86.கரணம் தப்பினால்...! (குறுங்கதை)

 

86. கரணம் தப்பினால்...! (குறுங்கதை)

                                      -ஜூனியர் தேஜ்

ஆனந்த விகடன் 29.10.2022


சில நேரங்களில்உய்... உய்...’ என விசில் சத்தம் கிளம்பியது.

ஹோ... ஹோ...’வெனக் கத்தினார்கள்.

இவ்வாறாக சர்கஸ் கோமாளியின் கூத்துக்களை ரசித்தனர் ஆடியன்ஸ்.

*****-

     சிங்கத்தின் வாயில் தலை விட்டார் ரிங் மாஸ்டர்.

     அரங்கம் முழுவதும் நாற்காலி முனைக்கு வந்தது.

     அதி அமைதியாய் அதிர்ச்சியுடன் பார்த்தது.

     பார் பிடியை விட்டு, அந்தரத்தில் பல்டி அடித்து, வேறு பார் பிடித்தாள்.

அவள் விட்ட பார் அடுத்தவனுக்குப் பிடியானது.

விடுதலும், விட்டதை விட்டு வேறு ஒன்றைப் பிடிப்பதுமாய் சிறிது நேரம் ஆட்டம் காட்டியபின் பார் விட்டவள், அடுத்தவன் காலைப் பிடித்துக்காண்டும், தலைகீழாய்த் தொங்கியவரின் கைகளைப் பிடித்துக்கொண்டும், என்னென்னவோவெல்லாம் செய்தார்கள்.

இன்னதென்றே பார்வையாளர்களை அனுமானிக்க விடாமல், மின்னல் வேகத்தில், அந்தரத்தில் செய்த சாகஸங்களைக் கண்டுக் கைத்தட்டலும், விசிலுமாக வியந்து ரசித்தார்கள்.

கூண்டுக்குள் மோட்டார்சைக்கிள் விட்டான் மனிதன்.

     யானை சைக்கிள் விட்டது.

     நெருப்பு வளையத்திற்குள் புகுந்து வெளி வந்தது சிறுத்தை.

     கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போனதேத் தெரியவில்லை.

*****-



பார்வையாளர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் கடைசீ சாகச நிகழ்ச்சி.

தேங்காய் உரிக்கும் பாறை இருக்குமே, அதுபோல பாறைக்கு பதிலாக பளபளக்கும் கத்தி செருகப்பட்ட கட்டைகள் நிறைய வந்தன.

பீஷ்மரின் அம்புப் படுக்கைபோல பளபளக்கும் கூரான கத்திகளை நிமிர்த்தி வைத்தார்கள் தரையில்...

மேலே கட்டப்பட்டிருந்தது குறுக்குக் கயிறு.

அந்தக் குறுக்குக் கயிற்றையும், கீழே நிற்கும் கத்திகளையும் மாறி மாறி வண்ண விளக்கொளியால் ஃபோக்கஸ் செய்தார்கள்.

பார்வையாளர்களின் BP யை ஏற்றினார்கள்.

அந்தக் குறுக்குக் கயிற்றில் ஏறி நடக்கப் போகும் ஆள் ஜிலு ஜிலுவென உடுத்துக்காண்டிருந்தான்.,

அவனையும் பல்வேறு கோணங்களில், பல்வேறு நிறங்களில் ஃபோக்கஸ் செய்தார்கள்.

கரணம் தப்பினால் மரணம்...’

சொலவடைக்குச் சாட்சியாக நின்றது காட்சி.

*****-

மேலிருந்து இறங்கியது நூலேணி.

அதில் சடுதியில் ஏறினான்.

கயிற்றில் நின்றான்.

நூலேணி மேலேறிவிட்டது.

அரங்கமே அமைதியில் உரைந்திருந்த்து.

கோலால் ‘பேலன்ஸ் செய்தான்.

அந்தரத்தில் நடந்தான்.

ஓரிருமுறை தடுமாறுவதுபோல் பாவ்லாக் காட்டினான்.

பாவ்லா எனத் தெரியாத பார்வையாளர்கள்அய்யோ...!” என அதிர்ந்தனர்.

கழைஞன் மேல் பாய்ந்த வண்ண வண்ண ஒளிக்கற்றைகளும், பொருத்தமான பின்னணி இசையும், பார்வையாளர்களை நாற்காலி முனைக்குக் கொண்டுவந்தது.

கட்டிய கயிற்றின் மறுமுனையை அடைந்தான் கழைஞன்.

அவனைக் கண்டு வியந்த பார்வையாளர்கள் கைத் தட்டியும், விசிலடித்தும் அரங்கையே அதிரவைத்தார்கள்.

அன்றைய காட்சி நிறைவுக்கு வந்தது.

 *****-

காட்சி முடிந்து வெளியேறினர் பார்வையாளர்கள்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தெருவிளக்குகள் மட்டும், டங்ஸ்டன் இழைப் பழுப்புத் தெரிய ஒளியை லேசாக உமிழ்ந்துகொண்டிருந்தது.

தெருவில் இருபுறமும் வடிகால் அமைக்கப் பறிக்கப்பட்ட பள்ளம்.

பள்ளத்திலிருந்து எடுத்து வீசிய கல்லும் மண்ணும் பிசறியபடி குண்டும் குழியுமாய்க் கிடக்கும் சாலை.

பீத்தல் துணி, சருகுகள், வாழை நார், ரப்பர் இலை தழைகள், தலைமுடி, பிய்ந்த செருப்புகள் என ஆங்காங்கே தரையில் பதிந்துகிடந்தன.

கட்டைவிரலில் மாட்டினால் கவிழ்த்துவிட்டுவிடும்.

*****-

ர்க்கஸ் கூடாரத்திலிருந்து வெளியே போகும்போதே, முன்யோசனையுடன்  செல்போன் டார்ச் போட்டுக்கொண்டார்கள் ஜனங்கள்.

அந்த வெளிச்சம் தனக்கு முன்னே செல்லும் மனிதர்களின் மேல் பட்டு பூதாகாரமான மனித நிழல்களை உருவாக்குமே என்ற சிந்தனைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை.

எல்லோரும் கடந்து சென்றுவிட்டார்கள்.

குப்பையும் கூளமும், குண்டும் குழியுமாக மகா மோகசமாய்க் கிடக்கும் சாலையைப் பார்த்தான்.

‘தட்டுத் தடுமாறித்... தடுக்கி விழுந்து, பல்லு, மொகரை உடையாமல், குழியில் விழுந்துவிட்டாமல் லாகவமாக நடந்து சென்ற ஜனங்களைப் நினைத்து நினைத்து வியந்தான் சற்று நேரம் முன்னே கத்திகளுக்கு மேல் கட்டப்பட்டக்  கயிற்றில் லாகவமாக நடந்து கைதட்டல் பெற்ற அந்தக் கழைஞன்.

************

Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை