஊரில் தனக்கென்றிருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தை விற்று, அவனை
பி ஈ படிக்க வைத்தார்.
பி ஈ இறுதியாண்டில் நடைபெற்ற கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு,
ஒரு வளர்ந்து வரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தான் கஜா.
‘வலிமையுள்ளவன் வாழ்வான்’.. (Survival of the Fittest) என்ற கார்ப்பரேட்
சித்தாந்தம் ஒத்து வரவில்லை கஜாவிற்கு. ஒரு கட்டத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு,
மீண்டும் கிராமத்துக்கேத் திரும்பினான் கஜா.
தன் தந்தை, கொல்லுப் பட்டரை வைத்திருந்த இடத்தில், ஒரு கார் மெக்கானிக்
ஷாப் தொடங்கித் தொடர்ந்தான்.
சாவித்திரியும் அவள் தாயும், சென்னையில் தங்கள் உழைப்பையே மூலதனமாக்கி
உண்மையாக உழைத்தனர். கடும் உழைப்பால் ஐ ஏ எஸ் தேர்வில் முதல் அமர்விலேயேத் தேறினாள்
சாவித்திரி.
பத்து ஆண்டுகளுக்குப் பின் , மாவட்ட ஆட்சியர் என்ற அந்தஸ்த்தோடு
சொந்த மாவட்டுத்துக்கே வந்தார் சாவித்திரி.
ஆட்சியராய்ப் பதவியேற்றபின், முதல் களப்பயணமாக, தன் தந்தை ஒரு
சில ஆண்டுகள் தற்காலிகமாகப் பொறுப்பேற்றுச் சமையலர் சேவை செய்த வராகப் பெருமாள் கோவிலுக்குத்
தரிசனத்துக்குச் செல்கிறாள்.
+2 முடித்த சாவித்திரியிடம், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மிரட்டல்
விடுத்த சாரங்கன்; அதற்கு இணங்க மறுத்ததும்;
‘அவர்கள் குடியிருந்த கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட வீட்டை,
உடனடியாகக் காலிச் செய்யச் சொல்லி, வற்புறுத்திக் குடைச்சல் கொடுத்ததும்;
உள்ளூரில் இருந்தால் நிம்மதியாய் வாழமுடியாது என்பதை அறிந்து,
வேறு வழியின்றி, மகா பெரியவா கேட்டரிங் உரிமையாளர் கணபதி அய்யா அவர்களின் உதவியுடன்
இரவோடு இரவாகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதும்;
இப்போது டவாலிப் பாதுகாப்போடு, சைரன் வைத்த காரில் மாவட்ட ஆட்சியர் என்ற அந்தஸ்தில் பயணிக்கும் போது, மனதில் நிழற்படமாய் ஓடியது கலெக்டர் சாவித்திரியின் மனதில்.
அந்தச் சோம்பேறிச் சாரங்கன், தன் நிலையில் இருந்து இம்மியும் உயரவில்லை.
அதே நாலுகால் மண்டபத்தில் உட்கார்ந்துப் பட்டைச் சோற்றைத் தின்றபடி, அன்று பார்த்த
அதேத் தோற்றத்தில், வயிறு வளர்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார் மாவட்ட ஆட்சியர் சாவித்திரி.
‘தேடிச் சோறு நிதம் தின்று’ - என்ற பாரதியின் வாக்கு கலெக்டர் சாவித்திரியின் உள்ளத்தில்
பளிச்சிட்டது.
வேத கோஷ்டியினரின் பிரபந்த கோஷத்துடனும், மங்கல வாத்தியங்களின்
முழக்கத்துடனும், பூர்ண கும்ப மரியாதையுடன் ஆலயத்துக்குள் வரவேற்கப்பட்டார் ஆட்சியர்
சாவித்திரி.
வராகப் பெருமாள் தரிசனம் முடித்தபின் ஆட்சியர் அலுவலகம் திரும்புகிறது
கார்.
‘இடம் கொடுத்த ஈஸ்வரன்’
என்று ஊர் வழக்கில், சொல்லப்படும் ‘காசி விஸ்வநாதர் கோவில்’ திருப்பத்தில் திரும்பும்போது
சாவித்திரியின் கண்கள் அனிச்சையாய் அந்த இடத்தை நோக்கின.
பள்ளிப் படிப்பின்போது, ‘ராசையாக் கொல்லுப் பட்டறை’ இருந்த இடத்தில்
“‘ராசையா, கார் மெக்கானிக் ஷாப்” இருப்பதைப் பார்த்தார் கலெக்டர் சாவித்திரி. உரிமை ‘கஜேந்திரன்’, என்றப் பெயர்ப் பலகையைக் கண்டதும் மகிழ்சசியோடு, காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார்.
உள்ளே ஒரு காருக்கு அடியில் மல்லார்ந்து படுத்தபடி ரிப்பேர் செய்து கொண்டிருந்த
கஜா, கலெக்டரின் கார் தன் பட்டரைக்கு முன் நிற்பதைப் பார்த்தான்.
“கார் பிரேக்-டவுனா..?”
கேட்டுக் கொண்டே வந்தவன், சாவித்திரியைக்
கலெக்டரென அறிந்து மகிழ்ந்தான்.
பள்ளிப் பருவத்தில் இந்த கஜாவின் முன் பலமுறை நின்றிருக்கிறாள்
சாவித்திரி. பாடங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை
அவனிடம்தான் கேட்டுத் தெளிவாள். அந்த இனிய நாட்கள் சாவித்திரியின் மனதில் மீள்பார்வையிட்டன.
கஜா சாவித்திரியின் தற்போதைய வளர்ச்சியை படுத்த படுக்கையாய் இருக்கும்
தன் தாயிடம் சொல்லி அறிமுகப் படுத்த, அவள் மிகவும் மகிழ்கிறாள். பூஜையறையிலிருந்து,
திருநீரும், குங்குமமும் எடுத்து வரச் சொல்கிறாள். இருவரும் பூஜையறைக்குச் செல்கின்றனர்.
படிப்புத் தாண்டித் தங்களுக்குள் இருந்த ரசாயனம் பத்தாண்டுகளுக்குப்
பின் வேதி வினை புரிந்தது. காதல் போதையில் கண்கள் கிறங்க, ‘ஸ்வாதி-ஸ்டார் சாவித்திரி..!’
எனக் காதல் போதையில் பூஜையறையில் கீதம் பாடுகிறான் கஜா.
யானையின் துதிக்கையாய் சாவித்திரியின் கழுத்தில் கஜாவின் கை சுற்றிக்கொள்ள,
நம்பிக்கையோடு கார் மெக்கானிக்குடன் வாழ்வைத் தொடங்குகிறாள் கலெக்டர் சாவித்திரி.
***
Comments
Post a Comment