கலியன் மதவு -(முற்றும்)- அத்யாயம் 28
கலியன் மதவு (சமூக நாவல்)
-ஜூனியர்
தேஜ்
(இந்தப் பதிவோடு நாவல் நிறைவு பெறுகிறது)
அத்தியாயம் – 29
(ஆனந்த விகடன் – அ-அ-2022)
“...௵ , ..........௴ .......... தேதி .......... திருச்சிராப்பள்ளித் தாலுக்கா, கக்குடி கஸ்பா, அந்தனூர் கன்னி கோவில்
தெருவில் வசிக்கும் லேட் தொப்ளன், விவசாயக்கூலி, அவர்களின் ஒரே மகன் கலியன், விவசாயக்கூலி, வயசு 34, புத்தி சித்தம் கலங்காத மனநிலையில் எழுதிக்
கொடுத்த உயில்.
என் சுய சம்பாத்யத்தை வைத்து, அக்ரஹாரம்
தெரு, லேட் மாதவன் என்கிற மாதய்யா அவர்களின் குமாரர் துரைராமன்,
உத்தியோகம்,மதறாஸ், அவர்களிடம்
.......... வருஷம், துல்லியமான பிரதி பிரயோஜனத்துக்குக்
கிரய சாசனப் பத்திரம் எழுதி, மேற்படி பத்திரம் ..........
சார்- பதிவகத்தில் .......... வருடத்திய .......... என் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு,
மேற்படி கிரய தேதி முதல் என் பேரில் பட்டா, வரி
வகையறாக்களுடன் சர்வ சுதந்திரமாக அனுபவித்து வருகிறேன்.
நெல் கட்டடித்தல், போரடி,
காயவைத்தல், தூற்றுதல், உளுந்தடி,
வாழைத்தார் அடுக்கி ஏற்றல் போன்ற அனைத்து விவசாய வேலைகளுக்காக மேற்படி
காணியில் களம் அமைக்கப்பட்டுள்ளது.
களத்திற்கும், அதனை ஒட்டிய, தாமரைக் குளத்திற்கும் செல்வதற்குப் பிரத்யேகச் சாலையும் போடப்பட்டுள்ளது.
களம், குளம்,
பாலம், மதகு, சாலை அனைத்தும்
உள்ள, மேற்படி சொத்தை ஊர்ப் பொதுவுக்குத் தானமாகச் சமர்ப்பித்து
விடுகிறேன்.
இந்த வசதிகளை, நாளது தேதி
முதல் ஊர் ஜனங்கள் ஆண்டு அனுபவித்துக் கொள்ளும்படி விட்டுவிட்டேன்.
இது ஏகதேச, பாத்தியப்பட்ட
சொத்து;
இந்தக் கிரயச் சொத்தின் பெயரில்
பெந்தகம், போக்கியம், ஜாமீன், ஈடு எதுவும் இல்லை;
மேலும், தஸ்தாவேஜு
வைத்து, யாரிடமும் அடமானமோ, கடனோ,
கோர்ட் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளோ, கிஸ்தி மற்றும்
எந்தவிதமான காசாங்க பாக்கிகளோ, வேறு எந்த விதமான கடன்களோ,
வில்லங்கங்களோ இல்லை என்று எல்லாரும் நம்பும்படிக்கு உறுதி கூறுகிறேன்.
இந்த பூதானத்திற்கு ஆதாரமான
மூல பத்திரங்களையும்,
கிஸ்தி ரசீதுகளையும், வில்லங்கமில்லை
என்பதற்கான EC சான்றிதழும் இத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்கிறேன்.
சொத்து விபரம் - நான்கெல்லை
அந்தனூர் கிராமம் ஊர்ப் பொது
பெரிய வாய்க்கால் கரைக்கு வடக்கு ;
ஊர்ப் பொது எல்லையம்மன் கோவில்
பின்புறம் கிடக்கும் பொதுக் கன்னி வாய்க்காலுக்கு மேற்கு ;
ராஜம்மா தென்னந்தோப்பு, சர்வே எண்..........
க்குத் தெற்கு ;
திருவதிகாரம்பிள்ளை புஞ்சை, சர்வே எண்..........க்குக் கிழக்கு.
