36. வெறியேற்றல் (ஒரு பக்கக் கதை)

36. வெறியேற்றல்

                                      -ஜூனியர் தேஜ்

ஜனவரி (9-12) 2022) ஆதிரை

 ஆங்கில விரிவுரையாளர் பரதன் போர்டிகோவில் உட்கார்ந்து ஆங்கில நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார்.

வாசல் கேட்டுக்கு வெளியே நின்று யாரோ அழைப்பு மணி அடித்தார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்து யாரென பார்வைக்குத் தெரியாததால் “கதவு திறந்துக்கிட்டு உள்ளே வாங்க.. என்று குரல் கொடுத்தான் பரதன்

ஒரு மாணவன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான்.

“யார் நீ..? என்று கண்களாலேயே கேட்டார் பரதன்.

“சார்..நான் அரசுப் பள்ளீல 9 வது படிக்கறேன். என் அண்ணன் காலேஜ்ல உங்க மாணவன் சார். எனக்கு உங்க கிட்டே இங்கிலீஷ் படிக்கணும்னு ஆசையா இருக்கு சார். சொல்லித் தருவீங்களா சார்..?

மாணவனின் ஆர்வத்தையும், நேரடியாக வந்து கேட்ட விதத்தையும் மனதிற்குள் பாராட்டினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது “ உனக்கல்லாம் இங்கிலீஷ் வராது தம்பி..போய் வேற வேலையப் பாரு..? என்று நக்கலாகச் சொன்னார் பரதன்.

காற்றுப் போன பலூன் போல அந்த மாணவனின் முகம் சுருங்க, தலை குனிந்து கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்.

அந்த நேரத்தில் காபியுடன் வந்த பரதனின் மனைவி. “என்னங்க ஆசையாவும் ஆர்வமாயும் ஆங்கிலம் கத்துக்க வந்தவன்கிட்டே இப்படி மூஞ்சீல அடிச்சாமாதிரி சொல்லி அனுப்பிட்டீங்களே இது சரியாங்க..? என்று அங்கலாய்த்தாள்.

இதோ பாரு ரோஹிணி.. பத்து வருஷம் முன் நான் இப்படித்தான் ராமராஜ் சார் கிட்டே போய் ஆசையாக் கேட்டேன். உனக்கெல்லாம் வராது இங்கிலீஷ் னு சொன்னாரு.. இப்படிச் சொல்லிட்டாரேனு ஒரு வைராக்யத்துல கடுமையா உழைச்சிப் படிச்சி இப்போ ஆங்கில விரிவுரையாளரா இருக்கேன். அந்தப் பையனும் என்னை மாதிரி வைராக்யம் வந்து படிக்ககட்டும்னுதான் வெறியேத்தி அனுப்பினேன். என்றார் பரதன்.  

கணவனின் நல்ல எண்ணத்தையும், அவரின் எதிர் மறை அப்ரோச்சையும் நினைத்து மகிழ்ந்தாள் மனைவி.

*********************


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)