மேற்படி நான்கெல்லைக்கு உட்பட்ட
மூன்று ஏக்கர்நிலத்தில், நீளவாக்கில் ஒரு ஏக்கர் பரப்பில் பதினைந்தடி
அகலமுள்ள கப்பிச் சாலையும், முக்கால் ஏக்கர் பரப்பில் தாமரைக்
குளமும், முக்கால் ஏக்கர் விஸ்தீரணத்தில் விவசாயக் களமும் முறையாக
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் நெல் கொள்முதல்
நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக அரை ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அதில் தற்காலிக
கொள்முதல் நிலையமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
களத்திற்கும் பாதைக்கும் ஊர்
ஜனங்கள் நடந்தோ, சைக்கிள், மோட்டார், மாட்டு வண்டி, டிராக்டர், லாரி
போன்ற வேளாண் வாகனங்கள் செல்ல வசதியாக ஊர்ப் பொதுக் கன்னி வாய்க்கால் மீது அரசாங்க
மராமத்துத் துறையிடம் முறையாக அனுமதிப் பெற்று மதகு ஒன்றும் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேற்சொல்லப்பட்ட எல்லாம் இந்த
அந்தனூர் கிராம மக்களின் பொது உபயோகத்திற்கு எழுதி வைத்து; சட்டப்படி
சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்து ஒப்படைத்துள்ளபடியால், இவைகளை ஊர் ஜனங்கள் எந்தவித தடையுமில்லாமல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
**********
எல்லையம்மன் கோவில் முகப்பு வழியாக பிரேதங்கள்
செல்லக்கூடாது என்ற நடைமுறை உள்ளதால், பக்கத்து ஊரான முத்தனூர்ப் பாதையில்தான்
இதுகாரும், நம் ஊர் பிரேதங்களைத் தூக்கிக் செல்கிறோம்.
முத்தனூர் பாதையில் அதிக தூரம்
சுமக்க வேண்டியிருப்பதாலும், அந்தனூருக்கன பிரத்யேகப் பாதை வேண்டும்
என்ற ஆவலாலும் இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்டது.
மேலும் கிராம சேவகராய் இருந்த
லேட் மாதவன் என்கிற மாதய்யா அவர்கள் முன்னிற்று, ஒரு சமயம்
இந்தப் பாதை வழியாக பிரேதம் எடுத்துச் செல்ல அனுமதித்தார் என்பதை இங்கேப் பதிவு செய்கிறேன்.
எனவே இந்த வழியாக பிணம் தூக்கிச்
செல்வதில் அச்சானியமோ, தெய்வக்குற்றமோ ஏதுமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
நான் இறந்த பிறகு இந்தப் பாதை
வழியாகத்தான் என் உடலை எடுத்துச் செல்லவேண்டும் என்பதுவே என் விருப்பம்.
மேற்படி சொத்துக்களில் எந்த
வில்லங்கமும் இல்லாத நிலையில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் இதன் மூலம்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
கலியன்.
சாட்சிகள்
குந்தலாம்பாள்
சுப்பாமணி
திருநாவுக்கரசு
ஏழுமலை
சின்னப்பொண்ணு
இந்த உயிலுடன், சப்ரிஜிஸ்தார் அலுவலகத்தில்
பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உள்ளூர் பஞ்சாயத்து பிரெசிடெண்ட் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.
-*****-
உயிலையும், பதிவுப் பத்திரங்களையும்
படித்துப் பார்த்தான் துரைராமன்.
துரைராமனுக்கு ஆச்சரியமும், அய்யமும்
மாறி மாறி ஏற்பட்டன.
அம்மாவையும் சுப்பாமணி மாமாவையும்
மாறி மாறிப் பார்த்தான்.
கலியனின் கை தன் கழுத்தில்
தொங்கிய தாயத்தை பக்தியோடு ஆதரவாகப் பற்றிகொண்டிருந்தான்.
“சின்னய்யா...
உங்க நிலத்துல நான் இன்னுமே எந்த வகைலயும், சொந்தம்
கொண்டாட மாட்டேன்;
நீங்க உங்க இஷ்டத்துக்கு விற்கவோ, சாகுபடி செய்யவோ,
நான் தடையா இருக்க மாட்டேன்.”
“... ... ... ... ... ... ... ... ...”
பெரியய்யாவோட குறிக்கோள், நம்ம வயல்
வழியா பொதுப்பாதை அமையணும்னுதான்;
அதை நிறைவேத்தத்தான் நான்
கொஞ்சம் எக்குத்தப்பா நடந்துக்கவேண்டியதாப் போச்சு...”
“... ... ... ... ... ... ... ... ...”
*****-
“அம்மா... உங்க கையால
ஒரு கவளம் சோறு போடுங்கம்மா...”
கேட்டான் கலியன்.
கலியனுக்குச் சோறு போட எழுந்தாள்.
சுரீர் என்ற குத்து வலி எடுத்தது
அவளுக்கு.
எழ முடியவில்லை.
தடவி விட்டுக் கொண்டாள்.
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு
குனிந்தாள். துடித்தாள்.
குப்’பென்று உடல் பூராவும் வியர்த்தது.
“அம்மா...
என்னம்மா ஆச்சு...!”
கலியன் பதறினான், கதறினான்.
“கொந்தலா...
என்ன பண்றது சொல்லு...!”
சுப்பாமணி தவித்தார்.
திருநாவின் மோட்டார் காரில்
டாக்டரை அழைக்க ஜீவபுரம் போனான் துரைராமன்.
*****-
“அம்மா...! அம்மா...!!”
வீரன் காளையின் குரல் தொழுவத்திலிருந்து
வித்தியாசமாகக் கேட்டது.
கலியன் ஓடோடிப் போய்ப் பார்த்தான்.
வீரன் கால் பரப்பிக் கொண்டுத்
தாறுமாறாகக் கிடந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டது.
“வீரா...!
என்னடா ஆச்சு உனக்கு...!”
கால்களை இழுத்துச் சீராக்கினான்;
தலையை மடியில் போட்டுக்கொண்டான்;
காளையின் முகவாயைப் பாசத்துடன்
தடவிக் கொடுத்தான் ;
கலியன் குனிந்தபோது அவன் கழுத்திலிருந்த
தாயத்து வீரன் கொம்பில் மாட்டியது.
விகாரமான கனைப்புக் கதறல்
வந்தது , வாய் நுரைக் கக்கியது. வீரன் தலைச் சாய்ந்தது.
அதன் கொம்பில் மாட்டியத் தாயத்தைக்
கழற்றி எடுத்தான்;
கனத்த இதயத்துடன் மௌனமாகக்
கண்ணீர் விட்டான் கலியன்.
-*****—
ஜீவபுரத்திலிருந்து வந்தார் டாக்டர் அருணகிரி.
குந்தலாம்பாளைச் சோதித்தார்.
“இது ரெண்டாவது
அட்டாக்;
அதிர்ச்சியான சமாச்சாரங்கள்
எதுவும் அவரிடம் சொல்லவேண்டாம்...”
டாக்டர் கேட்டுக் கொண்டார்.
விஷயத்தை மறைப்பதில் எல்லோரும்
கவனமாக இருக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப, ஒருவருக்கொருவர்
எச்சரித்துக்கொண்டனர்.
அபாயமான விளைவை ஏற்படுத்திவிடும்
என்பதால், எல்லாரும் பேசி வைத்துக் கொண்டு,வீரன் காளையின்
இறப்பைக் குந்தலாம்பாளிடம் சொல்லவேயில்லை;
வீட்டுக் கொல்லையில் அடக்கம்
செய்தாகிவிட்டது.
படுத்த படுக்கையாய்க் கிடந்தாள்
குந்தலாம்பாள்.
அவ்வப்போது விழிப்பு வரும்போது, பேசமுடியாத இயலாமையில் பலஹீனமான விழிகளால் சுற்றுமுற்றும்
பார்த்தாள்.
பார்வை சுப்பாமணியிடம் நிலைத்தது.
-*****—
இரண்டு பாட்டில் செலைன் ஏறி, மருந்தும் வேலை செய்ய ஆரம்பித்த்தால் லேசாக குரல் வந்தது குந்தலாம்பாளுக்கு.”
“சுப்பாமணி...!”
ஹீன ஸ்வரத்தில் அழைத்தாள்
குந்தலாம்பாள்.
“சொல்லுக்கா...!”
“அந்தப் பச்சை
‘ட்ரங்க் பெட்டி’ய’... என்றாள்
தொண்டை அடைத்தது
“எடுத்துண்டு
வாயேன்..!”
ஜாடை செய்தாள்.
“இப்போ எதுக்குக்கா
அதெல்லாம்...?” என்றார் சுப்பாமணி
இருந்த தெம்பையெல்லாம் ஒன்று
சேர்த்துக் கொண்டு பேசினாள் குந்தலாம்பாள்.
“சொன்னாக் கேளு.
கொண்டுவா.;
அவரோட பால்ய ஸ்நேகிதர் டாக்டர்
அருணகிரி சார் இருக்கச்சே சிலது காட்டணும்.!”
உடல்நிலை அசக்தமாக இருந்ததால், குரல் ஹீனமாக
வந்தது.
“இப்பவே என்னம்மா
அவசரம்...! நான் தான் தினமும் வரேனே... உடம்பு நார்மலானதுக்கு அப்பறம் பாத்துக்கறேனே...!” என்றார் அருணகிரி.
“இப்பவே காட்டணும்னு
தோணறது. தயவு செஞ்சி பாருங்கோளேன்...!”
பேச்சுத் தடுமாறியது.
“சரி,
உங்க இஷ்டம்...!” என்றார் டாக்டர்.
-*****—
பெட்டியைக் குந்தலாம்பாள் பார்வைப் படுவதற்கு
வசதியாக வைத்துத் திறந்தார் சுப்பாமணி. குந்தலாம்பாள் சுட்டிக் காட்டிய பழுப்புக்
உறையை எடுத்தார்.
தன் கையில் வாங்கினாள் குந்தலாம்பாள்.
துரைராமனை அருகில் அழைத்து, அந்தக் கவரை
அவன் கையில் கொடுத்தாள்.
இப்போது டாக்டர் அருணகிரியைப்
பார்த்தாள் குந்தலாம்பாள்.
“டாக்டர் சார்.
உங்க சிநேகிதர் அவருக்குத் தெரிஞ்சவரைக்கும், தன்
ஒரே மகன் துரைக்காகச் செஞ்சது... அவன் கையில் ஒப்படைச்சிட்டேன்..!
”
மூச்சு வாங்கியது அவளுக்கு.
“டாக்டர் சார்...!
நீங்க நிறைய ஒத்தாசை பண்ணியிருக்கேள்...!”
கையெடுத்துக் கும்பிட்டாள்.
மீண்டும் நெஞ்சைப் பிடித்தாள்.
துடித்தாள்.
“இது அடுத்த
அட்டாக். மூணாவது அட்டாக் சுப்பாமணி சார்.”
பரபரவென்று சிகிச்சைகளைச்
செய்தார்
பிராணவாயு சிலிண்டர் வைக்க
வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. கார் டிக்கியில் எதற்கும் இருக்கட்டும்
என்று போட்டுக் கொண்டு வந்ததை அவசரமாகக் கொண்டு வந்து பொறுத்தினார் டாக்டர்.]
“ஒரே நாள்ல
அட்டாக் மேல அட்டாக் வந்து, கண்டிஷன் இப்படி வொர்ஸன் ஆகுமா டாக்டர்..?”
முகத்தில் கவலை அப்பிய நிலையில், சுப்பாமணி
கேட்டார்.
வயசும் ஏறிப் போச்சு. ஏஜ் ரிலேடட்
இஷ்யூஸோட, ‘மெண்டல் ஸ்ட்ரெஸ்’ ஓவரா இருந்தா
இப்படிப் பாதிக்க நிறைய சான்ஸ் இருக்கு.
சிங்கம் போல கம்பீரமாக உலா
வந்துகொண்டிருந்த குந்தலாம்பாளை இப்படி அசக்தமாகப் படுக்கையில் பார்க்கையில் சுப்பாமணிக்கு
வருத்தமாக இருந்தது.
-*****—
‘செடேஷன்’ குந்தலாம்பாளைத் தழுவியிருந்தது.
அம்மா கொடுத்த உறையில் இருந்த
தஸ்தா வேஜூக்களைப் பார்த்தத் துரைராமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சென்னை திருவல்லிக்கேணியில்
ஆறு லட்ச ரூபாய்க்கு துரையின் பெயரில் பழைய கட்டடம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்து, மேலும் மூன்று
லட்சங்கள் செலவு செய்துப் புதுப்பித்துக் கட்டிய வீட்டின் பத்திரங்களை அம்மா மரணப்
படுக்கையில் இருக்கும்போது எடுத்துக் கொடுத்தால்... அதிர்ச்சியாகத்தானே
இருக்கும்...?
சுப்பாமணி மாமாவையும், டாக்டர் அருணகிரியையும்,
வீட்டுப் பத்திரத்தையும், படுத்த படுக்கையாகக்
கிழித்துப் போட்ட நாராய்ப் படுத்துக் கிடக்கும் அம்மாவையும், சொன்ன நேரத்தில் சொன்னபடி குத்தகைப் பத்திரங்களை அனைவரின் எதிரிலும் போகித்
தீயில் பொசுக்கிய கலியனையும், மாறி மாறிப்
பார்த்தான்.
துரைக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாவற்றையும் காதும் காதும்
வைத்தாற் போலச் செய்துவிட்டு , அந்த ரகசியத்தைக் கட்டிக்காத்த டாக்டர்
அருணகிரியின் மீதும், சுப்பாமணி மாமா மீதும் மரியாதை அதிகரித்தது
துரைக்கு.
“தன் பேரில்
சென்னையில் வீடு வாங்கி வைத்திருக்கும் அப்பாவைப் புரிந்துகொள்ளாமல் கடைசீ மூச்சு வரை
அவரோடு இணக்கமில்லாமல், அவரை மதிக்காமல், எடுத்தெரிந்துப் பேசிக்கொண்டு, இருந்துவிட்டோமே...!’
துக்கம் தொண்டையை அடைத்தது.
‘அப்பாவின்
இறுதி விருப்பத்தைக் கூட மதிக்காமல், ஒரு மகனாக அதை நிறைவேற்றாமல்
போனோமே!’
கலங்கியது கழிவிரக்கத்தில்
உள்ளம்.
பிராயச்சித்தமாக, ‘அம்மாவையாவது
காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்!’
எண்ணம் வலுப்பெற்றது துரைராமனுக்கு.
ஞானம் எப்போதுமே காலங் கடந்துதானே
ஜனிக்கிறது.
*****-
“குந்தலாம்பாளுக்கு அவ்வப்போது நினைவு வருவதும், தப்புவதுமாகக் கடந்துகொண்டிருந்தது காலம்.
மருமகள் மோகனா, தேவையான சிசுருஷை செய்தாள்.
செலைனோடு மருந்துகள் கலந்துச் செலுத்துவதும், ஊசி மூலம் ஏற்றுவதுமாக டாக்டர் அருணகிரி ஓய்வு
ஒழிச்சல் இல்லாது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
ஜீவபுரமோ, திருச்சியே
கொண்டு செல்லும் நிலையில் கண்டிஷன் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
கை லெட்டர் கொடுத்து, திருச்சியிலிருந்து
கார்டியாலஜிஸ்ட்டை திருநாவுக்கரசு மூலம் வரழைத்து
ஒரு முறை பார்த்தாகிவிட்டது.
ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான்
பிழைப்பதற்கு வாய்ப்பு என்று இரண்டு டாக்டர்களும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.
-*****—
குந்தலாம்பாள், படுத்தபடுக்கையாகக
ஒடுங்கிக் கிடந்ததால், பொங்கல் பண்டிகையைப் பேருக்குக் கொண்டாடினார்கள்.
இருந்த ஒரே வீரன் காளையும்
போய்ச் சேர்ந்தபிறகு தொழுவம் வெறிச்சோடியிருந்தது.
இருந்தாலும், மாட்டுப்
பொங்கல் நாளில், மாட்டு வண்டியைக் கழுவித் துடைத்து, தொழுவம் அலம்பி விட்டான்.
மாவிலைத், தோரணம் எனப்
பேருக்குக் கட்டி, சாம்பிராணிப் புகைப் போட்டுவிட்டான் கலியன்.
மோகனா, மாக்கோலம்
போட்டு, விளக்கேற்றி வைத்தாள்.
-*****—
மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள்.
காணும் பொங்கல்.
அந்தனூரில் கும்மி, கோலாட்டம்,
பல்வேறு பந்தயங்கள் வைத்தல், பரிசு கொடுத்தல் என்று
ஊரே அமர்க்களப்படும்.
இந்த காணும் பொங்கல் நாளன்று, ‘கலியனின்
‘பூதான விழா’ நடத்தவேண்டும் என்று ஊர் கூடி
முடிவெடுத்தபடி, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
******-
குந்தலாம்பாளின் நிலையில் ஏதும் முன்னேற்றமே
இல்லாத்தால் வீடே சோக மயமாக இருந்தது.
வீட்டுக்கேச் செல்லவில்லை
கலியன்.
“அம்மாவுக்கு
எப்படி இருக்கு டாக்டரய்யா?”
மூச்சுக்கு மூன்று முறை கேட்டுக்
கொண்டேக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.
‘எல்லையம்மா... அம்மாவைக் காப்பாத்து…”
வாய்விட்டு வேண்டிக்கொண்டான் கலியன்.
*****-
கலியனைப் பார்க்கப் பார்க்க துரைராமனுக்கு, அவனை அசிங்கமாக
நடத்திய கடந்த காலங்கள் நினைவுக்கு வர அதற்காக இப்போது குற்ற உணர்வில் மறுகினான்.
அனைத்தையும் விட்டுக்கொடுத்ததோடு, அவனுக்கென்று
பிடிவாதமாய்ப் பெற்ற நிலத்தையும் பஞ்சாயத்துக்குத் தானம் செய்த இந்தக் கலியனை புரிந்து
கொள்ளாமல் அசிக்கப்படுத்தியதற்காகக் கழிவிரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை துரைக்கு.
*****-
ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
திருநாவுக்கரசு தன் மோட்டார் காரை எடுத்துக்கொண்டு திருச்சி
செல்வதும், கலெக்டர்
ஆபீஸ் செல்வதும், தொகுதி எம் எல் ஏ வுக்குத் தகவல் தருவதும்,
கணக்குப் பிள்ளை, முனுசீப், கிராம சேவகர், பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் போன்ற ரெவின்யூ
அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறைகளைப் பகிர்வதுமாக பிஸியாக இருந்தார்.
கலெக்டர், எம் எல் ஏ போன்றோர் வரும் நேரமாகிவிட்டது.
விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின் சுப்பாமணி திருநாவைக் கலெக்டர்
அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.
*****-
“விழாவுக்குப் புறப்படு கலியா!”
சுப்பாமணி கலியனை அழைத்தார்.
“அய்யா...!
நான் அம்மாவைப் பாத்துக்கிட்டு வீட்டுலயே இருக்கேன்யா... நீங்களே இருந்து சின்னய்யாவை வெச்சிக்கிட்டே எல்லாத்தையும் முடிச்சிடுங்கய்யா...!” என்றான் கலியன்.
ஒரு டியூப் லைட் தர்மம் செய்தால்கூட
அதன் ஒளி மறைக்கும் அளவுக்கு உபயதாரர் பெயர் எழுதி விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த
உலகில், கலியன் இப்படிச் சொன்னது துரைராமனுக்கு வியப்பாக இருந்தது.
‘இப்படிப்பட்ட
கலியனையா நான் துரோகி என்றேன்...?;
இப்படிப்பட்ட கலியனை சந்தேகித்தோமே…!;’
மனசுக்குள் மருகினான் துரைராமன்.
‘நீ போ...!”
கலியனைப் பார்த்துக் குந்தலாம்பாள்
ஜாடை காட்டினாள்.
அம்மாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு
விழாப் பந்தலுக்குச் சென்றான் கலியன்.
-*****—
‘கலெக்டர் எப்போ வருவார்...!’
‘பூமிதான விழா’ என்று எழுதப் பட்ட பேனர் தாங்கிய திறந்த வெளி விழாமேடைக்கு முன் ஆர்வமாகக் குழுமியிருந்தனர்
மக்கள்.
“கலேக்டர் வருவாராண்ணே...?”
“வர்ற வழீல சர்ப்ரைஸா கம்பரசம்பேட்டை
வாட்டர் ஹவுஸ் விசிட் பண்றாராம். அதான் லேட் ஆவுது...”
“இதுக்கெல்லாம்
கலக்டராவது வர்றதாவது...?”
“கூட்டம் கூட்டறதுக்காக,
இப்படி மந்திரி வர்றாரு, கலெக்டர் வர்றாருனு எதாவது
சொல்றதுதான். அவங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா...?
கேக்கறேன்.”
“அப்போ கலெக்டர்
வரமாட்டாருன்றியா...?”
“வழக்கமா,
நம்ம ஊர் போட்டி பந்தயத்துக்கெல்லாம் இவ்ளோ பெரிய மேடையும், பிரம்மாண்டமான பந்தலும் போடமாட்டாங்களேண்ணே...!”
“ஆமாமாம்..!”
“கலியனுக்கு
ரொம்ப நல்ல மனசு; இல்லேண்ணே...!”
“கடைத் தேங்காய
எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கற அளவுக்கு நல்ல மனசு...!”
“அதெல்லாம்
சொல்லாதீங்கண்ணே...! பொறம்போக்குல தம்மாந்துண்டு நெலம் கிடந்தாலே,
இருக்கறவன், இல்லாதவன் எல்லாரும், எனக்கு உனக்குனு சுருட்டறதுக்கு, அலையற காலத்துல,
கலியனைப் போல ஒருத்தன் இருக்கறதை பெருமையா நினைங்கண்ணே...!”
இப்படியாக நேர்மறை, எதிர்மறை
விமரிசனங்களும், கேள்விகளும், வியப்புகளும்,
பொறாமைகளும், விஷமப் பேச்சுகளுமாக விழாப் பந்தல்
முன் மக்கள் கூட்டம் கலகலப்பாக இருந்தது.
வெகு தூரத்தில் பெரிய வாய்க்கால்
கரையில், ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர், அலங்கார வளைவுகளிலும்,
மேடையிலும், கலியன் சாலையின் இருபுறம் நடப்பட்ட
ட்யூப் லைட்டுகளுக்கும், சீரியல் செட்டுகளுக்கும், உயிர் கொடுத்தது.
அடிக்கடி மைக் பிடித்து ‘ஹலோ,
மைக் டெஸ்டிங்..., ஹலோ, மைக்
டெஸ்டிங்...”
கத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.
-*****—
கலெக்டர் வருகையை உத்தேசித்து, தாசில்தார்,
ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கணக்கப்பிள்ளை,
பட்டாமணியம், முனுசீப் எல்லோரும் திரண்டிருந்தார்கள்.
தெருவெல்லாம் சுத்தமாகக் கூட்டப்பட்டு, குப்பை அள்ளப்
பட்டு, வட்ட வட்டமாக குளோரின் கோலம் போட்டிருந்தார்கள் துப்புறவுத்
தொழிலாளர்கள்.
முன்னால் வந்தது பாதுகாப்புப்
போலீஸ் பெட்ரோல்
தமிழக அரசின் இலட்சினை பொறித்த அரசாங்க ஜீப் வந்தது.
கலெக்டர் இறங்கினார்.
கலெக்டருக்கு அருகில் யாரும்
நெருங்க முடியாதபடிக்கு வந்தார் டவாலி.
சுட்டினால் சிவக்கும் தோல்.
நல்ல உயரம். நீளமான விரல்கள்.
கண்ணாடியை தங்கப் பிரேமுக்குள்
நுழைத்து அணிந்திருந்தார்.
பதவிக்கான மிடுக்கு பேண்ட்
சூட்டில் மட்டுமல்ல. முகத்தில், கண்களில், நடையிலும் தெரிந்தது.
‘மிடுக்காய்
இரு’ என்ற பாரதியின் வாக்குக்கு உதாரணமாய் இருந்தார் கலெக்டர்.
சுப்பாமணி அவர்முன் பூர்ண
கும்பம் காட்டினார்.
பூர்ண கும்ப கலசத்தில் இருந்தத்
தேங்காயைத் தொட்டு வரவேற்பை ஏற்றுக் கொண்டார்..
பூர்ண கும்ப மரியாதை முடிந்ததும்
யாரோ சுப்பாமணியிடமிருந்து குடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அடுத்தாற்போல் எம் எல் ஏ வந்து
சேர்ந்தார்.
மேடைக்கு அருகே அடைப்புக்
கட்டி ஏற்படுத்தப்பட்ட அறைக்குள் கலெக்டர், எம் எல் ஏ மற்றும் சிறப்பு
விருந்தினருக்கு எளிய விருந்தோம்பல் நடைபெற்றது.
அந்த நேரத்தில் கலியனை வரவழைத்து
கலெக்டருக்கும், எம் எல் ஏ வுக்கும் அறிமுகம் செய்துவைத்தார் சுப்பாமணி.
தமிழக முதல்வர் வாழ்த்து அனுப்பியிருக்காரு. நம்ம தொகுதிக்குச்
சுற்றுப் பயணம் வரும் போது இங்கே வந்து பார்க்கறேன்னு சொல்லியிருக்காரு…”
செய்தியை பகிர்ந்து கொண்டார்
எம் எல் ஏ.
சாப்பிட்டு எழுந்து கை துடைத்துக்
கொண்டதும்,
“ரொம்ப உயர்வான
காரியம் செஞ்சிருக்கீங்க…!”
பாராட்டிய கலெக்டரும், எம் எல் ஏயும்
கலியன் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள்..
‘எல்லாப் புகழும் அய்யா உங்களுக்கே...!’
மனதுக்குள் கூறியபடி தன் கழுத்தில் தொங்கிய தாயத்தை
பக்தியோடு பிடித்துக்கொண்டான் கலியன்.
-*****—
விழாத் தொடங்குவதற்குள் ரெவின்யூ
இன்ஸ்பெக்டர், காவல் அதிகாரி, மருத்துவ அதிகாரி,
சானிடரி அதிகாரி என ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து ஏதோ கேட்டுக்
கேட்டுக் குறிப்பெழுதிக் கொண்டார் கலெக்டர்.
மராமத்துத்துத் துறை அதிகாரி
அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னார்.
பத்திரிகை நிருபர்கள் தங்கள்
வேலையை ஜரூராகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஊழியர்கள்
கோப்பும் கையுமாய் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து பிஸியாகக் காட்டிக்கொண்டார்கள்.
-*****—
குந்தலாம்பாள் கிழித்துப் போட்ட வாழைப் பட்டைப்போல்
அசையாது நினைவற்றுக் கிடந்தாள்.
டாக்டர் அருணகிரி மட்டும்தான்
குந்தலாம்பாள் அருகில் இருந்தார்.
ஊசியின் மூலம் செலுத்தப்பட்ட
மருந்துகளின் விளைவுகளைக் கண்ணும் கருத்துமாய் உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.
பிழைக்காது’ என்று தீர்மானமாய்
தெரிந்தாலும் தொழில் தர்மம் காக்கின்ற வகையில் தேவையான ஊசி மருந்துகளை செலுத்திக்கொண்டே
இருந்தார் டாக்டர்.
‘பல்ஸ் ரேட்’
குறைந்துகொண்டே வந்தது குந்தலாம்பாளுக்கு.
-*****—
கலெக்டருடன் அந்தரங்கமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே, மேடைக்கு
அழைத்துக் கொண்டு வந்தார் சுப்பாமணி.
கலெக்டர், எம் எல் ஏ இருவர் முன் வரைப் படத்தைக் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார் இஞ்சினியர்
திருநாவுக்கரசு.
தன் சகோதரியின் நிலையைச் சொல்லி, விழாவை விரைவில் முடிக்கவேண்டும் என்று கலெக்டரின்
காது கடித்தார் சுப்பாமணி.
-*****—
கலெக்டர், எம் எல் ஏ,
மராமத்துத் துறை அதிகாரி, சுப்பாமணி எல்லோரும்
மேடையேறும்போது, மக்கள்
கைத் தட்டி வாழ்க கோஷம் போட்டு ஆரவாரம் செய்தார்கள்.
கடவுள் வாழ்த்து பாடினார்
ஓதுவார் தட்சிணாமூர்த்தி.
சுருக்கமாக வரவேற்புறை நல்கினார்
பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் குழந்தைசாமி.
அடுத்தபடியாக கலியன் ஊர்பொதுவுக்காக
மதகு கட்டியும், குளம் வெட்டியும், களம் அமைத்தும்,
சாலை போட்டும் தானம் செய்யும் தன் மூன்று ஏக்கர் நிலத்துக்கான அனைத்து
ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.
கலெக்டர் எழுந்து மைக் முன்
நின்று, ஊருக்கு நல்லது செய்த கலியனைப் புகழ்ந்தார்.
வினாபா பாவே அவர்களின் பூதான
இயக்கம் பற்றிக் கோடிட்டுக் காட்டினார்.
“கிராம ராஜ்யம்
பற்றி” சுருங்கச் சொன்னார்.
கலியன் கையால் வாங்கிய ஆவணங்களை
கலெக்டர், எம் எல் ஏ கையில் தர, அவர் உள்ளூர் பஞ்சாயத்துப்
பிரசிடெண்ட் கையில் சமர்ப்பித்தார்.
பத்திரிகையாளர்கள் போட்டோக்கள்
எடுத்தார்கள். தொலைக்காட்சியினர் விழாவை வீடியோ எடுத்தார்கள்.
-*****—
கலியனுக்கு விழா மேடையில் இருப்புக் கொள்ளவில்லை.
நெஞ்சு அழுத்துவதுபோல இருந்தது.
‘அம்மாவுக்கு
எப்படி இருக்கிறதோ!’
நினைத்தபோதே மேலும் நெஞ்சு
அடைத்தது அவனுக்கு.
முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதுப்
போல மேடையில் உட்கார்ந்திருந்தான் கலியன்.
-*****-
‘குந்தலாம்பாள் இறந்துவிட்டாள்!’
இந்தச் செய்தியை அறிவிக்கக்
கிட்டாவய்யா ஓட்டமும் நடையுமாக அவசரமாக வந்தார்.
விழாப் பந்தலை நெருங்க முடியவில்லை
அவரால். அப்படி ஒருக் கூட்டம்.
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உதவியுடன் எப்படியோ மேடையருகே சென்றார்.
சுப்பாமணியை அவசரமாய் அழைத்தார்.
குந்தலாம்பாள் இறந்த செய்தியைக்
காதுகடித்தார்.
செய்தி அறிந்தான் கலியன்.
“அம்..........மா.....................................................................!”
கதறினான்.
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு
சாய்ந்தான் கலியன்.
-*****—
டாக்டர் அருணகிரி உடனடியாக வந்து கலியனைச்
சோதித்தார்.
‘ஹார்ட் ஃபெயிலியர்”
சொல்லி உதடு பிதுக்கினார்.
கலியன் இறந்ததால் மற்ற நிகழ்ச்சிகள்
எல்லாம் ஒத்தி வைக்கப்பட்டன.
சுடுகாட்டுக்குப் பாதையில்லாத
தன் ஊருக்குத் தன் சொந்த நிலத்தில் பாதை போட்டுக் கொடுத்த கலியனின் தியாகத்தைப் பாராட்டியது
மாநில அரசாங்கம் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும்தான்.
மீடியாக்களில் செய்தி வைரலாகப்
பரவியது.
*****-
உறவு எனச் சொல்ல எவருமில்லா ஒண்டிக்கட்டையான
கலியனின் ஊர்வலத்தில் ஊரே உறவாய்ப் பின் தொடர்ந்தது.
தான் தானம் செய்த புதுப் பாதை வழியாக, பஞ்சமுகத்தேரில், முதன் முதலாக்க் கலியனின் பூத உடல் சென்றபோது தூவப்பட்ட மலர்கள் வண்ண வண்ணமாய்
சிலிர்ந்து மலர்ந்து கிடத்தன.
ராஜபாதைப் போல மலர்த் தூவிய
பாதையில் குந்தலாம்பாளின் பூத உடல் தொடர்ந்துச் சென்று மயானத்தை அடைந்தது.
*****-
இரண்டு எரி மேடைகள் இருந்த மயானத்தில் இரண்டாவது
எரிமேடையில் ஏறியது குந்தலாம்பாளின் பூத உடல்.
அடுத்து ஆக
வேண்டிய காரியங்களை நெறிப்படுத்தினார் சுப்பாமணி. அவருக்கு
உதவியாக திருநா எல்லா உதவிகளையும் செய்தார்.
கலெக்டர், எம் எல் ஏ,
மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், ரெவின்யூ அதிகாரிகள்
அனைவர் முன்னிலையிலும் பூதானம் செய்த சமூக சேவகர் கலியனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கொள்ளி வைக்கப் பிள்ளை இல்லாவிட்டால்
என்ன.. ஊர் கூடிக் கொள்ளி வைத்தது.
அரசு மரியாதையோடு கலியனுக்குக்
கொள்ளி வைத்த அடுத்த கணம் தன் தாய்க்குக் கொள்ளி வைத்தான் துரைராமன்.
கலியன் களம், கலியன் குளம்,
கலியன் சாலை, கலியன் மதவு இவைகளையெல்லாம் தன் வாரிசாக
விட்டுப் போனக் கலியனைப் பற்றிக் பாராட்டிப் பேசிக் கொண்டே கலியன் பாதையில் நடந்தார்கள்,
துஷ்டி முடிந்து திரும்பும் கூட்டம்.
*****-
அந்தனூர் மயானத்தில், தாயத்து வடிவில்
மாதய்யாவும்; குந்தலாம்பாளும், கலியனும்
சிதைகளில் வெந்து கொண்டிருந்தனர்.
காவிரிக்கரை, மயானத்தில் இரண்டு சிதைகளில்
மூவர் எரியும் தழல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருக்கும் காவிரி நீரோட்டத்தின்
மேற்பரப்பில் பிரதிபலித்தன.
மயான எரிமேடைகள் உமிழும்
ஜ்வாலைகளை வாங்கி, அலைந்து, அதன் வெம்மை தாளாது, அவசரமாய் கடந்து
வருகையில், படித்துறை அருகே
துருத்திக் கொண்டு நிற்கும் ரிவிட்மெண்ட்டில் மோதிச் சுழலிடும் ஓசை தம்புராச் சுருதிப்
பின்னணிபோல் ஒலித்த்து.
காவிரிப் கரையின், பக்கச் சுவரில்
சாய்ந்துக் கால் நீட்டி அமர்ந்தபடி, நீரினுள் கனன்று எரியும்
தழலையேக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அயிலாண்டத்துக் கிழவி.
கவியத் துவங்கிய இருளுக்கு, அணிலாண்டக்
கிழவியின் ஓங்கி ஒலித்த ஒப்பாரி, மேலும் கனம் சேர்த்தது.
‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு...
கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு...
சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு...
ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ.........
****-
முற்றும்
Comments
Post a Comment